இயற்கைக்கு ஏற்ற வாழ்வியலுக்கு மாறுவோம்!

ஐக்கியம் சி.வையாபுரி தனது நேர்காணலில் (இந்து தமிழ் - மார்ச் 20, 2017) ‘குடிநீருக்காகவே கிணறு வெட்டலாம்; எக்காரணம் கொண்டும் கிணறு தோண்டி விவசாயம் செய்யக் கூடாது’ என்று சேதுபதி மன்னர்கள் கட்டுப்பாடு விதித்த வரலாற்றுக் குறிப்பை முன்வைக்கிறார். இது மன்னர்கள் கட்டளை மட்டுமல்ல, மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற சுய பொருளாதாரத்தை முன்வைத்துத் தொண்டாற்றிய ஜே.சி.குமரப்பா தொடர்ந்து வலியுறுத்திய கருத்துமாகும். மின்உற்பத்தியைப் பெருக்கி, கிராமப்புற விவசாயிகள் கிணறுகளில் மின்சார பம்ப்செட்டுகளைப் பயன்படுத்த முதல்வர் காமராசர் திட்டம் போட்டபோது, ‘‘பம்ப்செட் பாசனம் கரும்பு, வாழை, பருத்தி, புகையிலை, உருளைக் கிழங்கு போன்ற வணிகப் பயிர்களின் உற்பத்திக்குப் பயன்படுவது. இவை வணிகத்தை முதன்மையாக்கி, வேளாண்மையைத் தலைகீழாக்கிவிடும்.

எனவே, பம்ப்செட்டுகளுக்கு மாற்றாக, நீர்நிலைகளையும் குளங்களையும் அரசு பெருக்க வேண்டும். அதைக் கொண்டு புஞ்சைப் பயிர்களான சிறு தானியங்கள், தீவனங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகை போன்றவை பெருமளவில் உற்பத்தி செய்யத் திட்டங்கள் தீட்ட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். சி.வையாபுரியின் யோசனை எப்படி எம்.ஜி.ஆரால் ஏற்கப்படாமல் போனதோ, அதுபோல அக்காலத்தில் ஜே.சி.குமரப்பா வலியுறுத்தியதும் எடுபடாமல் போயிற்று. இந்த வினையெல்லாம் சேர்ந்து இன்று மக்கள் தலையில் மொத்தமாய் விடிந்துள்ளது.

நகர வணிகத் தேவைகளுக்கும் தொழிலதிபர்களுக்கும், முதலாளியப் பொருளாதாரத்துக்கும் ஆதரவாகச் செயல்படும் போக்கை அரசும் ஆட்சியாளர்களும் மாற்றிக்கொள்வதும், அபரிமிதமான உற்பத்திக்காக அபரிமிதமாக நிலத்தையும் நீரையும் சுரண்டியவர்கள் இயற்கைக்கு ஏற்றவாறு வாழ்வியலை அமைத்துக்கொள்வதுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு.

- பா.செயப்பிரகாசம் 

எழுத்தாளர், புதுச்சேரி.

இந்து தமிழ் - 22 மார்ச் 2017

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்