இவரை பற்றி இவர்கள்
கி.ராஜநாராயணன்
வானம் பார்த்த பூமியான இந்தக் கரிசல் மன்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் செஞ்சை அடைக்கும். இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதெல்லாம் விட இன்னும் சொல்லாததே அதிகம் இருக்கிறது. பா.செயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரெம்பவும் கவர்ந்தது, அவருடைய கவித்துவ நடை அதைப் பல இடங்களில் படிக்கும் போது ஐயோ நமக்கு இப்படி எழுத வரமாட்டேங்குதே என்று நினைப்பேன்.பேராசிரியர் க.பஞ்சாங்கம்
வல்லிக்கண்ணன்
சிகரம் இதழில் சூரியதீபன் எழுதிய 'நடுத்தர வர்க்கப் பேனா' கட்டுரை முக்கியமானது.
சூரியதீபன் தற்கால உண்மைகளைச் சூடாகவும் அழுத்தமாகவும் குறிப்பிட்டிருக்கிறார், 'நடுத்தர வர்க்கப் பேனா' என்ற கட்டுரையில்.
'மக்களிடமிருந்து மக்களுக்குக் கொடுப்பது என்பது அரசியலுக்கு மட்டுமல்லாமல், கலை இலக்கியத்திற்கும் பொருந்துகிற ஒன்று. மக்களிடமிருந்து விஷயரசம் எடுத்து இலக்கியத்தில் பூசுகிறபோதுதான், அது காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பது சரியாகிறது.
'புதுக் கவிதை எழுதுவதே ஒரு பெரிய சமூக நிகழ்வு ஆகிவிடாது. புதுக் கவிதை எழுத பேனா தொட்டுவிட்டதாலேயே சமூக முன்னோட்டத்திற்கான பணியைச் செய்து விட்டதாக ஒரு பெருமை இன்றைய மத்திய வர்க்க எழுத்தாளர்களிடையே காணப்படுகிறது. வாழ்க்கை நிலைகளில் மாற்றம் கொள்ளாமல் எழுதுவது மட்டுமே தீர்வு கண்டுவிடும் என்று எண்ணினால், அது நடுத்தர வர்க்கக் கனாக்களே.’
எழுதுகிறவர்களைச் சிந்திக்கும்படி தூண்டுகிற இந்தவிதமான எண்ணங்கள் இக்கட்டுரையில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.
பாரதிபாலன்
மக்கள் மொழியில் எழுதுவது என்பதைவிட மக்களின் வாழ்வை மொழியாக்கு என்பதுதான் பா. செயப்பிரகாசத்தின் கலை வேலைப்பாடு. அவரைக் கரிசல் படைப்பாளி என்று தனித்து வகைப்படுத்தினாலும், பேசும் மொழியும் அது வெளிப்படும் தொனியும் வாழ்ந்த வாழ்வையும் சூழலையும் எல்லோருக்குமான மொழியாக்கிவிடு கிறது! இதெல்லாம் பா.செயப்பிரகாசம் போன்ற கலைப் படைப்பாளிகளுக்குத்தான் சாத்தியம். அறியாத வாழ்வை ஆவணங்களில் ஆராய்ந்து ஆயிரம் பக்கங்களில் படைப்பாக்குவது வேறு, அறிந்த வாழ்வை, அனுபவத்தின் வழியாக ஆராய்ந்தறிந்து உணர்த்துவது என்பது வேறு, ‘காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடியது. இப்படியான ஒருபார்வை வாழ்வையும், வாழும் சூழலையும் இணைத்து அதனை அர்த்தப்படுத்திவிடுகிறது. ஒரு நூற்றாண்டின் மனிதர்களும், அவர்களின் வாழ்வும் நிலப்பரப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அதுவும் பா.செயப்பிரகாசம் அவர்களின் மொழியின் வழியாக தெக்கத்தி ஆத்மாக்களின் உயிர் மொழியை உணரமுடிகிறது.
விழி.பா.இதயவேந்தன் (நந்தனார் தெரு புத்தகத்தில்)
எண்பத்தொன்றின் ஆரம்பத்திலிருந்து 'மனஓசை' பத்திரிகையோடு தொடர்பு. தோழர் சூரியதீபனின் எழுத்து வெகுவாய் கவர்ந்தது. ஆசிரியர் பொறுப்பிலிருந்து “மாணவர் சிறப்பிதழ்” என்று ஒரு மனஓசையைக் கொண்டு வந்தேன். அந்தக் கட்டத்தில் தான் வாசகனாய் இருந்த எனக்கு தைரியமாய் பேனாப் பிடிக்க முடிந்தது.
கணேசலிங்கனின் "செவ்வானம்" புத்தகத்தை முதன் முதலில் சூரியதீபன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் கொழுந்து விட்டெறியும் என் நெஞ்சிற்கு முன், என் சனங்களின் கதை என்னில் நிழலாடியது. "சாது மிரண்டால் காடுகொள்ளாது” என்பார்கள். சூரியதீபனின் 'காடு' படித்த பிறகு எனக்கு இன்னும் வேகம் அதிகமானது. கதையைப் படித்து கலங்கியிருக்கிறேன். ஒரு சமயம் வாய்விட்டே அழுதிருக்கிறேன்.
இந்திரா சௌந்தராஜன் (முறிந்த அம்புகள் புத்தகத்தில்)
நான் எழுத்தாளன் ஆனதே ஒரு சிறுகதையால் தான். ஒரு சிற்றிதழில் “இருளுக்கு இழுப்பவர்கள்.' - என்று ஒரு சிறுகதை. பா. ஜெயப்பிரகாசம் என்பவர் எழுதியது. என் அரை டிராயர் பருவத்தில் நான் (1977-78) உணர்ந்து வாசித்த முதல் கதை அது.
முதல் வாசிப்பிலேயே என்னுள் அது மூட்டிய ஆவேசம் சொல்ல முடியாத ஒன்று. வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை அது என்னை உசுப்பிவிட்டது.
அடேயப்பா எழுத்துக்கு இத்தனை சக்தியா? கவர்ச்சியா? என்று கேள்வி கேட்கவிட்டது. நானும் பேனா பிடிக்க ஆரம்பித்தேன்.
இந்த நிமிஷம் வரை அந்த ஜெயப்பிரகாசம் தான் என் எழுத்துலக குரு.
அவரை நான் பார்த்ததுகூட இல்லை, ஆனாலும் அந்த துரோணருக்கு இந்த ஏகலைவன் இந்த நூல் மூலம் என் நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.
எழுத்தால் எல்லாம் ஒன்றும் சாதிக்க முடியாது என்று கூறுபவர்களுக்கு ஒரு வார்த்தை. ஒரு சிறு கதையால் ஒரு எழுத்தாளன் உருவாகியிருக்கிறேன் என்பதே! அது சாதித்த விவரங்களை பட்டியலிட முடியாது. அது சூரிய ஒளி. குறிப்பிட்ட இடத்தில் இந்த பிரபஞ்சத்தில் அது சுடர்விடுவதாகவும் கூற முடியாது. மற்ற முயற்சிகளின் சாதனைகள் வேண்டுமானால் இருளில் ஏற்றிய தீபங்களாய் இனம் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக