மொழிப்போர்த் தியாகிகளை இழிவுபடுத்தும் 12-ம் வகுப்பு புத்தக கார்ட்டூன்

மத்தியக் கல்வி வாரியப் பள்ளிகளுக்கான 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகத்தில், திராவிட இயக்கம் பற்றி ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது. அதில் சேர்க்கப்பட்டுள்ள ஆர்.கே.லட்சுமணனின் ஒரு கார்ட்டூன்தான் பிரச்னையின் மையம்.

1965-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டம் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்தது. 1965 ஜனவரி 25-ம் தேதி முதல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற அன்றைய மத்திய அரசை எதிர்த்து அந்தப் போராட்டத்தைத் தமிழக மாணவர்கள் நடத்தினார்கள். இதுபற்றி, மத்தியக் கல்வி வாரியப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடத்தில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டு உள்ளார்கள்.

'இந்தியைக் கற்பது கட்டாயம் இல்லை. ஆங்கிலமே தொடரும்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்க... போராடும் ஒரு மாணவர் அதன்மீது கல் எறியப் பாய்கிறார். அதை, அப்போதைய முதல்வர் பக்தவத்சலமும், முன்னாள் முதல்வர் ராஜாஜியும் அதிர்ச்சியோடு பார்க்க, பலகைக்குப் பின்னால் நிற்கும் சிலர், 'அந்தப் பையனுக்கு ஆங்கிலமும் படிக்கத் தெரியாது’ என்று கூறுவதாகச் சித்திரிக்கப்பட்டு உள்ளது.

மொழிப்போர்த் தியாகிகளை இழிவுபடுத்தும் கார்ட்டூனையும் அபத்தமான பகுதிகளையும் பாடப் புத்தகத்தில் இருந்து உடனே அகற்றவேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் தமிழகத்தில் எழுந்துள்ளன.


பா. செயப்பிரகாசம் (எழுத்தாளர், 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்):  ''பல இனங்கள் வாழும் நாடான இந்தியாவில், சில மாநிலங்களில் மட்டுமே பேசப்படும் மொழியான இந்தியை ஆட்சி மொழி என அறிவித்ததை எதிர்த்து, அரசியல் தெளிவோடுதான் 60-களில் தமிழக மாணவர்கள் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள். இந்தி மொழியை எதிர்த்து அல்ல, இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதை எதிர்த்துதான் போராட்டம். தமிழ் மொழியின் உரிமையைக் காக்கும் அந்தப்  போராட்டத்தில், ஏறக்குறைய 500 பேரை பலி கொடுத்து, பல ஆயிரம் மாணவர்கள் படுகாயம் அடைந்து, நான் உட்பட 10 மாணவர் தலைவர்கள், இந்தியத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தோம்.

இந்தக் கேலிச்சித்திரத்தில் குறிப்பிடப் படுவதுபோல முட்டாள்கள் அல்ல. தமிழக மாணவர்கள், அறிவு ரீதியாக, பல இனங்கள் வாழும் உலக நாடுகளில் எப்படி ஆட்சி மொழியை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்தித்து, கூட்டம் போட்டுப் பேசி, அதன்படி தமிழ் மொழியின் உரிமையை மீட்பது சரி என அரசியல் ரீதியாக முடிவெடுத்துதான், போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், மத்தியப் பாடத் திட்டப் புத்தகத்தில், ஒரு பக்கச் சார்பான கேலிச் சித்திரத்தை இடம்பெறச் செய்து, தமிழகத்தின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள்''.

நன்றி: ஜூனியர் விகடன் - 16 ஜூன் 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்