பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

பகிர் / Share:

இயற் பெயர்: பா.செயப்பிரகாசம் புனை பெயர்:  சூரியதீபன் தோற்றம்:  7 டிசம்பர் 1941, இராமச்சந்திராபுரம் (விளாத்திகுளம் அருகில்) மறைவு: 23 அ...

இயற் பெயர்: பா.செயப்பிரகாசம்
புனை பெயர்: சூரியதீபன்
தோற்றம்: 7 டிசம்பர் 1941, இராமச்சந்திராபுரம் (விளாத்திகுளம் அருகில்)
மறைவு: 23 அக்டோபர் 2022, விளாத்திகுளம்
உடல் தானம்: 25 அக்டோபர் 2022, தூத்துக்குடி மருத்துவமனை


தமிழ்ச் சிறுகதைகளின் நெடும்பயண வரலாற்றில் கரிசல் பூமியின் பங்கு மகத்தானது. தமிழுக்குப் புது வடிவம் தந்த மகாகவி பாரதியின் ஜீவன் கலந்து கிடக்கும் பூமி அது. எட்டயபுரம் பாரதியில் தொடங்கிய தமிழ்ச் சிறுகதைகளின் செழுப்பம், நெல்லை புதுமைப்பித்தனில் நடந்து, கரிசல் சீமையின் இடைசெவல் கி.ராஜநாராயணனில் நிறைவாகி, இன்றும் வழிந்தோடுகிறது.

கரிசல் இலக்கியம் என்னும் வட்டார மொழி நடையின் முன்னத்தி ஏர் கி.ரா உழுத மண்ணில் பா.செயப்பிரகாசமும் உழுது வெள்ளாமை கண்டார். காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞனின் உண்மையான முகம் கொண்டு இருக்கிறார்.

இன்றைய சமகால உலகறிவு என்பது -
”ஏதேனும் ஒன்றைப் பற்றி முழுமையாக அறிந்திருத்தல்,
எல்லாவற்றைப் பற்றியும் ஏதேனும் அறிந்திருத்தல்”
என்னும் வழியில் அறிவுச் சேகர ஆற்றலாக ஒவ்வொரு படைப்பாளிக்கும் கைவசப்பட வேண்டும். அவ்வாறில்லாத சூழலில், அது அவருடைய போதமையாய் வெளிப்படும்.

பா.செ சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்த போதும், பின்னர் மக்களின் மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன. 

பா.செ ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல அவர் ஒரு தேர்ந்த கவிஞர்‌, கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்‌, பத்திரிகையாளர்‌, சமூக செயற்பாட்டாளர் மற்றும் சக மனிதர்களின் மேல் அன்பும் பரிவும் கொண்ட சிறந்த மனித நேயர், கொடையாளர். அவர் தன் படைப்புகளை வெளியிட்டதோடு நில்லாமல் பல ஆளமைகளை பற்றிய 14 புத்தகங்களை வெளியிடுவதில் முக்கிய பங்காற்றினார்.

தொடக்க வாழ்க்கை: பா.செயப்பிரகாசம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திற்கு அருகிலுள்ள (அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள) இராமச்சந்திராபுரத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் தந்தை பாலசுப்ரமணியம், தாய் வெள்ளையம்மாளுக்கு 7 டிசம்பர் 1941 அன்று பிறந்தார். இவருக்கு ஒரு அண்ணனும் இரு சகோதரிகளும் உண்டு.

இவர் தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் இருந்தவர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் மீது பற்று கொண்டவர். அதனால் பா.செ.வுக்கு  ஜெயப்பிரகாஷ் என பெயர் வைத்தார். பின்னாளில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நினைவாகவும், தமிழ் மொழிப்பற்று காரணமாகவும் பா.செ தன் பெயரை செயப்பிரகாசம் என மாற்றி கொண்டார்.

செயப்பிரகாசம் தன் ஏழு வயதில் தாயை இழந்தார். தன் தாயை பற்றி அவர் கண்ட, அனுபவித்த கதை தான் அவரின் புகழ்பெற்ற 'ஒரு ஜெருசலேம்' சிறுகதை (அதன் இறுதி முடிவு புனைவாக உருவாக்கிச் சேர்த்துக் கொண்டது). தாயின் இறப்பிற்கு பிறகு தனது ஐந்தாம் அகவையில் குடும்பத்தோடு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள தன் தாய் வழிப் பாட்டியின் ஊரான சென்னம்மரெட்டிபட்டிக்கு இடம் பெயர்ந்தார். தன் பாட்டியிடம் வளர்ந்தபோது பெற்ற வாழ்கை அனுபவங்களை கொண்டு 'ஒரு பேரனின் கதைகள்' எழுதினார்.

