இருள்‌ என்பது குறைந்த ஒளி - முன்னுரை

பகிர் / Share:

( வெளியீடு: அகரம்‌, மனை எண்‌.1, நிர்மலா நகர்‌, தஞ்சாவூர்‌ - 613007, தொலைபேசி: 04362239289,  விலை : ரூ. 75/- ) இரு ஆண்டுகள்‌ முன்‌ எழுத்தாளர்...

(வெளியீடு: அகரம்‌, மனை எண்‌.1, நிர்மலா நகர்‌, தஞ்சாவூர்‌ - 613007, தொலைபேசி: 04362239289, விலை : ரூ. 75/-)


இரு ஆண்டுகள்‌ முன்‌ எழுத்தாளர்‌ சி.சண்முகசுந்தரம்‌ தஞ்சையில்‌ ஒரு இலக்கிய நிகழ்வுக்கு அழைத்திருந்தார்‌. அந்நிகழ்வில்‌ முத்துப்பேட்டை இரா.மோகன்ராஜன்‌ எனக்கு அறிமுகமானார்‌. அங்கிருந்து அவர்‌ முத்துப்பேட்டை திரும்ப இரண்டு மணிநேரமாகும்‌. அந்நிகழ்விலும்‌ அடுத்த ஆண்டு இலக்கிய நிகழ்வின்போதும்‌ கூட்டம்‌ முடியும் முன்னரே காணாமல்‌ போயிருந்தார்‌.

இப்படியான ஒரு படைப்பாளியை - பல ஆண்டுகள்‌ முன்னரே சந்தித்திருக்க வேண்டுமே. எத்தனை பெரிய இழப்பு இது என கையில்‌ ஏந்தி நிற்கிற சிறுகதைகளின்‌ தொகுப்பு உணர்த்துகிறது.

ஒவ்வொரு படைப்பும்‌ ஓவ்வொரு அதிசயத்தை தனக்குள்‌ சேமித்திருக்கிறது. வாசிக்க வாசிக்க முகிழ்த்து முகிழ்த்து மேலெழுந்து என்‌ வாசிப்பை, கிரகிப்பை விரிவடைய வைத்தது.

அங்கீகரிப்பு காலத்தில்‌ நிகழவேண்டும்‌. ஆடிப்பட்டம்‌ தேடி விதைக்க நாம்‌ போயாக வேண்டும்‌. என்னை எடுத்துக்கோ, எடுத்துக்கோ என கூவிக்கொண்டு விதை வராது. கூவி நம்‌ கைகளில்‌ தாவி உட்கார முயலுகிற விதைகள்‌ நல்விதைகள்‌ அல்ல. சோடை போனவை. நிலவொளி என்ற சிற்றிதழ்ப்‌ பட்டத்தில்‌ அவ்வப்போது இந்த விதை முளைத்து - பளிச்சென வளர்ந்து முகம்‌ காட்டியிருக்கிறது. இதுபோன்ற சிற்றிதழ்கூட - சிற்றிதழை தேடித்தேடி அலைகிறவர்களின்‌ பார்வைக்கு கிடைக்காமல்‌ போயுள்ளதே என்பது அவலம்‌.

இலக்கிய உலகின்‌ பிரபலங்களில்‌ பலரும்‌ இதுபோல்‌ சிற்றிதழ்களில்‌ காலூன்றி வந்தவர்கள்‌. சிற்றிதழ்கள்‌ எனும்‌ கணவாய்‌ வழியே காற்றாய் வீசி சமவெளியாய்‌ உருவானவர்கள்‌ அந்த அளவுக்கு அவர்களது விரல்களுக்குள்‌ எழுதும்‌ திறனும்‌ கட்டுண்டு, பெய்து கொண்டிருந்தது. வணிக இதழ்களுக்கு இடம்‌ மாறியதும்‌, குடிபெயர்வு அவர்களைக்‌ காணாமல்‌ போகவைத்து அவர்கள்‌ இருந்தார்கள்‌; எழுத்துக்கள்‌ இல்லை.

அறியப்பட்ட எழுத்தாளர்கள்‌ இளங்குருத்துக்களைக்‌ கண்டறிந்து வளர்த்துவிடாத தவறுகளை மீண்டும்‌ மீண்டும்‌ செய்கிறார்கள்‌. அதற்கான அக்கறையோ, அக்கறையின்மைக்கான வருத்தமோ இல்லை. அறியப்பட்ட படைப்பாளிகள்‌, புதிய பேனாக்காரர்களுக்கு காது கொடுத்து கைவாகு தந்து, வழிகாட்டி தூக்கிவிட கணிசமான நேரம்‌ ஒதுக்குவதை, கடமையாகக்‌ கொள்வோமாக. ஆனால்‌, எந்த வழிகாட்டுதலுக்கும்‌ திசைப்‌படாமல்‌, தன்னை முந்தி நிறுத்தும்‌ பேராசை கொண்டலையும்‌ சில பிரகிருதிகளும்‌ இருக்கிறார்கள்‌ என்பதைக்‌ குறித்துக்‌ கொள்கிறோம்‌.

