மரக்காணம் கலவரம் - உண்மை அறியும் குழு அறிக்கை

பகிர் / Share:

25.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் தலித் மக்கள் மற்றும் அவர்களின் வீடுகள் உடைமைகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதைக் குறித்து ம...
25.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மரக்காணத்தில் தலித் மக்கள் மற்றும் அவர்களின் வீடுகள் உடைமைகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதைக் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக உண்மை அறியும் குழுவின் அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரத்தில் நடைபெற்ற கோடி வன்னியர்கள் கூடும் ‘சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா’வையொட்டி 25.4.2013 அன்று கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் காலனி (தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு) கட்டையன் தெரு, இடை கழியூர், கூனிமேடு ஆகிய இடங்களில் தலித் மக்கள் தாக்கப்பட்டது மற்றும் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டது குறித்த உண்மைகளை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகம் (ம.சி.உ.கழகம்), தமிழ்நாடு & பாண்டிச்சேரி, ஒரு குழுவினை அமைத்தது. குழுவில் பங்கு பெற்றவர்கள்:

பேராசிரியர் சரசுவதி-தலைவர், ம.சி.உ.கழகம், தமிழ்நாடு & பாண்டிச்சேரி

திரு. பா. செயப்பிரகாசம், எழுத்தாளர்

திரு. த. முகேஷ், பொறியாளர் - ம.சி.உ. கழக மாநில பொதுக் குழு உறுப்பினர்

திரு. ராகவராஜ் - ம.சி.உ. கழக மாநில பொதுக் குழு உறுப்பினர்

திரு. கௌதம் பாஸ்கர் - புதுவை சட்டக் கல்லூரி மாணவர்.

உண்மை அறியும் குழுவினர் 29.4.2013 திங்களன்று தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும் வீடுகளையும் தலித் மக்களையும் நேரில் சென்று பார்த்தனர். மக்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறிய தகவல்கள், அவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலங்கள், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆகியவற்றோடு உண்மையறியும் குழுவின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

1.            மரக்காணம் காலனி, கட்டையன் தெருவில் வாழும் அஞ்சலை, க/பெ. நாராயணசாமி இவர்களின் வீடு முற்றாக எரிக்கப்பட்டு வெறும் குட்டிச்சுவர்களே மிஞ்சியிருந்தன. வீட்டிலிருந்த பண்ட பாத்திரங்கள், கிரைண்டர், மின் விசிறி போன்ற அனைத்தும் எரிந்து கருகிக் கிடந்தன. அரிசி எரிந்து சாம்பலாகி இருந்தது. கண்ணீர் மல்க திருமதி அஞ்சலை கூறியது:

                “சம்பவம் நடந்த அன்று இந்த கிராமத்தின் வலது பக்கம் பா.ம.க.வைச் சேர்ந்த சேதுவின் தோட்டத்தில் நிறைய பேர் கூடியிருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் குடித்திருந்தார்கள். மத்தியானம் 12 மணி அளவில் அவர்கள் கையில் வெட்டரிவாள், உருட்டுக் கட்டை, பெட்ரோல் குண்டுகளுடன் எங்கள் பகுதியை நோக்கி வருவதைப் பார்த்து, எங்களைத் தாக்கத்தான் வருகிறார்கள் என்று எண்ணி, உயிரைக் காத்துக் கொள்ள மேற்குப் பக்கம் ஓடி விட்டோம். அங்கிருந்து ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, வீடுகளை உடைத்து, பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். பெட்ரோல் குண்டு ‘டமால்’ என்று வெடித்து, குப்பென்று தீயும் புகையும் மேலெழுந்தது. எங்களது கூரை வீடுகள் கொளுந்துவிட்டு எரிவதைத் துடிக்கத் துடிக்கப் பார்த்துக் கொண்டு நின்றோம்” என்றார்.

2.            அடுத்த வீட்டில் செல்வியம்மா என்பவர் சொந்தக் கோயிலாக அங்காளம்மன் கோயிலை நடத்தி, பராமரித்து வருகிறார். பூசாரியும் அவரே. கோயிலையொட்டி ஒரு சிறு கடையும் நடத்தி வந்தார். பெட்ரோல் குண்டுகளை வீசி, கோயிலையும் கடையையும் கொளுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் பா.ம.க.வினரின் மஞ்சள் சீருடை அணிந்திருந்ததாக, செல்வியம்மா சொல்கிறார். இந்த செய்தியை நாங்கள் சந்தித்த ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தினார்கள். பூசாரி செல்வியம்மா சொன்னவை:

                “கோமுட்டி சாலை என்ற இடத்தில் வன்னியர்கள் தங்கியிருந்தார்கள். அங்கிருந்து தைலக்காடு வழியாக ஓடி வந்தார்கள். 25-ந் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் தீ மிதித் திருவிழாவில் கலந்து கொள்ள நானும், மகளும், குழந்தைகளும் ரோட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது வன்னிய ஆட்கள் திமு திமுவென்று ஓடி வருவதைப் பார்த்தோம். பக்கத்தில் முந்திரிக் காடும், தைலமரக் காடுகளும் நிறைந்திருந்த இடத்தில் ஒளிந்திருந்தார்கள். எல்லோர் கையிலும் ஆயுதம் வச்சிருந்தாங்க. கோயில் கட்டுவதற்கு ரூ.40 ஆயிரம் வரை தேவைப்பட்டது. வருகிறவர்கள் போட்ட உண்டியல் காசு மூலம் ரூ.36 ஆயிரம் சேர்த்து வைத்திருந்தேன். 7 பவுன் நகை வச்சிருந்தேன். ரூபாய், நகை அத்தனையையும் கொள்ளையடித்து போய் விட்டார்கள். கடையும் சாமான்களும் ரூ.25 ஆயிரம் பெரும். எல்லாம் எரிந்து போயின. பண்ட பாத்திரம் எல்லாமும் கொளுத்தி விட்டார்கள். கோயிலோடு சேர்ந்து அங்காளம்மன் சாமியும், அருகிலிருந்த புற்றும்கூட எரிந்துப் போச்சு” என்றார்.

3.            மணமகன் : ஆ - அருண்    மணமகள் : ஆ. அனுசுயா

                மணநாள் : 27.5.2013 - திங்கட்கிழமை என்றிருந்த திருமண அழைப்பிதழை நாங்கள் கண்டோம். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த மணமகள் ஆ. அனுசுயாவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. மணமகள் அனுசுயா பிளஸ் டூ படித்திருக்கிறார். திருமணச் செலவுக்காக வைத்திருந்த மூன்று லட்ச ரூபாயும், 15 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக அனுசுயாவும், அவருடைய தாயாரும் கண்ணீர் மல்க துயரத்துடன் தெரிவித்தார்கள். “இரவு தங்குவதற்கு இடமில்லாமல் தூரத்தில் இருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டில் தினமும் தங்கிவிட்டு, பகலில் திரும்புகிறோம்” என்று வேதனையோடு சொன்னார் அனுசுயா. தன்னுடைய திருமணம் நடக்குமா என்ற துயரமும் அவர் பேச்சில் இழையோடியது.

4.            அங்காளம்மாள் என்பவரது வீடு எரிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் வெந்து உருகிய பாத்திரங்கள் மட்டுமல்ல, தீ வைத்தவர்கள் குடித்துவிட்டுப் போட்ட கிங் பிஷர் (Kingfisher) பீர் பாட்டில்கள் 20-க்கும் மேல் கிடந்ததை நாங்கள் காண நேரிட்டது. இவர்கள் எரித்ததில் பலாமரம்கூட தப்பவில்லை. நிறைய காய்களைச் சுமந்து நின்ற பலாமரத்தைச் சுற்றிப் போடப்பட்ட வேலியும் காய்களும் கருகிக் கிடந்தன. கடைசி நேரத்தில் போலீஸ் வந்து விரட்டியதால், போகிற போக்கில் ஒரு வீட்டுக் கூரையில் வைத்துவிட்டுப் போன நெருப்பு மேலும் பரவாமல் அணைக்கப்பட்டிருந்த அடையாளத்தைக் கண்டோம்.

5.            தில்லையாம்பாள் என்ற 67 வயது மூதாட்டியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் பக்கத்தில் போடப்பட்டிருந்த வைக்கோல் போரும் எரிந்து போயிருந்தன.

6.            சென்னையில் பணியாற்றும் கணேசன் என்பவருடைய செங்கற்களால் கட்டப்பட்ட வீடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. சன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு தூள் தூளாகச் சிதறியிருந்தது. கண்ணாடியை உடைத்த கல்லும் அருகிலேயே கிடந்ததைக் காண முடிந்தது. கணேசனுடைய தம்பி மனைவி தேவி. இவர் மகளிர் சுயநிதிக் குழுத் தலைவி. சுயநிதிக் குழுவின் தொகை ரூ.10 ஆயிரமும் தன்னுடைய 4 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார், தேவி.

கூலித் தொழிலாளியான கலைவாணன், வயது 45. தலையில் வெட்டுக் காயத்துடன் கட்டுப் போடப்பட்டு காட்சித் தந்தார். 20 பேர் கொண்ட கும்பல் விரட்டி வந்ததாகவும், மற்றவர்கள் ஓடிவிட்டதாகவும், தான் மட்டும் அகப்பட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தாக்கிய அதிர்ச்சிக் காரணமாக நாக்கு லேசாய் துண்டிக்கப்பட்டு பேச்சு தடுமாறியது.

துரைசாமி என்பவர் கையில் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக அவருடைய மனைவி வித்யா தெரிவித்தார்.

துரையின் மனைவி ரூபாவதி (வயது 35) என்பவர் வீட்டைக் கொளுத்தும்போது, சினைப் பசுவும் எரிந்து இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

ஆண்கள் முன்னிலையில் பேசத் தயங்கிய சில பெண்கள், பேராசிரியர் சரசுவதியைத் தனியாக அழைத்து, ‘தாய் மாதிரி இருக்கீங்க, ஒங்ககிட்ட சொல்றதுக்கென்னம்மா - ஊருக்குள்ள நொழஞ்ச ஆம்பளைங்க, ஜட்டியைக் கழட்டி தலமேல போட்டுக்கிட்டு, முன்பக்க வேட்டியை விரிச்சி விலக்கிக் காட்டி, வாங்கடி, வாங்கடி என்று கூப்பிட்டாங்கமா, நாங்க அப்படியே கூசி குறுகிப் போனோம்மா!’ என்றார்கள்.