கல்வி: பா.செயப்பிரகாசம்‌ தம்‌ தொடக்கக்‌ கல்வியை தாம்‌ பிறந்த ஊரான இராமச்சந்திராபுரத்தில்‌ உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்‌ கற்றார். நடுநிலைப் பள்ளிப் படிப்பைத்‌ பாட்டியின்‌ உதவியுடன்‌ தன்‌ தாய்‌ பிறந்த ஊரான சென்னமரெட்டிபட்டியில்‌ 8-ஆம்‌ வகுப்பு வரை படித்தார்‌. எட்டாம் வகுப்பு படிக்கும் வரை பா.செயப்பிரகாசம் தான் பள்ளியின் முதல் மாணவன். 

பின்பு மதுரையில் மீனாட்சி மில்லில் தொழிலாளியாக வேலை செய்த சித்தப்பா வீட்டில் தங்கி, மதுரை உயர்நிலை பள்ளியில் படித்தார்.

இந்தியில் ராஷ்ட்ரபாஷா வரை படித்தார். பள்ளியிறுதி வகுப்பின் போது ராஷ்ட்ரபாஷா தேர்வுக்குத் தயாராகி கொண்டிருந்தபோது, தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமா முற்றிலும் ஒரு தமிழ் மாணவனாக மாறி மத்திமா தேர்வுக்காக தான் பெற்றிருந்த சான்றிதழை கிழித்து போட்டார்.

கல்லூரியில் புகுமுக வகுப்பில் சிறப்புத் தமிழ் எடுத்து படித்தார். இளங்கலை (தமிழ்), முதுகலை பட்டம் (தமிழ்), மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பெற்றார். அவ்வை நடராசன், ஒளவை துரைசாமி, பேராசிரியர் இலக்குவனார், அ.கி.பரந்தாமனார் போன்றோர் இவருடைய ஆசிரியர்களாய் இருந்தனர்.

இந்தி எதிர்ப்பு: மாணவப் பருவத்தில் 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர். அதனால் இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DEFENSE OF INDIA RULES) கைதாகி பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாதங்கள் சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர்.


கல்லூரி நாட்களிலிருந்து சிறந்த பேச்சாளர். பல இலக்கிய மேடைகளிலும், கருத்தரங்குகளிலும், அரசியல் அரங்குகளிலும் இவரது சொற்பொழிவுகள் நிகழ்ந்துள்ளன.

பணி: 1968 முதல் 1971 வரை மதுரை வஃபு வாரியக் கல்லூரியில் விரிவுரையாளர். 1971இல் சேலத்தில் மக்கள் தொடர்பு அலுவலராய் பணியில் சேர்ந்து 1999 வரை தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறைப் பணியாற்றி, இணை இயக்குநராகப் ஓய்வு பெற்றார்.

குடும்பம்: செயப்பிரகாசம் - மணிமேகலைக்கு 4 பிப்ரவரி 1973ல் திருமணமானது. இவர்களது மகன் சூரியதீபன், மகள் சாருலதா ஆவர்.

படைப்புகள்: 'குற்றம்‌' என்ற முதல்‌ சிறுகதை 1971 மே மாதம் தாமரை இதழில் வெளியானது. பள்ளிப்‌ படிப்பில்‌ மனதில்‌ ஆழமாய்த்‌ தைத்த சம்பவம்‌ ஒன்று  இக்கதை மூலம்‌ எழுதப்பட்டது. 'பட்ட மரங்களும் பூப்பூக்கும்' என்ற அவர் முதல் கட்டுரை 'கார்க்கி'யில் வந்தது. 1982ல்‌ முதல்‌ கவிதை  'பாரதி  நடந்த தெரு' 'மனஓசை'யில்‌ வெளிவந்தது.