கடிதங்கள்‌ கோர்த்து கதை எழுதலாமா? எழுதலாம்‌ என்கிற முன்‌ மாதிரிச்‌ சோதனைகள்‌ பிறமொழிகளிலே எடுத்துக்கொள்ளப்‌பட்டுள்ளன. சிறுகதை என்ற ஆதிவடிவமே - ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு வந்ததாகையால்‌, அதிலான பல்வேறு வடிவச்‌ சோதனைகளும்‌ நம்‌ தாய்மொழிக்குத்‌ தாவியுள்ளன.

கடிதங்களாலான புதுவகை படைப்புக்கள்‌ வரிசையில்‌ மோகன்ராஜ்‌ இருகதைகளைத்‌ தருகிறார்‌. பெயர்‌ அறியா ஒரு பறவை; வண்ணக்‌ கலவையில்‌ விழுந்து எழுநீது வந்ததுபோல்‌ ஜொலிக்கும்‌ ஒரு பறவை. இமயா என்று அதற்கு ஒரு பெயர்‌ கொடுத்து, அந்தப்‌ பறவையுடன்‌ கற்பனையான உரையாடுதலை (காதல்‌ வயமான - பேரன்பு வசமான என்றும்‌ சொல்லலாம்‌) நிகழ்த்துகிற தமிழ்‌ என்ற பிஞ்சு நெஞ்சின்‌ பாடல்‌ இசைக்கப்படுகிறது. பால்ய காலத்தின்‌ ஓவ்வொரு நகர்வும்‌ பறவையிடம்‌ பேசுவது போல்‌ வெளிப்படுத்தப்படுகிறது. கடைசியாய்‌ அது என்ன தமிழுக்கு அப்பா எழுதிய கடிதம்‌? கடிதமா? தன்னைக்‌ கால்‌ பிடித்து இழுத்துச்‌ சுருட்டிய பொருளாரார இழப்புக்களில்‌ மாட்டிக்கொண்ட தந்தை செல்ல மகனிடமிருந்து மட்டுமல்ல, உலககிலிருந்தும்‌ விடைபெற்றுக்‌கொள்ளும்‌ இறுதிக்‌ குறிப்புக்களா? என்னை மன்னிப்பாயா தமிழ்‌ என்று கடைசியாய்‌ கேட்பது என்ன? ரொம்ப ரொம்பப்‌ பூடகமாக வெளிப்படுத்துவதும்‌ கலைப்டடைப்பின்‌ ஒருவகைதான்‌.

பிஞ்சு நெஞ்சங்களின்‌ நினைவோட்டங்களுக்கும்‌, பெற்றோர்‌, குடும்பம்‌, கல்விநிலையம்‌, ஆசிரியர்‌, சமுதாயம்‌ இவைகளின்‌ செயல்களுக்குமான முரண்பாடுகளைச்‌ சித்தரிப்பதில்‌ மோகன்ராஜ்‌ கூடுதல்‌ அக்கறை கொள்கிறார்‌. இறகு விழும்‌ மண்‌, மின்மினியும்‌ சில வண்ணத்துப்‌ பூச்சிகளும்‌ சிட்டு, இமயா, அனாமிகா எனப்‌ பல கதைகள்‌.

குழந்தைமையைச்‌ சிதறடிக்கிற ஆங்கில ஆதிக்கம்‌ பற்றி - நம்‌ பிள்ளைகளை ஆங்கிலப்‌ பண்பாட்டுக்குள்‌ அடக்க முயலுகிற காண்வென்ட்‌ கலாச்சாரம்‌ பற்றி எவ்வளவோ எடுத்தெடுத்துப்‌ பேசிவிட்டோம்‌. ஆனால்‌ இன்னும்‌ இன்னும்‌ குழந்தைமைக்‌ கொலைகள்‌ நடைபெற்றுக்‌ கொண்டேயிருக்கின்றன. தம்‌ செல்லங்களின்‌ குழந்தைத்தனம்‌ கொலையாக பெற்றோர்களும்‌ களிப்போடு அனுமதித்துக்‌ கொண்டேயிருக்கிறார்கள்‌. தண்ணீர்‌ வேண்டும்‌ என்று சொல்லக்கூடாது; அது தப்பு, வாட்டர்‌ என்று சொல்லவேண்டும்‌. வகுப்பில்‌ அப்படித்தான்‌ கேட்க வேண்டுமென்று அம்மா சொல்லியனுப்புகிறாள்‌. இனிமேல்‌ அம்மான்னு எல்லாம்‌ கூப்பிடக்கூடாது. மம்மின்னுதான்‌ கூப்பிடனும்‌. அதையும்‌ அம்மாதான்‌ கண்டிப்பாகச்‌ சொல்கிறாள்‌. வணிக வியாபாரம்‌ நடக்கிறது. செய்கிறவர்கள்‌ குழந்தைப்‌ பலி கேட்கிறார்கள்‌. சிட்டு இதுபோல்‌ இவர்களுக்குக்‌ கொடுக்கப்பட்ட குழந்தைப்‌ பலி அனு என்ற அனாமிகா - ஒரு குளோனிங்‌ குழந்தை. மற்ற குழந்தைகளுக்கும்‌ அனுவுக்கும்‌ நிறைய வேறுபாடு உண்டு. அனு இயற்கைக்கு மாறான படைப்பு; மறுப்பான படைப்பு. மருத்துவம்‌ அனுவை மனித வாசனையே அண்டாத கட்டிடத்தில்‌ ஆய்வுக்கூடத்தில்‌ அடைத்து வளர்க்கிறார்‌.

குளோனிங்‌. பிரதியாக்கக்‌ குழந்தைகளோட குண வித்தியாசங்களை நிறம்‌ பிரிக்கவும்‌, அடையாளப்படுத்தி வரையறுக்கவும்தான்‌ இந்த ஆய்வு. அனு ஏன்‌ முக்கியம்னு இனி நான்‌ சொல்ல வேண்டியதில்லையல்லவா?

மருத்துவர்‌ விளக்குகிறார்‌. கண்ணாடித்‌ தொட்டிக்குள்‌ வளர்க்கப்படும்‌ போன்சாய்‌ செடி அது. அந்தச்‌ செடி தொட்டியின்‌ சிறு வெடிப்பில்‌ கசிந்த ஒளியைப்‌ பிடித்து, மேலே வளர்ந்து, சுய சந்திப்பில்‌ அய்க்கியமாகிறது. குளோனிங்‌ - சுயமாகச்‌ சிந்திக்கலாமா? அது வரைந்த ஓவியங்களும்‌, அதன்‌ காட்சிகளும்‌ மூடிவைக்கப்பட்ட அறைக்குள்‌ எந்தப்புற உலகிலிருந்து கிடைத்தன? சுயம்‌ அடக்கப்பட்ட அனு கொஞ்சம்‌ கொஞ்சமாய்‌ விரிந்து வார்த்தைகள்‌ ஓங்கரித்து அம்மா, அம்மா என்று விசும்பி, அலறலாய்‌ கதறலாய்‌, கதவு, சன்னல்‌ தாண்டி ஆகாயம்‌ நிறைத்து திடுமென அதிர்ந்து பின்‌ பெருகிற்று.

சோதனைக்காகக்கூட, சிலவற்றைச்‌ செய்யக்கூடாது என்பதை இப்படைப்பு உணர்த்துகிறது. தனது புலனடக்கத்தைச்‌ சோதனை செய்ய ஒரு - இளநங்கையுடன்‌ இரவு முழுதும்‌ நிர்வாணமாய்‌ இருந்து காந்தி செய்து பார்த்த 'சத்திய சோதனை' தான்‌ இது. எவரும்‌ தொடாததொரு கதைப்பொருளை எடுத்து, மிக நுட்பமான அறிவியல்‌ மொழியாய்‌ அதனைக்‌ கையாளுகிற மோகன்ராஜ்‌, நம்‌ புருவங்களை அவரை நோக்கி உயர்த்தச்‌ செய்துவிடுகிறார்‌.

கடித வகையிலான, குறிக்கப்படவேண்டிய இன்னொரு கதை - இராவணதேசம்‌. இனி அது இராவணதேசம்‌ அல்ல. இராசபக்க்ஷேக்களின்‌ தேசம்‌. இராவணன்‌ யார்‌ என்பதைத்‌ தெரிந்து கொண்டார்‌. தமிழ்ப்‌ பாரம்பரியத்தில்‌ வந்து ஆரிய ராமனை எதிர்த்துப்‌ போரிட்டவன்‌ என்ற புரிதல்‌ கொண்டால்‌, இந்த தலைப்பின்‌ அர்த்தத்தில்‌ பயன்படுத்தியிருக்கமாட்டோம்‌. சில சொல்லாடல்களை, உண்மை அறிந்து, பொருள் தெரிந்து பயன்படுத்துவோமாக. ஆரியக்‌ கலாச்சார, ஆதிக்கத்தை இன்னும்‌ ஊன்றி நிற்திறவர்களே இராவண வதம்‌ என ராம லீலா - என கொண்டாடுவார்கள்‌.

விடுதலை இயக்கத்தில்‌ தன்னை இணைத்துக்கொண்ட பெண்‌ போராளியின்‌ கதை. முத்துப்பேட்டையில்‌ வாழுகிற கோமதிக்கும்‌, சாவகச்சேரி, மாங்குளம்‌, பரந்தன்‌, 9ஏ-வன்னி நெடுஞ்சாலை, வவுனியா என்று ஒரு லெக்கு (இடம்‌) என்றில்லாமல்‌ பெயர்ந்து, பெயர்ந்து போராடிப்‌, போராடி போய்க்‌ கொண்டிருக்கிற ஊர்மிளை என்ற போராளிக்கும்‌ இடையிலான கடித உரையாடல்‌ கதையாய்‌ விரிகிறது.

விடுதலைப்‌ போருக்கு மக்களை அணியமாகும்படி ஆயிரக் கணக்கில்‌ அணிதிரட்டிய கவிதைகள்‌. ஊர்மிளையின்‌ வாழ்வினூடாகவே கூட்டம்‌ கூட்டமாக வருகின்றன. இனபேதம்‌, அடக்குமுறை, இன்னார்‌ இவர் யார்‌ என வேறுபாடில்லாத மனிதச்‌ சிதைப்பு, போராளி, போர்க்களம்‌ என நிலைமைகளின்‌ படிப்படியான தன்மைக்குப்‌ பொருத்தமாய்‌ கவிதைகளை தொகுத்துத்‌ தந்திருக்கிற முறைமை வெகுவாகக்‌ கவருகிறது. கோமதி, ஊர்மிளை இருவரும்‌ கவிதைகளால்‌ வாழ்பவர்கள்‌. ஊர்மிளை போர்க்கள இலக்கியமாகவே வாழ்கிறாள்‌.

மகன்‌ விமலனை டாக்டராக்க வேண்டுமென்பது அம்மாவின்‌ கனவு. ஈழத்தில்‌ வாழ்பவர்களுக்கு இப்படியொரு கனவு உண்டாகலாமா? தகாத கனவு. இந்தியாவுக்கு கரை தாண்டி விட்டால்‌ போதும்‌. நல்லூர்க்‌ கந்தையன்‌ அருளில்‌, அவனுடைய டாக்டர்‌ லட்சியத்தை யாராலும்‌ ஓன்றும்‌ செய்ய ஏலா. அம்மா மட்டுமல்ல; விமலனுமே நினைக்கிறான்‌. எண்டாலும்‌ கரை கண்ணுக்கு எட்டிய மட்டும்‌ மறைஞ்சிதான்‌ கெடக்குது? சிங்கள இராணுவ வெறியாட்டத்தில்‌ அவனுடைய மாமாவும்‌, மாமா குடும்பமும்‌, அவனுடைய மனதில்‌ வாழும்‌ ஆனந்தியும்‌ நசுங்கிச்‌ சப்பழிய, அவனுடைய டாக்டர்‌ கனவும்‌ நொறுங்கிப்போகிறது; தூரத்தில்‌ லாந்தர்‌ எரிய, இந்தியாவுக்கு கடத்திப்‌ போக தோணி வருகிறது; கரையில்‌ தோணிக்காக நின்றவன்‌ திரும்புகிறான்‌, டாக்டராகவில்லை. போராளியாகிறான்‌.

இருள்‌ என்பது குறைந்த ஒளி - என்பது இக்கதையின்‌ தலைப்பு. இருளே வழிநடத்தும்‌ ஒளியாக உள்ளது என்ற வித்தியாசமான பொருளைத்‌ தனக்குள்‌ அடக்கியிருக்கிறது. இந்தக்‌ கதை மட்டுமல்ல, இராவண தேசம்‌, சிறுகதை, இறகு விழும்‌ மண்‌ என்ற கதைகள்‌ ஈழதேசம்‌ பற்றிய படைப்புக்கள்‌. இந்த அனைத்தும்‌ ஈழத்‌ தமிழ்‌ மொழியிலேயே நடத்தப்படுகிறது. ஈழ மண்ணில்‌ கால்‌ பதித்து வந்தவரும்‌ இல்லை; ஈழத்தில்‌ வாழ்ந்தவரும்‌ இல்லை. ஈழத்தமிழர்‌ போலவே, பிரதேச மொழியைக்‌ கையாண்டிருப்பது ஆச்சரியம்‌ தருகிறது. முத்துப்பேட்டை, கோடிக்கரை எல்லாமும்‌ ஈழமக்களின்‌ அடைக்கலக்‌ கூடுகள்‌. போராளிகளும்‌, அகதிகளுமாய்‌ அங்கேயே தங்கியிருந்த மக்களுடன்‌ மக்களாய்‌ தன்னைக்‌ கரைத்துக்‌ கொண்டதும்‌, போராளிகளுள்‌ தன்னை இணைத்துக்‌ கொண்டதும்‌, அந்த மொழி லாவகமாய்க்‌ கையனையக்‌ காரணமாகலாம்‌. மொழி போலவே, கதைகளின்‌ கருக்களும்‌ அங்கிருந்தே கிடைத்திருக்கின்றன.

பள்ளிக்கூடம்‌ போகிறபோதே காணாமல்‌ போகிறார்கள். பள்ளிக்கூடத்திலிருந்தும்‌ காணாமல்‌ போகிறார்கள்‌. போராளியாக குழந்தைப்‌ போராளிகள்‌ பற்றிய மற்றொரு கதை.

மாஸ்றர்‌, நான்‌ ஒங்களுக்குச்‌ சொல்றதா எண்ணக்கூடாது. எண்டாலும்‌ மாஸ்றர்‌ நாங்களும்‌ கொஞ்சம்‌ யோசிக்க வேணும்‌. விதி, தலைவிதி யெண்டு ஒண்டுமில்லதானே.... இண்டைக்கு எங்கட மக்கள்‌ மேலே எதிரியானவன்‌ ஒரு முற்று முழுதான யுத்தத்தை திணிச்சு இருக்கான்‌. சண்டை நிறுத்தமென்பதெல்லாம்‌ வெறும்‌ கண்துடைப்பு. அவைகள்‌ (அவர்கள்‌) தம்மை போருக்குத்‌ தயார்‌ செய்யப்‌ போடுற நாடகம்‌. இதிலை தெரிஞ்சோ, தெரியாமலோ நாங்கள்‌ எங்கட ஆட்கள ஒவ்வொருத்தரையா பலிகொடுத்துக்‌ கொண்டிருக்கிறம்‌. இந்தச்‌ சமயத்தில எங்களக்கு என்ன எண்டு கிடந்தா, எங்கட மக்கள்‌ கதி? இனியெங்கட மக்கள்‌ அவையிண்ட தலைமுறையெண்டு கதைக்க ஆட்கள்‌ ஏதும்‌ காணாது போய்விடும்‌ மாஸ்றர்‌.

மாணவப்‌ போராளியாகிவிட்ட குமரன்‌ கதைக்கிறான்‌. அஞ்சு வயசிலை ஆமிக்காரன்‌ துண்டிச்ச கைவிரல்களோடும்‌, இரும்புத்‌ தகடு பொருத்திய கால்களோடும்‌ கெந்திக்‌ கெந்தி நடந்த குமரன்‌ சொல்வான்‌ மாஸ்றர்‌, கேளுங்கோ. ஆமிக்காரன்‌ ஊனமாக்கிப்‌ போட்டுப்‌ போனானெண்டு மூலையிலை முடங்கியா போயிட்டன்‌. இல்லை மாஸ்றர்‌. எண்ட அந்த வயசிலை நான்‌ யாருக்கு எதிரியா கிடந்திருக்க ஏலும்‌, கொல்லுங்கோவன்‌.

அறம்‌, தர்மம்‌, நியாயக்‌ கோட்பாடுகள்‌ பேசுகிற எவரிடமும்‌ இந்தக்‌ கேள்விக்குப்‌ பதிலுண்டா?

இன்னொரு முக்கியமான கேள்வி மாஸ்றருக்கு இருக்கிறது. அது கிடக்குது குமரன்‌ - அண்டைக்கு உம்முடைய சகோதரனை சுட்டுப்போட்ட ஆட்கள்கூட நீரும்‌ கிளம்பிப்‌ போனீறாரேமே?

குமரனுக்கு செல்லடி காயத்தில்‌ சயனைட்‌ வெச்சதுபோல்‌ கிடந்தது. எது மாஸ்றர்‌? அவன்‌ துரோக இயக்கத்திலை இருந்து எங்கட இனத்துக்கும்‌ மக்களுக்கும்‌ துரோகஞ்‌ செய்தவை. மற்றது, எமது இயக்க ஆட்கள்‌ முதுகிலயும்‌ குத்தினவை. ஆகையால்‌ எமது மக்களின்‌ விருப்பப்படியே தண்டனை குடுக்க வேண்டியதாகிப்‌ போச்சுது.

மாஸ்றரின்‌ அந்தக்‌ கேள்வி அவரது கேள்வி மட்டுமல்ல; விடுதலையை நேசிக்கிற நம்முடைய கேள்விகளும்தான்‌.

சகல இயக்கங்களும்‌ இணைந்து ஒரு பெரிய வேலைத்‌ திட்டத்தின்‌ அடிப்படையில்‌ ஒரு பொதுத்‌ தலைமையை உருவாக்குவதன்‌ மூலம்‌ எதிர்நோக்கும்‌ பிரச்னைகளைத்‌ தீர்க்கலாம்‌. 

(மு.திருநாவுக்கரசு, ஈழ அரசியல்‌, வரலாற்று ஆய்வாளர்‌ - நூல்‌: இந்தியாவும்‌ தமிழீழ விடுதலைப்‌ போராட்டமும்‌ - பக்‌.31),

ஒரு பொதுத்‌ தலைமையை உருவாக்க எந்தப்‌ போராளி இயக்கமும்‌ தயாரில்லை. தமிழக அரசியல்‌ தலைமைகள்‌ போலத்தான்‌; அத்தனை ஆயிரம்‌ பேரைக்‌ காவுகொடுத்த கடைசி நேரங்களிலும்‌ அவரவர்‌ இயக்க அடையாளத்தைக்‌ காப்பதிலும்‌ அவரவர்‌ தலைமையை முன்னிறுத்துவதிலும்‌ கவனமாகச்‌ செயல்பட்டனர்‌. பிரச்னையைத்‌ தீர்ப்பதோ, பிரச்னையோ பெரிதல்ல. மக்களோ, மக்களின்‌ பிரச்னைகளோ, எதுவாயினும்‌ மேலானதாய்‌ இயக்கம்‌ அவர்களை நடத்தியது.

போராளிக்‌ குழுக்களும்‌ அவ்வாறே! அவர்களின்‌ பேச்சுவார்த்தை மேசையில்‌ துப்பாக்கி நடுவில்‌ இருந்தது. துப்பாக்கி முன்னால்‌ உட்கார்ந்திருந்தது; போராளிகள்‌ பின்னால்‌ உட்கார்ந்திருந்தார்கள்‌.

இயக்கங்களுக்குள்‌ சனநாயகம்‌, இயக்கக்‌ கூட்டுக்குள்‌ சனநாயகம்‌, பொது தலைமைப்‌ பீடத்துள்‌ சனநாயகம்‌ என எங்கும்‌ சனநாயகம்‌ நிலவினால்தான்‌ - சனநாயக ரீதியாகத்‌ தீர்மானம்‌ எடுக்கப்பட்டால்தான்‌ சரியான வெற்றியை அடையமுடியும்‌. அல்லது தோல்வியைத்தான்‌ தழுவவேண்டி ஏற்படும்‌.

(மூ. திருநாவுக்கரசு, ஷ நூல்‌ பக்‌.31)

இந்த வாசகம்‌ முன்வைக்கப்பட்ட 1985லும்‌ எந்தக்‌ குழுவும்‌ கருத்தில்‌ கொள்ளவில்லை. இப்போதும்‌ அதேகாட்சி நீடிப்பதுதான்‌ அவலம்‌. இயக்க சனநாயகம்‌, இயக்கங்களுக்குள்‌ சனநாயகம்‌ என எவரொருவருமே அக்கறை கொள்ளவில்லை. அக்கறை கொண்டு முயற்சி மேற்கொண்டோரும்‌ புறமொதுக்கப்பட்டனர்‌ (முடிவிலாப்‌ பயணத்தின்‌ முடியாத வரலாறு - எஸ்‌.எம்‌.கோபாலரத்தினம்‌, நூல்‌ வெளியீடு, தோழமை பதிப்பகம்‌, சென்னை.)

பேனாவுக்குப்‌ பேனா தான்‌ பேசவேண்டும்‌; துப்பாக்கி பேசுதல்‌ கூடாது. அது அரச பயங்கரவாதம்‌; தாதாக்கள்‌ பயங்கரவாதம்‌. கவிஞர்கள்‌ செல்வி, சிவரமணி - கவிதைகளால்‌ விமரிசித்தவர்கள்‌ - உலலிருந்தே அகற்றப்பட்டு விட்டனர்‌. மனித உரிமைப்‌ போராளி - ரஜினியின்‌ கொலைச்‌ சேதியைக்‌ காற்றில்‌ பறக்கவிட்டாயிற்று. எங்கெல்லாம்‌ மனிதம்‌ துளிர்க்குமோ, துளிர்க்கச்‌ செய்ய எழுத்துக்கள்‌ பேசுமோ - அங்கு மனிதமும்‌ எழுத்தும்‌ துப்பாக்கியால்‌ மெளனிக்கப்‌பட்டன.

