கிராமியத்தைக்‌ கண்டறியும்‌ அகழ்வாராய்ச்சி

பகிர் / Share:

(நல்லம்மா (நாவல்‌) - சூரங்குடி அ.முத்தானந்தம்‌ விலை : ரூ. 125,  அருவி வெளியீடு, 5-D, பொன்னம்பலம்‌ சாலை, கே.கே.நகர்‌, சென்னை-78, கைபேசி: 9444...

(நல்லம்மா (நாவல்‌) - சூரங்குடி அ.முத்தானந்தம்‌

விலை : ரூ. 125, அருவி வெளியீடு, 5-D, பொன்னம்பலம்‌ சாலை, கே.கே.நகர்‌, சென்னை-78, கைபேசி: 9444302967, விற்பனை உரிமை: தோழமை வெளியீடு)


அறுபது வயதுப்‌ பெரிய முதலாளிக்கு மூன்றாந்தாரமாய்‌ கழுத்தைக்‌ கொடுத்தவள்‌ நல்லம்மா. மூத்தவடியாள்‌ ரெண்டுபேருக்கும்‌ பிள்ளை இல்லையென்று, மூன்றாவதாய்‌ கட்டிவைக்கப்பட்ட சொந்தத்‌ தங்கச்சி மகள்‌ “சொந்தமான சொந்தம்‌”.

எங்கள்‌ ஊர்‌ மேலத்தெருவில்‌ ஒரு சிறுமி; நிலபுலன்களோடு எப்போதும்‌ தாளிதம்‌ செய்யப்பட்டு வாசனை ஜோராய்‌ வரும்‌ வாழ்க்கை; சேட்டை கூடுதல்‌ - சிறு பிராயத்துக்‌ குறும்பு என்று சொல்லக்கூடாது. அக்குறும்பு என்று சொல்வார்கள்‌. செழுப்பமான வீட்டுப்‌ பிள்ளைகளுக்கு இது வரைமுறை இல்லாமல்‌ எகத்தாளிபோடும்‌. சிறுவர்‌, பெரியவர்‌, ஆம்பிளை, பொம்பிளை என்ற பேதமில்லாமல்‌ கேலி செய்து சீண்டுதல்‌ செய்வாள்‌.

தெரு முக்கில்‌ பந்தாவாய்‌ நின்று பேசிக்‌ கொண்டிருந்தது ஒரு இளவட்டம்‌. “அது நிக்கிற 'ஷோக்கைப்‌' பாரு. ராஜா வீட்டு வேலைக்காரன்‌ மாதிரி. போய்‌ வேட்டியை இழுத்துப்‌ போட்டு வாடி”

குமரிகள்‌ தூண்டிவிட்டார்கள்‌. பராக்குப்‌ பார்ப்பது போல்‌ பக்கத்தில்‌ போய்‌ வேட்டியை இழுத்து விட்டு விட்டு ஓட்டம்‌ கிண்ணிவிட்டாள்‌ இந்தக்‌ கோட்டிச்சி.

சேட்டைகள்‌ செய்கிற - தராதரம்‌ இல்லாமல்‌ வம்படிக்கிற அந்தச்‌ சிறுமி மல்லம்மா.

சொந்த பந்தமும்‌ சொத்துபத்தும்‌ விட்டுப்‌ போகக்‌ கூடாதென்றுசெய்து வைத்த கல்யாணம்‌. கல்யாணமான பிறகும்‌ அதே மாதிரி கட்டுப்பாடில்லாமல்‌ ஊர்‌ சுற்றி வருகிற இந்தச்‌ சிறுபெண்ணின்‌ பெயர்‌ நல்லம்மா. முதலாளியைக்‌ கைப்பிடித்த கொஞ்ச நாளிலேயே நல்லம்மா ஒரு பிடி உயரம்‌ (!) வளர்ந்து விட்டாள்‌; உருப்பட்டு விட்டாள்‌. கடைத்‌ தெருவுக்குப்‌ போனால்‌ கண்ட கண்ட சாமான்களையெல்லாம்‌ வாங்கி வருவாள்‌. அடிக்கடி பஸ்‌ ஏறிப்போய்‌ சினிமா பார்த்து வருவாள்‌ - அஞ்சாறு தண்டித்‌ தரத்துப்‌ பிள்ளைகளைச்‌ சேர்த்துக்‌ கொண்டு! யாராவது தப்பித்‌ தவறி கேட்டுவிட்டாலோ ஒரு அகப்பை கறிக்குப்‌ பிடுங்கி விடுவாள்‌.

அவளை முன்வைத்து ஆரம்பிக்கிற நாவல்‌ பலபேரைக்‌ கொண்டுவந்து தனக்குள்‌ சேர்க்கிறது. அந்த ஒரு வாழ்க்கையில்‌ தொடங்கி சுற்றியுள்ள பல வாழ்க்கையையும்‌ வளைக்கிறது. அந்த வாழ்வுக்குள்‌ கிராமிய கலாச்சார அம்சங்களையெல்லாம்‌ விரிவாய்‌ முன்வைக்கிறது.

வேளாண்மை அழிவாகிக்‌ கொண்டு வருகிறது. அதன்‌ சங்கிலியான உறவு வகை, கூட்டுணர்ச்சி, பழக்க வழக்கம்‌, பண்பாடு இன்று அறுபட்ட வாலாய்த்‌ துடிக்கின்றன. புள்ளிவிவரத்‌ துறைபோலவோ அல்லது போனான்‌ வந்தான்‌ கதை போலாவோ பட்டியலிடுவதில்‌ கிடைப்பதைவிட ஒரு நாவலின்‌ அனுபவமாய்‌ பதிவு செய்யப்படுகிற போது அதற்கு ஒரு தனி வெளிச்சம்‌ கிடைக்கிறது. இரு கைகளிலும்‌ ஏந்தி ஏந்திக்‌ குடிக்கும்‌ பதநீர்‌ போல்‌ சுவை தருகிறது.