இலக்கியவாதி என்பதன்‌ அடையாளமாக பா.செயப்‌பிரகாசம்‌ என்ற பெயரிலும் சமூகப்‌ போராளி என்பதன்‌ அடையாளமாக சூரியதீபன்‌ இவர் படைப்புகள் வெளிவந்தன. இளவேனில்‌ நடத்திய 'கார்க்‌கி' இதழில்தான்‌ முதன்‌ முதலில்‌ சூரியதீபன்‌ என்ற பெயரில்‌ இவர் எழுதினார். சூரியதீபன்‌ என்ற பெயரையே இவர் மகனுக்கும் சூட்டி மகிழ்ந்தார்.

பா.செயப்பிரகாசத்தின் 51 ஆண்டு (1971 - 2022) கால படைப்பில் எழுதிய 141 சிறுகதைகள் 14 தொகுதிகளாகவும் மற்றும் 18 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 3 நாவல்கள், 2 மொழி பெயர்ப்பு நூல்கள்,  தொகுப்பாளராய் 15 நூல்கள் வெளிவந்துள்ளன.

பா.செயப்பிரகாசம் அக்டோபர் 2022 மறைவுக்கு முன்பாக கீழ்க்கண்ட மூன்று புத்தகங்கள் வெளியிட முயற்சி மேற்கொண்டிருத்தார்.
  1. மனஓசை கவிதை தொகுப்பு (ஜூன் 2023 வெளியிடப்பட்டது)
  2. உச்சி வெயில் - நாவல் (செப்டம்பர் 2023 வெளியிடப்பட்டது). பா.செ மறைவிற்கு சில நாட்கள் முன்பு எழுதி முடிக்கப்பட்டது இந்நாவல். பா.செ இந்நாவலை திருத்தங்கள் மற்றும் செழுமை செய்யும் முன் மறைந்தார். எனவே இந்நாவல் ஓரு பட்டை தீட்டபடாத வைரமாக பாசெ.வின் கடைசி நாவல் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
  3. வாசிக்காத எழத்து - பா.செ.வின் சிறுகதைகள் தொகுப்பு (பிப்ரவரி 2024 வெளியிடப்பட்டது)
பா.செயப்பிரகாசத்தின் சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுப்புகள், நாவல்கள் & கவிதைகள் பற்றிய முழுமையான பட்டியல் இங்கு காணலாம்.

தாமரை, கணையாழி, கார்க்கி, வானம்பாடி, கண்ணதாசன், தினமணி, புதிய பார்வை, தீராநதி, இந்து தமிழ் திசை, கதைசொல்லி, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், காலச்சுவடு, அம்ருதா, நற்றிணை, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை, நிலவளம், காக்கை சிறகினிலே, உயிர் எழுத்து, கண்ணாமூச்சி, மானுடம், தளம் போன்ற இதழ்களில் இவரது படைப்புக்கள் (கவிதை, கதை, கட்டுரை, உருவகக் கதைகள்) வெளிவந்துள்ளன.

கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

’மனஓசை’ என்ற கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார். 1981 முதல் 1991 வரை வெளியான மனஓசை இதழ், பத்து ஆண்டுகள் தமிழிலக்கிய உலகில் முன் மாதிரிப் பதிவுகளை உருவாக்கியது. ஏற்கனவே இயங்குகிற சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் "கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே" என எதிர்க் கருத்தியலை வைத்து நடை போட்ட இதழ்.

அவரது சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றான 'காடு', மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் இளங்கலைப் பாடத்திற்கான பாடப் புத்தகமாக பரிந்துரைக்கப்பட்டது. இவரது மகன் சிறுக்கதை 12-ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் பக்கம் 197 (2017 பதிப்பு) / 225 (2005 பதிப்பு) இடம் பெற்றுள்ளது. சில பல்கலைக் கழகங்களில் இவரது தொகுதி பாடமாக வைக்கப் பெற்றது.

இவர் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, பிரஞ்சு ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கிலதில் இவர் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டு 'Invitation to Darkness' என்ற கதை தொகுப்பு 2019ல் வெளியிடப்பட்டது. 'Along with the Sun' என்ற ஆங்கில புத்தகத்தில் 'தாலியில் பூச்சுடியவர்கள்' சிறுகதையும், Orion Bird Book என்ற நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்ட “An Anthology of Tamil Stories - Modern Tamil Stories - A Writer’s Workshop" தொகுப்பில் இவரது 'கரிசலின் இருள்கள்' என்ற சிறுகதை மொழியாக்கம் செய்யப் பெற்று இடம் பெற்றுள்ளது.