அவனை விதைத்த அடுத்த கணம்‌

அதோ

அடுத்தடுத்துள்ள கல்லறை நோக்கி

ஓடின கால்கள்‌

கண்ணீர்ப்‌ பூக்களைத்‌

தூவின கைகள்‌.


அவன்‌ விதை குழிக்கு

மண்ணிட்ட கரங்கள்‌

அனைத்துமே....

தத்தம்‌ மக்களுக்காய்‌

மண்ணிட்டிருந்தன.


எந்த மகனுக்காய்‌

என்‌ கால்களை நகர்த்த?

நேற்று விதையுண்டு போன

மூத்தவனுக்கா - இல்லை

இப்போதுதான்‌ விதைக்கப்பட்ட

என்‌ இளைய குஞ்சுக்கா?

எந்த மகனுக்காய்‌ என்‌ கால்களை நகர்த்த என்ற கவிதை - அ.காந்தா அன்னையாக எழுதியது; அன்னையருக்காக எழுதியது.

மகனையோ, மகளையோ இழக்கிற சோகம்‌ - தாய்க்குப்‌ பெரியது. எதிரியால்‌ அழிந்தாலென்ன? இயக்கங்களால்‌ அழிக்கப்‌பட்டாலென்ன? எதிரியைத்‌ தாய்க்கும்‌, தந்தைக்கும்‌ குடும்பத்துக்கும்‌ தெரியும்‌. ஆனால்‌ இயக்கமும்‌ உயிர்‌ எடுக்கும்‌ என்பது என்ன காரணமாயினும்‌ - சொந்த உயிர்களின்‌ மரணத்தைத்‌ தாங்க இயலுமா?

மனச்சாட்சியோடு பேச வந்தவர்களுக்கும்‌ ஆயுதமே பேசிற்று. ஆயுதங்களற்ற விமர்சனவெளி - கருத்துரைப்பு வெளி (Space) இப்போது உருவாகியிருக்கிறது. உருவாகியுள்ள இந்த சனநாயக வெளியை ஒற்றைப்‌ பிம்பப்‌ போற்றுதல்‌ முறையால்‌ அழித்துவிடல்‌ வேண்டாம்‌. எங்கும்‌ எதிலும்‌ சனநாயகம்‌ வேண்டியே எதிரிகளை நோக்கி போராடிக்‌ கொண்டுள்ளோம்‌. இங்கும்‌ இதிலும்‌, சனநாயகம்‌ என்ற முனைப்பு - வாசிப்பை, சந்திப்பை விரிவுபடுத்தும்‌; ஒற்றை வாசிப்ப்பு, ஒற்றைச்‌ சிந்திப்பு என்று அரசியல்‌ தலைமைத்துவங்களால்‌ நம் மீது ஏற்றப்பட்டுள்ள சுமையை வீசி எறிவது விடுதலைக்கு அவசியம்‌.

இப்போது அடைபட்ட கதவுகள்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாய்த்‌ திறந்து விமரிசனம்‌, சுய விமரிசனம்‌ என மேலெழுந்து வருகின்றன. அவை,

  • கோவிந்தனின்‌ - புதியதோர்‌ உலகம்‌ செய்வோமாக
  • செழியனின்‌ - வானத்தைப்‌ பிளந்த கதையாக
  • சேரனின்‌ - நீ இறங்கும்‌ ஆறு, ஊடறுவாக
  • கணேச அய்யரின்‌ - ஈழப்போரில்‌ எனது பதிவாகளாக
  • சயந்தனின்‌ - ஆறா வடுவாக
  • அ.ரவியின்‌ - வீடு நெடும்‌ தூரமாக

என்று சுயகுரல்கள்‌ கேட்கத்‌ தொடங்கியுள்ளன.

அது இயக்க அதிகாரம்‌, குழுவின்‌ அதிகாரம்‌, அரசதிகாரம்‌, தனிமனித அதிகாரம்‌ என்பன எங்கிருப்பினும்‌ சனநாயகத்தின்‌ சவப்பெட்டிகள்‌ மீது நடக்கின்றவைதாம்‌. சனநாயகமற்ற மனக்‌கட்டுமானம்தான்‌ ஆண்‌. நரிக்கு இடம்கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்‌. சிங்கம்‌, புலி, கரடி - போன்ற மேல்வர்க்கம் மட்டுமல்ல; நரி போன்ற கொத்தனார்‌, மேஸ்திரி, கங்காணி, சூபர்வைசர்‌ போன்ற சாமானிய நிலைக்கு மேலே இருக்‌கிற கூட்டம் என்ன ஆட்டம்‌ ஆடும்‌ என்பதைச்‌ சித்தரிக்கிறது நிலாக்‌ காய்ச்சல்.