ஆதிகாலத்து வெண்கலக்‌ கும்பாவைக்‌ கழுவி எடுத்துவந்து மீனாட்சி பானையைத்‌ திறந்து, அதில்‌ நல்லா மூணு கை கம்பஞ்‌சோறு வைத்து, புருசனுக்கு முன்னால்‌ வைக்கிறாள்‌. களிமண் போல இருக்கும்‌ சோற்றை சமதளப்படுத்தி அதன்‌ நடுவே கலையாக ஒரு பெரிய குழியும்‌ உண்டு பண்ணினார்‌ சம்முகம்பிள்ளை. அது நல்ல பதியம்‌ போடுவதற்கு ஆக்கப்பட்ட இடம்‌ போலிருந்தது. அதில்‌ ஓர்‌ அகப்பை கீரைக்குழம்பை ஊற்றினாள்‌ மீனாட்சி.

கும்பாவிலுள்ள சோற்றில்‌ ஒரு பக்கமாக இருந்து ஒரு பருத்திக்காய்‌ அளவு எடுத்து கீரைக்குழம்பில்‌ நன்றாக முக்கிப்‌ புரட்டிவிட்டு வாயில்‌ அண்ணாக்கப்‌ போட்டு 'களக்‌'கென்று முழுங்கினார்‌ சம்முகம்பிள்ளை. இப்படி களக்‌, களக்கென்று ஒரு கும்பாச்சோறும்‌ பல்லிலே ஒட்டாமல்‌, அடி நாக்கில்‌ மட்டும்‌ பட்டு உள்ளே போன மாயம்‌ தெரியவில்லை. பசு வெண்ணை போலிருக்கிறது. அந்தக்‌ கம்மஞ்சோற்றுக்கு கீரைக்குழம்பு வாசத்துக்கும்‌ நாமும்‌ புள்ளிக்கு ஒரு கும்பாச்சோறு தின்னலாம்‌. வேறு வெஞ்சனம்‌ (தொடுகறி) அதுக்குத்‌ தேவையில்லை என்பதுபோல்‌ இருக்கும்‌.

சம்முகம்பிள்ளை சாப்பிடுவதையே உன்னிப்பாகக்‌ கவனித்துக்‌ கொண்டிருந்த நல்லம்மா கேட்டாள்‌, “அண்ணே, நீங்க சோத்துல குழம்பு ஊற்றிப்‌ பிசைஞ்சு சாப்பிட மாட்டிளா?”

“ஒங்க விட்ல நெல்லுச்சோறு. அதை அப்படிப்‌ பிசைஞ்சுதான்‌ சாப்பிடனும்‌. இது கம்மஞ்சோறு. இதை இப்படி களக்‌, களக்குன்னு குருட்டுக்‌ கோழி தவிட்டை முழுங்குற மாதிரித்தான்‌ முழுங்கணும்‌.”

“ஆமா தொட்டுக்கொள்றதுக்கு வேறு ஒண்ணும்‌ வேண்டாமா?”

“வேண்டாம்‌. இந்தக்‌ கீரக்குழம்பு இல்லாவிட்டாலும்‌ பரவாயில்ல. ஒரு பட்ட மொளகா வத்தலும்‌, ரெண்டு உப்புக்கல்லும்‌ இருந்தாப்‌ போதும்‌. ஒரு கலயம்‌ கஞ்சியா இருந்தாலும்‌ கூட உள்ள பேகிற போக்குத்‌ தெரியாது சரசரன்னு.”

"அவியல்‌, பொறியல்‌, பச்சடி, கூட்டு, சாம்பார்‌, ஈசல்‌, புளிக்கறி, மோர்‌ எல்லாம்‌ நீங்க சாப்பிடதில்லையா?”

“சாப்பிட்டிருக்கோம்‌; இழவு வீடு, கல்யாண வீடுகள்ல”

இருவேறு வர்க்கங்கள்‌ உரையாடுகின்றன. மேட்டுப்‌ புஞ்சையிலிருந்து சிறு பொன்‌ குஞ்சும்‌ பள்ளத்தாக்கிலிருந்து தின்று கொட்டை துப்பிய அனுபவசாலியும்‌.

ஒன்றுக்கொன்று எதிரான இந்த வர்க்கங்கள்‌ உணவு வகைகளில்‌ பழக்க வழக்கங்களில்‌ முட்டிக்‌ கொள்கின்றன. அதையும்‌ வெகு கவனமாய்‌ நிதானத்துடன்‌ ஆவணப்படுத்துகிறார்‌ முத்தானந்தம்‌.

கீ காடுகள்ல சில மொதலாளி மார்க வீடுகள்ல மொதலாளி வீட்டார்க்கு ஒரு சாப்பாடும்‌, வேலைக்காரர்களுக்கு ஒரு சாப்பாடும்‌ நடக்கிறது. மொதலாளியின்‌ இனத்தச்‌ சேர்ந்தவர்களுக்கு குதிரைவாலிச்‌ சோறும்‌ பருப்புக்‌ கறியும்‌; மத்தவங்களுக்கு கம்மஞ்‌ சோறும்‌ கீரக்‌ குழம்பும்‌; அவங்களுக்கு நெல்லரிசித்‌ தோசைன்னா, இவுகளுக்குக்‌ கம்பரிசித்‌ தோசை. இல்லாட்டா சோளத்தோசை. இட்டிலியோ, வடையோ கூலிக்காரர்களுக்குக்‌ கிடையாது. மொதலாளிமார்களுக்கு கேரட்‌, பீன்ஸ்‌, தொடுகறி; இவுகளுக்கு கானப்‌ பருப்புத்‌ துவையல்‌ மட்டும்‌. அவுகளுக்கு அவியல்‌, பச்சடியின்னா, இவுகளுக்கு பச்ச மொளகாயும்‌, உப்புக்கல்லும்‌. பாலும்‌, மோரும்‌ அவுகளுக்கு; நீச்சுத்‌ தண்ணியும்‌ புளிச்ச தண்ணியும்‌ இவுகளுக்கு. அவுகளுக்கு சில்வர்‌ கிளாஸ்‌, இவுகளுக்கு ஈயக்‌ கிளாஸ்‌. தாழ்த்தப்பட்டவர்களுக்கு சிரட்டை. அவுகளுக்கு வீட்டுக்குள்ளே சாப்பாடு; இவுகளுக்கு வெளியே வானம்‌ பார்த்த இடத்தில்‌.