செயற்பாடுகள்: பா.செ தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி - என்னும் அமைப்பின் செயலாளராக இருந்தார். 2008-ல் ஈழத்தின் மீதான யுத்தம் உச்சத்திலிருந்த வேளையில் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (ஈழம்) எழுதி வெளிவந்த “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் இலங்கையின் இராசதந்திரம்” என்னும் சிறு வெளியீடு பத்தாயிரம் படிகள், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் இவரது முயற்சியில் மறுபதிப்பு செய்து, இலவசமாக தமிழக முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

மு.திருநாவுக்கரசு எழுதி 1985-ல் வெளியான “தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்” என்னும் நூலும் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் மறுபதிப்புச் செய்து, அனைவருக்கும் சென்று சேரும் நோக்கில் ரூ.10 என குறைவு விலையில் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. இந்நூலின் மறுபதிப்பில் உள்ள முன்னுரை இவர் எழுதியது.

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் 2007-ல் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற பேரணியயில் கலந்து கொண்டதால் கைதாகி, பழ.நெடுமாறன், வை.கோ, பெ.மணியரசன், தியாகு ஆகியோருடன் சென்னை ’புழல்’ சிறையிலிருந்தவர்.

2002 ஈழத்தில் ’அமைதி ஒப்பந்த காலம்’ போது 19-22 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ”மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்” பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் - என ’சரிவிகித உணவுக் கலவை போல்’ ஐவர் பங்கேற்ற அந்நிகழ்வில் ஒவ்வொரு நாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர். மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது.

செயப்பிரகாசம் அமெரிக்கா (2013), நோர்வே (2015), பிரான்ஸ் (2018), லண்டன் (2011), ஆஸ்திரேலியா (2012), ஜெர்மனி, இலங்கை (2002, 2018, 2019), சுவிற்சர்லாந்து (2015), சிங்கப்பூர் (1999, 2002), மலேஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

பா.செ.வின் உரைகள், பேட்டிகள் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, புதிய தலைமுறை,  நியூஸ் 18 தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சி, ஆல் இந்திய ரேடியோ பாண்டிச்சேரி, ரேடியோ 3 (நோர்வே), எஸ்.பி.எஸ் ரேடியோ ஆஸ்திரேலியா,  நியூஸிலாந்து ரேடியோ ஆகியவற்றில் ஒளிபரப்பட்டுள்ளன.

ஆய்வுகள்: பல்கலைக்கழகங்களில் பல மாணவர்கள் இவரது படைப்புகளை ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றுள்ளனர். 
  1. பா.ஜெயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் (மனோமணியம் சுந்தரனார் பல்கலைகழகம் - மார்ச் 2007)
  2. பா.செயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும் (2004)
  3. பா.செயப்பிரகாசம் படைப்புகளில் சமூகச் சிந்தனைகள் (சென்னைப் பல்கலைக்கழகம் - ஆகஸ்ட் 2022)
  4. 'ஒரு ஜெருசலேம்' சிறுகதைத் தொகுப்பு காட்டும் சமுதாயம் (மனோமணியம் சுந்தரனார் பல்கலைகழகம் - ஏப்ரல் 2017)
  5. பள்ளிக்கூடம் நாவல் - பன்முகப்பார்வை (திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைகழகம் - மே 2018)
  6. பா.செயப்பிரகாசம் சிறுகதைகளில் சமுதாயம் (மனோமணியம் சுந்தரனார் பல்கலைகழகம் - சனவரி 2024)
மறைவு: பா.செயப்பிரகாசம் தன் 81வது வயதில், 23 அக்டோபர் 2022 அன்று விளாத்திகுளத்தில் காலமானார். தன் மறைவுக்குப் பின் எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்கவேண்டும் என்று உறவினர்களிடமும் நண்பர்களிடமும் முன்னதாகத் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அக்டோபர் 25 அன்று நண்பகல் 12 மணியளவில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன்பின் அவர் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.



பா.செ பற்றிய வலைத்தளங்கள்: www.jeyapirakasam.comwww.suriyadeepan.comவிக்கிபீடியா

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content