மகரந்தமிலாப் பூ கொள்ளுமோ சூல்!

வானும் மண்ணும்
திசையும் ஒளியும் தனதாக்கிட
அலைவதில்லை ஆர்ப்பரிப்பதுமில்லை
ஓரிடத்து வாழும் மரஞ் செடிகொடிகள்;
அவை,
திசையறியாப் பறவைகள்
வன்மமிலாப் பிராணிகள்.

ஓரொருகாலம் ஓரொரு நிறம்
ஒவ்வொரு பொழுதுமொரு லாவகம்
ஓரிடத்துச் சொக்குப்பொடி
ஓரிடத்து முற்றத்துக் கோலப்பொடி
பொங்கும்காலத்தின் புளி
மங்கும்காலத்தின் மாங்காய்
கலையாடும் தாண்டவத்தின் புழுதியில்
எட்டுத்திக்கும் பறக்கின்றன சொற்கள்.

சொற்களின் மயக்குச் சுவையோடு
கைகளில் சுடர்கவி,
ஆகாயநிலா அருகில் கண்சிமிட்டும்
ஒற்றைமீன் போல் !

தலைகீழாய் மூழ்கி முத்தெடுத்து வரும்
எழுத்துப் பிரம்மாக்கள் எவரது
எழுதுகோலும் கேட்கவில்லை
முகிலன் எங்கே?
தூக்கு மரத்துக்கிளை முறிபட்டுச்
சுறுக்குக்கயிறு அறுபடுமோ
எழுவருக்கு?

தவித்த வாய்க்கு எங்கே மடக்கு நீர்?
குடங்கள் தலைபாரமேற்றி
நெடும்பயணம் போகும்
மக்கள்வயிற்றில் புளிகரைக்க
நிலத்தடிமண்ணைக் கரைசலாக்கி
கழனி வாயில் கைவிட்டெடுக்கும் மீத்தேன்,
ஹைட்ரொ கார்பன் வாந்தி ;
கேட்டீரோ ஒரு வார்த்தை,
எழுதினீரோ ஓரெழுத்து?

‘புளித்த மாவில்’ வெளிப்பட்டீர்
கும்பல் கலாச்சாரம் உம் குரல் நெரிக்கையில்
எமக்கும் பரிதவிப்பு, தவிதாயம்;
பதறும் இதயமுள்ள எல்லோரும் ஒன்றாய்.

மகரந்தமில்லாப் பூ கொள்ளுமோ சூல்?

- சூரியதீபன் (21 ஜூன் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்