இன்றுபோல்‌ தனி டம்ளர்‌ கூட இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொட்டங்குச்சி என்று சொல்லப்படும்‌ சிரட்டையில்‌ வழங்கினார்கள்‌.

ஐம்பது வருசங்களுக்கு முந்தி நடந்த இவை இன்னும்‌ வித்தியாசப்‌பட்டுப் போகவில்லை. தமிழகத்தில்‌ இரண்டாயிரம்‌ கிராமங்களில்‌ இரட்டைத்‌ தம்ளர்‌ முறை இருக்கிறது என்று சட்டப்பேரவையில்‌ கேள்வி எழுப்பப்பட்டபோது, இல்லை இரண்டே இரண்ட ஊர்களில்தான்‌ இருக்கிறது என்று சமகால இழிவைத்‌ தாங்கிப்‌ பிடிப்பவராக பதிலளித்தார்‌ முதலமைச்சர்‌ கருணாநிதி.

கடந்த காலம்‌ பதிவு செய்யப்பட்டால்‌ அது வரலாறு - கடந்த காலம்‌ நிகழ்காலத்துக்கு ஏதொரு பங்களிப்பும்‌ செய்யாதபோது வரலாற்றுக்‌ குறிப்பாக இழிவைச்‌ சுமந்து நிற்கிறபோது அந்த நிகழ்வில்‌ நாம்‌ ஒரு மனிதக்‌ கூறாக இருந்தோம்‌ என்பது எத்தனை கேவலம்‌.

***

கூட்டாக வாழுதல்‌ கிராமிய சமுதாயப்‌ பண்பாடு. இணைந்து ஒருத்தருக்கொருத்தர்‌ ஒத்தாசையாக இருத்தல்‌ அல்லாமல்‌ வேளாண்மைச்‌ சமுதாயம்‌ இயங்க முடியாது. விதை போடுதல்‌ முதல்‌ வெள்ளாமை வீடு வந்து சேருகிறவரை அவரவர்‌ உழைப்பு இருந்தாலும்‌ இந்தக்‌ கூட்டுதான்‌ வேளாண்மையை முழுமையாக்குகிறது. வேளாண்மை அடிப்படையில்‌ கட்டப்பட்டது அவர்களின்‌ உறவு. அதனால்‌ உறவுகள்‌ நெருக்கமாக இருக்கின்றன. வீடுகளும்‌ வீதிகளும்‌ நெருக்கமாய்‌ கூட்டு வாழ்க்கையை அடையாளப்படுத்துகின்றன.

கொண்டாடுதலுக்கும்‌ நடத்துதலுக்கும்‌ வித்தியாசம்‌ உண்டு. ஒன்றை ஒருவர்‌ நடத்துகிறார்‌ என்றால்‌, தன்முயற்சியால்‌ மேற்கொண்டு செலுத்துகிறார்‌ என்று பொருள்‌. ஒரு தொழில்‌ அல்லது ஒரு காரியம் அல்லது ஒரு குடும்பம்‌ அல்லது ஒரு இயக்கம்‌ ஒருவர்‌ நடத்துகிறார் என்கிறபோது அவருடைய உழைப்பால்‌, முயற்சியால்‌ நடத்தப்படுகிறது என்று அர்த்தமாகிறது. (இப்போது இயக்கங்கள்‌ தனியொரு மனிதனாலேயே நடத்தப்படுகின்றன) ஆனால்‌ கொண்டாடுதல்‌ அதுவல்ல. கொண்டாடுதல்‌ கூட்டமாக செய்யப்படுவது.

கிராமிய சமுதாயத்தில்‌ திருமணம்‌ நடத்தப்படுவதில்லை. கொண்டாடப்பட்டது. ஊர்கூடி திருமணத்தைக்‌ கொண்டாடியது.

சம்முகம்பிள்ளை வீட்டில்‌ குத்துவிளக்கை ஏற்றி வெறும்‌ குலவைச்‌ சத்தத்தோடுதான்‌ 'சிம்பிளாகக்‌' கல்யாணம்‌ என்று முதலில்‌ பேச்சு. ஆனால்‌ அந்த ஊர்‌ இளவட்டப்‌ பையன்களும்‌, சம்முகம்‌ பிள்ளையோடு சேர்ந்து உழுபவர்களும்‌ மொத்தத்தில்‌ அந்தக்‌ கிராமமே சேர்ந்தும்‌ திட்டத்தை அடியோடு மாற்றிவிட்டிருந்தார்கள்‌.

கல்யாணத்தப்போ, ஊரிலுள்ள வாரிவளைகளையும்‌, தென்னந்‌ தட்டிகளையும்‌ பொறுக்கி வந்து விசாலமான பந்தல்‌ போட்டார்கள்‌. ஏரோப்ளேன்‌ பந்தல்‌. ஊருக்கு வெளுப்பவர்கள்‌ வண்ண வண்ணச்‌ சீலைகளைக்‌ கொண்டுவந்து “மாத்துக்‌” கட்டினார்கள்‌. இளநீர்க்‌ குலைகள்‌, பூவிரிகள்‌ தொங்க விடப்பட்டன. பனை ஓலையால்‌ விதவிதமாகச்‌ செய்யப்பட்ட தோரணங்களைப்‌ பந்தலில்‌ கட்டினார்கள்‌. வண்டி மாடு வைத்திருக்கும்‌ ஒருவர்‌ வாழை மரத்துக்குப்‌ போய்விட்டு வந்திருந்தார்‌. பலசரக்குக்‌ கடைக்காரர்‌ பாலமுருகன்‌ வேண்டிய அளவு சாமான்களை வாங்கிக்‌ கொள்ளச்‌ சொல்லியிருந்தான்‌. மொய்‌ எடுத்து அவனுக்குப்‌ பணம்‌ அடைத்தால்‌ போதும்‌. காய்கறிச்‌ செலவை கந்தம்மா டீச்சர்‌ ஏற்றுக்‌ கொண்டார்‌. ரேடியோ செட்டுக்காரன்‌ திருப்பதி இலவசமாகக்‌ குழாய்களைக் கட்டி அவிழ்த்துப்‌ போவதாகச்‌ சொன்னான்‌. கோல்டன்‌ என்டர்பிரைஸின் கல்யாணி கவரிங் அயிட்டங்களும் ரெடி. திருமாலுகந்தான்‌ கோட்டை மேளமும்‌ வந்து இறங்கிவிட்டது. பள்ளிக்‌ கூடத்திலிருந்து வந்து  குவிக்கப்பட்டிருந்த பெஞ்சு, நாற்காலிகளில்‌ ஏகப்பட்ட கூட்டம்.