வேலை வழங்குபவர்தான்‌ அதிகாரம்‌ கொண்டவர்‌, இன்‌றைய அமைப்பில்‌, வேலை வாங்குபவனும்‌, வேலை வழங்குபவனாக தன்னைக்‌ கருதிக்‌ கொள்கிறான்‌. கொத்தனார்‌, மேஸ்திரி, கங்காணி எனப்படுபவர்களெல்லாம்‌ இடைநிலைக்‌ கூலிகள்‌. கீழிருக்கும் கூலிகளை மேய்க்கும்‌ அதிகாரம்‌ தம்கைகளில்‌ தரப்பட்டதும், அல்லது எடுத்துக்‌ கொண்டதும்‌ கள்‌ குடித்த குரங்காக ஆடுகிறார்கள். கீழிருப்‌பவர்கள்‌ எடுபிடிகள்‌ மட்டுமல்ல; அவர்கள்‌ வாழ்வும்‌ தம் கைப்பிடிக்குள்‌ அடக்கம்‌ என்றெண்ணுகிற கொத்தனார்களின் ஆட்சியில்‌ கணவனை இழந்து கர்ப்பமாயிருக்கிற இளம்‌ விதவை படும்பாட்டை - மிகைப்படுத்தலின்றி - இயல்பான எடுத்துரைப்பிலே சொல்லிப்‌ போகிறது - இது ஒரு நல்ல கதை.

மீண்டும்‌ எனது வருத்தத்தைப்‌ பதிவுசெய்துகொள்ள விரும்புகிறேன்‌. வாசிப்போரைத்‌ தனது கட்டுக்குள்‌ வைத்திருப்பது சாதாரணமானது அல்ல. பிரமாண்ட வடிவிலான கலை வெளிப்பாட்டுப்‌ பணியை கைக்குள்‌ வைத்திருக்கும்‌ மோகன்ராஜ்‌ போன்ற விதைகள்‌ ஏன்‌ அறியப்படவில்லை? எழுத்தில்‌ தொடர்ச்சியை ஏன்‌ வழங்காதிருக்கிறார்‌ அவர்‌?

வருத்தம்‌, நிதரிசனமாய்‌, வெளிப்படையாய்‌ தெரியும்‌ இழப்பிலிருந்து பிறக்கிறது. 

- பா. செயப்பிரகாசம்‌, ஏப்ரல் 2013

கருத்துகள் / Comments

பெயர்

அஞ்சலி,62,அரசியல்,48,ஆய்வு,9,ஆளுமைகள்,37,இலக்கியம்,27,இன்குலாப்,14,ஈழம்,127,உரைகள்,27,கட்டுரைகள்,275,கடிதம்,46,கதைகள்,68,கலை,22,கவிதைகள்,38,காணொளிகள்,27,கி.ரா,29,சாதனையளர்கள்,9,சாதி - மதம்,36,சுற்றுச்சூழல்,26,செய்திகள்,91,நேர்காணல்,32,பண்பாடு,7,பா.செ பற்றி,182,பெண்ணியம்,24,மதிப்புரை,145,மனஓசை,18,மொழி போர்,44,Translations,19,
ltr
item
பா.செயப்பிரகாசம் [சூரியதீபன்]: இருள்‌ என்பது குறைந்த ஒளி - முன்னுரை
இருள்‌ என்பது குறைந்த ஒளி - முன்னுரை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpdchxkQkKs3srPCCUuvYb01xPgBhzXrayi1vBYTaEwodCqgke5N7Biy2gvME2AaHjqKoJz2cJav8qJpdVp5X8FJ2G3hZM4cVX0_gkwdVp-rssb8wc6Jy7qlS0c4g9Y8wrmoh63Tjticc7yI7kBzWPXmUMgM5wLgh3r5puBP-7xk8mnsuWq5Yd_r9IPlG4/w320-h400/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8C%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpdchxkQkKs3srPCCUuvYb01xPgBhzXrayi1vBYTaEwodCqgke5N7Biy2gvME2AaHjqKoJz2cJav8qJpdVp5X8FJ2G3hZM4cVX0_gkwdVp-rssb8wc6Jy7qlS0c4g9Y8wrmoh63Tjticc7yI7kBzWPXmUMgM5wLgh3r5puBP-7xk8mnsuWq5Yd_r9IPlG4/s72-w320-c-h400/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8C%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.jpg
பா.செயப்பிரகாசம் [சூரியதீபன்]
https://www.jeyapirakasam.com/2025/06/blog-post.html
https://www.jeyapirakasam.com/
https://www.jeyapirakasam.com/
https://www.jeyapirakasam.com/2025/06/blog-post.html
true
8868522532559594285
UTF-8
அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content