முதலாளி வீட்டிலிருந்து சேலை, வேட்டி வந்திருந்தன. குமாரசாமிக்கு ஒரு வேட்டி துண்டோடு ஒரு சட்டையும்‌, சுப்பம்மா பிள்ளைக்கு ஒரு பாவாடையும்‌, சட்டையும்‌ எடுத்ததோடு பூ, சந்தனம்‌, குங்குமம்‌, வெத்தலை பாக்கு சகிதமாக ராசகோபால்‌ நாயக்கர்‌ வீட்டோடு வந்திருந்தார்‌. திருச்தெந்தூர்த்‌ தேவர்‌ தோட்டத்தில்‌ இருந்து வாழைத்தார்களும்‌ இலைக்கட்டுகளும்‌ வந்து இறங்கியிருந்தன. வியாபாரி நாயக்கர்‌ ரூபாயாகச்‌ செய்ய இருந்தார்‌. தாலிச்‌ செலவு மட்டும்தான்‌ சம்முகம்‌ பிள்ளையைப்‌ பொறுத்தது. அந்த ஆட்டுக்காரப்‌ பையன்கள்‌ கொம்பில்‌ பூச்சுற்றப்பட்ட ஒரு வெள்ளாட்டங்கிடாயோடு வந்து பந்தலில்‌ ஓரத்தில்‌ நின்றிருந்தார்கள்‌ - அன்பளிப்பாகக்‌ கொடுக்க.

- இது 2005ஆம்‌ ஆண்டு! ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய கிராமம்‌ கொண்டாடிய திருமணம்‌. சாதிகள்‌ தாண்டியும்‌ சாதிகள்‌ ஒன்றாகியும்‌ திருமணத்தை நடத்தினார்கள்‌. கல்யாண மாப்பிள்ளை சம்முகம்பிள்ளை என்ற உழைப்பாளி குற்றம்‌ குறை சொல்ல முடியாத ஆள்‌ என்பது கவனத்தில்‌ கொள்ள வேண்டிய ஒரு அம்சம்‌. எதற்கெடுத்தாலும்‌ அரிவாள்‌ தீட்டும்‌ சாதியக்‌ கலாச்சாரம்‌ தலைகாட்டுகிற இந்த நாளில்‌ சாதி தாண்டிய ஒற்றுமை எங்கும்‌ இல்லை.

முற்றத்தில்‌ புதுமணல்‌ பரப்பி, பசிய புதிய மூங்கில்‌ கழை நட்டு தென்னங்கீற்றுப்‌ பந்தல்போட்டு, பெரியவர்கள்‌ முன்னின்று நடத்திய திருமணம்‌ பற்றி சங்கப்பாடல்‌ தெரிவிக்கிறது. சங்கப்‌ பாடலிலக்கியம்‌ முதற்கொண்டு அ.முத்தானந்தத்தின்‌ 'நல்லம்மா' நாவலிலக்கிய காலம்‌ வரை திருமணங்கள்‌ அவரவர்‌ வீட்டு முற்றத்தில்‌ நடந்தன. ஊர்‌ கூடிச்‌ செய்தார்கள்‌.

ஊரார்‌ ஒன்று கூடி, பெரியோர்‌ முன்னிலையில்‌ நடந்த தமிழர்‌ பண்பாடு மறைந்து ஐயர் வைத்து திருமணம்‌ செய்யும்‌ ஆரியப்‌ பண்பாடு முன்னுக்கு வந்தது. கல்யாணமும்‌, அவரவர்‌ சாதியில்‌, அவரவர்‌ கூடிக்‌ குலாவுதல்‌ என்ற 'சாதிப்‌ பகுமாணங்கள்‌' (பெருமை) மேலே வந்தன.

தங்கம்‌, நகை, சொத்து, பணம்‌ என்ற கட்டுமானத்தில்‌ உருவான சமூகத்தில்‌ உறவுகள்‌ தூர ஒதுங்கிவிட்டன.

கிராமிய சமுதாயத்தில்‌ அட்டுப்பிடித்த, கறைபடிந்த பக்கங்களும்‌ உண்டு.

சாதாரணமாக அந்த வீட்டின்‌ நடுக்கூடத்தில்‌ ஒரு பெரிய கேங்கே கிடந்தது. எல்லாருமே முதலாளிமார்கள்‌ வீட்டு அம்மாக்கமார்களும்‌, பசையுள்ள பெரிய வீட்டுப்‌ புள்ளிக்காரிகளுமே ஆவார்கள்‌. வடக்கு வீட்டம்மா, மேல வீட்டம்மா, பிளஷர்‌ வீட்டுக்காரி, நடுவீட்டம்மா, மூணுமாடி முனீஸ்வரியம்மா, மயில்வீட்டம்மா, காரவீட்டுக்காரி, டாப்பு வண்டி சங்கரம்மா, கம்மாய்க்‌ கரை வீட்டம்மா, தானா கூனா தீனா மூனாவீட்டம்மா, மீயென்னாச்‌ சூனா பெண்டாட்டி, தோணி வீட்டம்மா, வேம்பாத்துக்காரி, சிங்கம்பட்டிச்‌ செல்லம்மா, ஜவுளிக்‌ கடைக்காரர்‌ பெண்டாட்டி, பெட்டி ஆபீஸ்‌ பிள்ளை வைப்பாட்டி, கீகாட்டுக்காரி, கிராம முன்சீப்‌ பெண்டாட்டி, பம்புசெட்டு பாப்பாத்தியம்மா, பாம்படக்காரி பாப்பு, பெரிய முதலாளி வீட்டு மருமகள்‌ மேல்‌ வண்டி ரங்கம்மா என்று இப்படியொரு பெரிய கூட்டம்‌ நல்லம்மா வீட்டு பொம்பளைக யாரும்‌ அந்தந்தக்‌ கூட்டத்தில்‌ எந்தக்‌ காலத்திலும்‌ கலந்து கொண்டது கிடையாது. அது அவர்களுக்குப்‌ பிடிக்காத விசயமும்‌ கூட.

இந்தப்‌ பெரிய வீட்டுப்‌ பொம்பிளைகள்‌ வேலை வெட்டி இல்லாதவர்கள்‌. வீட்டு வேலைக்கு ஆள்‌ வைத்திருப்பவர்கள்‌. வேளாவேளைக்கு பலகாரங்களும்‌ சோறும்‌, பாலும்‌, பழமும்‌ அவர்கள்‌ இருக்கும்‌ இடந்தேடி வரும்‌. தின்ன சோறு செரிக்கணுமே. அதற்காகத்தான்‌ பகலெல்லாம்‌ ஊர்ப்பொரணி பேசி நேரத்தைக்‌ கழிக்கிறார்கள்‌. அதுதான்‌ அவர்களது பிரதான சோலியும்‌ ஆகும்‌. இந்தக்‌ கீழ வீட்டு முதலாளி வீட்டை பொரணி மன்றம்‌ என்று ஊருக்குள்‌ பேசுவார்கள்‌. ஒருவரைக்கூட அவர்கள்‌ விட்டு வைப்பதில்லை பொரணி பேசுவதில்‌ (பக்‌. 159-160).

ஊர்ப்‌ பொரணி பேச ஒன்றுகூடல்‌ என்பது கிராமிய அம்சம்‌. காட்டு வேலை, வீட்டு வேலை எதுவும்‌ செய்யாமல்‌ சும்மா இருக்கிற காலத்தில்‌ வீட்டுப்‌ பெண்களின்‌ பழக்கம்‌ இது. உழைக்கும்‌ பெண்கள்‌ கூட வேலை இல்லாமல்‌ ஓய்வாக இருக்கிற காலங்களில்‌ ஊர்க்கதை பேசுவதுண்டு. கிராமிய வாழ்வு முறை ஒருவருக்கொருவரான நெருக்கம்‌ இதற்கான உந்து சக்தியாய்‌ இருக்கிறது.


தூரந்‌ தொலைவான இடங்களிலிருந்து வரும்‌ விவசாயிகள்‌ சந்தித்தால்‌ முதல்‌ விசாரிப்பு - ஒங்க ஊர்ல மழை எப்படி?

வேளாண்மை வானத்திற்குக்‌ கீழே நடக்கிற சூதாட்டம்‌ என்பது ருசுப்படுத்தப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில்‌. அது பற்றி முத்தானந்தம்‌ பேசுகிறார்‌,

போன வருசமாவது சம்சாரிகளுக்கு கால்‌ வெள்ளாமை, அரை வெள்ளாமை வந்து சேர்ந்திருந்தது. அந்த வெள்ளாமைகளையும்‌, காடு கரைகளில்‌ நக்கி நக்கி எடுத்து வந்த வரவும்‌ கூட தச கூலிக்கே சரிக்கட்டிப்‌ போனது. மிச்சத்துக்கு வழியில்லை. இடுப்பொடியாய்ப்‌ பாடுபட்டதுதான்‌ மிச்சம்‌.

இந்த வருசம்‌ அந்த வெள்ளாமையும்‌ கூடக்‌ கிடையாது.

வருண பகவான்‌ கரிசல்‌ காட்டு மக்களை நல்லாப்‌ போட்டு எடுத்துவிட்டான்‌.

பூமியில்‌ ஒரு பொட்டு மழை பெய்யவில்லை.

வானம்‌ பார்த்த பூமி ஏங்கித்‌ தவித்ததுதான்‌ கண்டது.

பச்சை என்பதே கண்ணுக்குத்‌ தெரியாமலே போயிற்று. எல்லா இடங்களிலும்‌.

கரிசல்‌ தாய்‌ கன்னங்கரேலென்று பிறந்த மேனியாகக்‌ கிடக்கலானாள்‌. செல்வம்‌ பொழியக்‌ கூடிய பிஞ்சைகள்‌ சீரழிஞ்சு கிடந்தன.

தங்கம்‌ விளையும்‌ பிஞ்சைகள்‌ கூடத்‌ தரங்கெட்டுக்‌ கிடந்தன.

கண்மாயில்‌ குருவி குடிக்கத்‌ தண்ணீர்‌ கிடையாது.

கிணறுகளில்‌ கருவாடு காயப்போடலாம்‌.

வருசம்‌ முன்னூத்து அறுபத்தஞ்சு நாளும்‌ வெள்ளை வெயில்‌ அடித்தால்‌ அப்படி?

பகவானுக்கல்லவா தெரியணும்‌!

அவன்‌ யார்‌ வீட்டில்‌ போய்‌ படுத்துக்‌ கொண்டானோ?

அவர்களுக்கும்‌ வைப்பாட்டி வீடுகள்‌ எல்லாம்‌ இருக்காமே?

ஜோசியர்கள்‌ கணக்குப்படி ரெண்டரை வருசம்‌, மூன்றரை வருசம்‌ என்று போய்‌ இருந்து கொள்வானாமே! (பக்‌. 59).

- ஜனங்கள்‌ புலம்பித்‌ தவித்தார்கள்‌.

பஞ்சத்தைப்‌ பேசியாயிற்று; மழைக்காலம்‌ எப்படி?

ரெண்டு வருசங்களாய்ச்‌ சும்மா கிடந்த கரிசல்‌ மண்ணில்‌ பெய்த மழையால்‌ சேறும்‌ சகதியும்‌ மண்டிப்‌ போய்க்‌ கிடந்தன. காலில்‌ ஒட்டிய களிமண்‌ அவர்களுக்கு “பூட்ஸ்‌” போட்டது மாதிரி இருந்தது. சில பேர்களுக்கு கரண்டைக்கால்‌ முங்க பிசுபிசுத்தது சேறு. அவர்கள்‌ மந்தைப்‌ புஞ்சைப்‌ பக்கம்‌ வெளிக்கப்‌ போய்வருவதுதான்‌ சங்கடம்‌. 'சக்‌'கென்று உட்கார்ந்து கொல்லைக்குப்‌ போக முடியாது. உட்கார்ந்தால்‌ பெருந்‌தொடை எல்லாம்‌ சேறாகிப்போய்விடும்‌. கொஞ்சம்‌ யோசனையும்‌ உள்ள கரிசல்‌ காட்டுக்காரர்கள்‌ கம்மந்தட்டை முடி ஒன்றைக்‌ கையில்‌ எடுத்துக்‌ கொண்டு போய்க்‌ கால்க்கெண்டை சதைக்கும்‌ தொடைக்கும்‌ இடையில்‌ வைத்துக்‌ கொண்டு சேறு ஒட்டாமல்‌ கொல்லைக்கு இருந்துவிட்டு வருவார்கள்‌. சிலருக்குச்‌ 'சீசீ' என்றிருக்கும்‌. அதற்காக மழை பெய்வதை வெறுக்க முடியுமா?” (பக்‌. 94-95)

அதற்காக அந்த வாழ்க்கையை வெறுக்க முடியுமா? இப்போதும்‌ கழிப்பறைகள்‌ இல்லாத பூமியாகத்தான்‌ நாறுகிறது. ஊரைச்‌ சுற்றி மந்தையை நோக்கி நடக்கும்‌ பாதைகளெல்லாம்‌ மனிதக்‌ கழிவால்‌ நாறிக்‌ கொண்டிருக்கிறது. மனிதக்‌ கழிவுகள்‌ காய்ந்தும்‌, காயாமலும்‌ ஊர்‌ முங்க முங்க வாசம்‌ வீசுகிற அங்கே கொக்கோ கோலாவும்‌, பெப்சியும்‌ கிடைக்கிறது.

***

ஊரின்‌ புறச்சூழல்கள்‌ மட்டுமல்ல. வாழ்க்கைக்கு உள்ளேயும்‌ நாறிப்போய்விட்டது நல்லம்மாவுக்கு! வீட்டு வேலையாளாய்‌ அமர்த்தப்பட்ட “கோணமண்ட மாப்ள” குமாரசாமியுடன்‌ சேர்க்கை கொண்டதால்‌ சொந்த மாமனான முதலாளிக்‌ கிழத்துக்கு மூன்றாந்‌தாரமாய்‌ வாழ்க்கைப்பட்டதை நல்லம்மா யோசிக்கிறாள்‌. இந்தத்‌ தப்புக்கான காரணங்களையும்‌ காரண கர்த்தாக்களையும்‌ அவள்‌ அறிவாள்‌.

“ஒவ்வொரு பொண்ணும்‌ கை நிறைஞ்ச பணத்தைக்‌ விடக்‌ கண்‌ நிறைஞ்ச புருசனைத்தானே விரும்புவா? பணமும்‌ சொத்தும்‌ நகையும்‌ இருக்குன்னு ஒரு வயசாளிக்கு என்னைக்‌ கொண்டு தானம்‌ கொடுத்துட்டாங்களே.. மொதலாளிக்குப்‌ புள்ள இல்லையின்னா இருக்கிற சொத்துக்கள இல்லாதவங்களுக்கு பகுந்து கொடுத்துட்டுப்‌ பேரும்‌ புகழுமாய்‌ போய்ச்சேர வேண்டியதுதானே. போகிற எடத்துலயாவது புண்ணியம்‌ கெடைக்கும்‌. புள்ள வேணுமாம்‌ புள்ள! புள்ள இல்லாட்டாக்‌ கொள்ளி வேகாதோ?” (பக்‌. 90)

உடைமை அடிப்படையில்‌ உறவைக்‌ கோர்த்துக்‌ கொள்வது கிராமிய அமைப்பு. உலகளாவிய தகவல்‌ தொழில்நுட்பம்‌ கூட அவர்களின்‌ கதவுகளைத்‌ தட்டி அசைக்க முடியவில்லை. நுகர்வுப்‌ பொருட்களின்‌ கூடாரமாக கிராமங்கள்‌ ஆக்கப்பட்டு வருவது தவிர, எந்தத்‌ தகவல்‌ தொழில்நுட்பமும்‌ வாழ்க்கை உறவுகளை மாற்றிப்போட முடியவில்லை.

நல்லம்மாளின்‌ யோசிப்பு சரியே. வேலைக்கார குமாரசாமியை நேசித்துக்‌ கூடிக்‌ குழந்தை பெற்றுக்‌ கொண்டதும்‌ சரிதான்‌. இந்த நடப்புக்கான மூல காரணங்களையும்‌ அதற்கான மூலகர்த்தாக்களையும்‌ யோசித்ததும்‌ சரியே!

நல்லம்மா சாயலிலேயே முதல்‌ இரண்டு குழந்தைகள்‌ இருக்க - இந்த மூணாவது குழந்தை குமாரசாமியை அப்படியே உறிச்சி வைச்சது மாதிரி பிறக்கிறது.

அதே கால்‌ வகுப்பு; அதே கைச்‌ சைஸூ. அதே இல்லிக்‌ கண்ணு. அதே சோணக்காது. அதே சப்பட்ட மூக்கு. அதே ஏரோப்ளேன்‌ மண்டை.

இந்த உடைப்புக்கான நியாயத்தை கட்டுப்பாடான கிராமிய சமூகம்‌ ஏற்க மறுக்கிறது. ஆனால்‌ அவள்‌ சார்பாக நியாயமான பேச்சுப்‌ பேசியவர்களும்‌ இருந்தார்கள்‌.

“இந்தச்‌ சின்னஞ்சிறு வயசுல அவ எப்படி இருப்பா? அவ என்ன மரக்கட்டையா? இல்ல தட்டைக்‌ கட்டா? செல கெழவங்க மாதிரி இந்தக்‌ கெழவன்‌ துள்ளி விளையாடுகிறவர்‌ மாதிரியா இருக்காரு”

“நல்லம்மா என்ன ஊர்ப்‌ பொதுக்கிணறு மாதிரியா இருக்கா? நாலு பேறு வாளி போட்டுத்‌ தண்ணி எடுக்கிறாப்போல? அவ ஒருத்தன்‌ கிட்ட உத்தமியா இருக்கா”

இங்கே அத்துமீறல்‌ ஒருவித நியாயமாகிவிடுகிறது. எப்போதும்‌ எதிர்க்கேள்வியை நிறுத்தி அத்துமீறல்‌ தன்னை நிலைநிறுத்திக்‌ கொள்கிறது.

“அவ விரல யாராலும்‌ மடக்க முடியுமா?.. ஒலகத்துல மீன்‌ திங்காத கொக்கு இருக்கவா செய்யுது?”

வித்தியாசப்பட்ட வாழ்க்கையைப்‌ பேசியிருக்கிறார்‌ படைப்பாளி. பல கண்களுக்கு இது விபரீதமான வாழ்க்கையாய்‌ தெரியலாம்‌. அருவறுத்து ஒதுக்க வேண்டியதாகப்‌ படலாம்‌.

இந்த வித்தியாசமான வாழ்க்கையினூடேயே அந்த நிலத்துக்கே உரித்தான பண்பாட்டுக்‌ கூறுகளை கோர்த்துத்‌ தருகிறார்‌.

புதைந்து போய்க்‌ கொண்டுள்ள கிராமியக்‌ கலாச்சாரத்தை அகழ்ந்து எடுத்து விரிக்கும்‌ வேலையை தன்‌ தோளில்‌ போட்டுக்‌ கொண்டு செய்கிறவராக முத்தானந்தம்‌ இருக்கிறார்‌.

மனுசன்‌ சொல்ல முடியாததை சொலவடைகள்‌ சொல்லி விடுகின்றன. ஒரு பழமொழி ஒரு முழுமனுசன்‌ மாதிரி; முழு ஆளை அப்படியே தத்ருபமாக காட்டி விடுகிறது. சொலவடையோடு சொல்லாடலும்‌ அள்ள அள்ள வற்றாமல்‌ வந்து கொண்டிருக்கிறது. (கிறங்கிக்‌ கிறுகிறுத்து, வேலை கெடக்கு ஒரு கோட்டைக்கு, வாயிழந்து கேட்பது, இருவாயும்‌ பொன்‌ சொரிய, சிப்பாணி அள்ளிக்‌ கொட்டுது, எக்கடையும்‌ எகடாசியும்‌ அத்தம்‌ தொத்தம்‌, பழசு பட்டை).

***

ஆனால்‌ சமகாலப்‌ படைப்புக்களின்‌ மொழி சாதுரியம்‌, குயுக்தி, வியூகம்‌ இவை பற்றி சில கேள்விகள்‌ எழுகின்றன. யதார்த்தம்‌ இன்று பல்வேறு எடுத்துரைப்பு முறை, கதை சொல்லல்‌, தொழில்‌ நுட்ப முயற்சிகளைத்‌ தனதாக்கிக்‌ கொண்டுவிட்டது.

எந்தக்கால வாழ்க்கையை விரித்து வைத்தாலும்‌ எந்தக்கால மனுசர்களைச்‌ சித்தரிப்பு செய்கிறபோதும்‌ சமகால நவீனப்‌ போக்கு வெளிப்பட்டுக்‌ கொண்டிருக்க வேண்டும்‌.

இலக்கிய வெளிப்பாட்டு மொழி ஒவ்வொரு காலகட்டமாய்‌ அதன்‌ வளர்ச்சிக்குப்‌ பொருந்த அமைகிறது. வளர்ச்சியை முன்னெடுக்கும்‌ நடையாக மாறுகிறது. ஒரு காலகட்டத்தின்‌ இலக்கிய மொழி - அடுத்த கட்டத்துக்குப்‌ பொருத்தமில்லாமல்‌ போகலாம்‌. ஆனால்‌ அது தன்னிடம்‌ தரப்பட்ட படைப்பு வேலையை பூரணமாக குறிப்பிட்ட காலத்தில்‌ செய்து முடித்திருக்குமானால்‌ அதுதான்‌ வெற்றி.

முத்தானந்தம்‌ கைக்கொண்டிருக்கிற நேரடிச்‌ சொல்முறை அதில்‌ ஒன்று.

வட்டாரக்‌ கலாசாரத்தைப்‌ பேச் வெவ்வேறு உத்திகள்‌ இருக்கின்றன. ஏகப்பட்ட வெளிப்பாட்டு முறைகள்‌ நவீனமாகிய கடலில்‌ 'கெத்கெத்‌'தென்று கிடக்கின்றன.

மண்சுவர்‌ வைத்து அதன்மேல்‌ நைப்புமணல்‌ பூசி தேய்ப்புப்‌ பலகை (தீத்துப்‌ பலகை) வைத்து தேய்த்து வீடு கட்டும்‌ பாணி இந்த எழுத்து முறை. இன்று விஞ்ஞானம்‌ கட்டடக்‌ கலையை எங்கோ உயரத்தில்‌ தூக்கிக்‌ கொண்டுபோய்‌ வைத்துவிட்டது.

காணாமல்‌ போய்விட்ட குமாரசாமி கிடைத்துவிட்டான்‌. அவனைக்‌ காணாமல்‌ போக்கடித்து கதையில்‌ ஒரு திருப்பத்தை கொண்டு வர வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே குடும்பக்‌ கட்டுப்பாடு பிரச்சினை திடீரென வந்து குதிக்கிது. அவன்‌ கிடைத்துவிட்ட சேதி கேட்டு மகிழ்ந்து போன நல்லம்மாவின்‌ இரண்டு கண்களும்‌ முகட்டைப்‌ பார்த்தபடியிருந்த அந்த யோசிப்பு - ஒரு நல்ல மனுசனை இந்த அலைக்கழிப்பு செய்திட்டமே என்ற வருத்தமாக மாறுகிறது. தன்பக்கம்‌ அதற்குப்‌ பண்ண வேண்டிய பரிகாரங்களைப்‌ பண்ணி முடிக்க வேண்டும்‌ என்று நினைத்தாள்‌. இது ஒரு முக்கியமான கட்டம்‌.

ஆம்பிளை மாதிரி கைவீசி நடந்தாள்‌. ராசகோபால நாயக்கர்‌ வீடு. அவருக்கு வலதுபுறம்‌ ஆட்டுகிடை கீதாரிக்‌ கோனார்‌. அவருக்கும்‌ பக்கத்தில்‌ மேகாட்டு வியாபாரி நாயக்கர்‌. இரும்புக்‌ கட்டிலில்‌ ராசகோபால்‌ நாயக்கர்‌ சம்சாரம்‌, தாயார்‌ இவர்களின்‌ சபையில்‌ தன்னால்‌ வாழ்வு தொலைந்த குமாரசாமியின்‌ மறுவாழ்வுக்கு தான்‌ செய்யப்போகிற ஏற்பாடுகளை வரிசையாய்‌ சொல்கிறாள்‌.

“நீ சொல்றதெல்லாம்‌ சரிதான்‌... இருக்கிற வரைக்கும்‌ நாலுபேருக்கு நல்லது செய்துட்டுப்‌ போகணும்னு சொன்ன பாரு. அது எனக்கு ரொம்பப்‌ பிடிச்சிருக்கு. யாரு கொறை சொல்லப்போறா?”

கடைசியாய்‌ ராசகோபால்‌ நாயக்கர்‌ சம்சாரம்‌ சொல்கிற இந்தச்‌ சொல்‌ வாழ்வாய்‌ காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்‌.

என்னென்ன செய்வதாகச்‌ சொல்கிறாளோ, அதை வாழ்வாய்‌ வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்‌.

சொல்வகையாக இல்லாமல்‌ நல்லம்மாவின்‌ அடுத்த கட்ட வாழ்வாக நடத்தப்பட்டிருந்தால்‌ முழுமையாகி இருக்கும்‌.

நல்லம்மாவின்‌ வாய்‌ வார்த்தையாக 'நாவலை' சட்டென்று முடித்துவிட்டார்‌.

இந்த இடத்தில்‌ கதை சொல்லலுக்கு ஏற்பட்ட பள்ளம்‌, கன்னத்தில்‌ விழுகிற குழி போல்‌, அழகுப்‌ பள்ளமாக இல்லை.

திரைப்படம்‌ பாணியில்‌, நாடக முறையில்‌ வேகவேகமாய்‌ முடிக்கப்‌ பெற்ற நல்லம்மா, இன்னும்‌ நாலு எட்டு நடந்திருக்க வேண்டும்‌.

- பா.செயப்பிரகாசம்‌, ஜூலை 2007

கருத்துகள் / Comments

பெயர்

அஞ்சலி,62,அரசியல்,48,ஆய்வு,9,ஆளுமைகள்,37,இலக்கியம்,27,இன்குலாப்,14,ஈழம்,127,உரைகள்,27,கட்டுரைகள்,275,கடிதம்,46,கதைகள்,68,கலை,22,கவிதைகள்,38,காணொளிகள்,27,கி.ரா,29,சாதனையளர்கள்,9,சாதி - மதம்,36,சுற்றுச்சூழல்,26,செய்திகள்,91,நேர்காணல்,32,பண்பாடு,7,பா.செ பற்றி,182,பெண்ணியம்,24,மதிப்புரை,145,மனஓசை,18,மொழி போர்,44,Translations,19,
ltr
item
பா.செயப்பிரகாசம் [சூரியதீபன்]: கிராமியத்தைக்‌ கண்டறியும்‌ அகழ்வாராய்ச்சி
கிராமியத்தைக்‌ கண்டறியும்‌ அகழ்வாராய்ச்சி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEXnakZWwgAeKZ4T0-nH6RGDaLmlC8O_YhGN83iFy8bjlKPD32DFBl9uJXl7Fs7k0Kk72PgeZUBbZIJ1Y0aoTgT2_h3dPougI1B8YCs-FCWBUSjO_6YkXHinmJKqR7j87W_Rk3LoEsf_lf1wtiJkYtbf-pB5oXWiuYzx7FuJy-uS58OtWlWT7ohc7IR5vx/w413-h640/Nallama2.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEXnakZWwgAeKZ4T0-nH6RGDaLmlC8O_YhGN83iFy8bjlKPD32DFBl9uJXl7Fs7k0Kk72PgeZUBbZIJ1Y0aoTgT2_h3dPougI1B8YCs-FCWBUSjO_6YkXHinmJKqR7j87W_Rk3LoEsf_lf1wtiJkYtbf-pB5oXWiuYzx7FuJy-uS58OtWlWT7ohc7IR5vx/s72-w413-c-h640/Nallama2.jpg
பா.செயப்பிரகாசம் [சூரியதீபன்]
https://www.jeyapirakasam.com/2025/06/blog-post_2.html
https://www.jeyapirakasam.com/
https://www.jeyapirakasam.com/
https://www.jeyapirakasam.com/2025/06/blog-post_2.html
true
8868522532559594285
UTF-8
அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content