இடைகழியூர்

மரக்காணம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இடைகழியூர். அங்கு கழிக்குப்பம் அம்மச்சியம்மன் கோயில் தெருவில் எரிக்கப்பட்ட இரு வீடுகளைப் பார்வையிட்டோம்.

மணிமேகலை அவருடைய மகன் பார்த்திபன், மருமகள் காஞ்சனா. மகனுக்கு மூன்று குழந்தைகள். அந்த விதவைத் தாய், மகன் இருவரது வீடுகளும் கொளுத்தப்பட்டிருந்தன. மகனும், மருமகள் காஞ்சனாவும் தவணை முறையில் வாங்கியிருந்த கிரைண்டர், டி.வி., டி.வி.டி. பிளேயர், மின்விசிறி என 2 லட்சம் பெறுமான பொருட்கள் எரிந்து போயிருந்தன. எட்டு சவரன் நகையைக் காணவில்லை எனவும் தெரிவித்தார்கள். பிரதான சாலையில் முதலில் இருப்பது ஒரு செட்டியார் வீடு. முதலில் இருந்த செட்டியார் வீடு தாக்குதலுக்கு உள்ளாக வில்லை. அதற்கடுத்து இருந்த தலித் வீடுகள் குறி வைத்து கொளுத்தப்பட்டிருந்தன.

கொளுத்தப்பட்ட இரு வீடுகளுக்கும் எதிரில் ஒரு மேல்நிலை குடிநீர்த் தொட்டி உள்ளது. தண்ணீரை எடுத்து தீயை அணைத்து விடுவார்கள் என்பதற்காக தொட்டியிலிருந்து தண்ணீர் பிடிக்கும் குழாயை வெட்டிவிட்டிருக்கிறார்கள்.

தீ வைப்பு அடுத்தடுத்து இருந்த தலித் வீடுகள் மீதும் நடந்திருக்கும். ஆனால் நிறையப் பேர் திரண்டு வந்துவிட்டதால், தாக்கிய கும்பல் எதிர்கொள்ள முடியாமல் திரும்பியிருக்கிறது.

கூனிமேடு

கூனிமேடு பகுதியிலுள்ள பள்ளிவாசல் அருகில் ஒரு சுற்றுச் சுவர், விழாவுக்கு வந்தவர்களின் வாகனம் மோதி இடிக்கப்பட்டிருந்தது. எதிரிலிருந்த பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடத்துக்குள் மது பாட்டில்கள் வீசப்பட்டதாக தெரிவித்தார்கள். அருகிலுள்ள கடைகள் தாக்கப்பட்டிருந்தன. மகளிர் அரபிப் பாடசாலையில் பயின்று கொண்டிருந்த பெண்கள் மீதும் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தினர். பெண்கள் பயந்து சிதறி ஓடியதைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள், முஸ்லீம்கள், வன்னியர்கள், தலித்துகள், மீனவர்கள் என்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கலவரக்காரர்களை எதிர்த்து விரட்டியடித்திருக்கிறார்கள். தாக்கியவர்கள் எல்லோரும் குடிபோதையில் இருந்ததாகவும், அரை மணி நேரம் கலாட்டா நீடித்ததாகவும், இந்திய தேசிய முஸ்லிம் லீக்கின் கூனிமேடு பகுதி செயலர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.மனோகரன், ஐ.பி.எஸ்.ஐ சந்தித்தோம்.

‘2002 ஆம் ஆண்டே மோதல்கள் நடந்திருக்கும் பகுதியாயிற்றே - சமீபத்தில் தர்மபுரியிலும் தாக்குதல் நடந்திருக்கிறது - காவல்துறை ‘அலர்ட்’ஆக இருந்திருக்க வேண்டாமா’ என்று கேட்டதற்கு,

‘அது நடந்து 10 வருஷம் ஆச்சே. ஏற்கனவே மாமல்லபுரம் இளைஞர் திருவிழாவுக்கும், திண்டிவனம் தீமிதித் திருவிழாவுக்கும் போலீஸ்காரர்களைப் பிரித்து அனுப்பிவிட்டோம். அதனால் போலீஸ் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால் நானே நேரில் மரக்காணம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புப் பகுதியில் நின்றேன்” என்று தெரிவித்தார். மக்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றும் பொதுவாகக் கூறினார்.

வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா, அவை பற்றிய விவரங்கள் தர இயலுமா என மரக்காணம் காவல் நிலைய துணை ஆய்வாளர் சரசுவிடம் கேட்டோம். அவர்,

“வழக்கு எங்கள் கையில் இல்லை. ஏழு சிறப்புப் படைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு, விசாரிக்கும் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் இதைப் பார்த்து வருகிறார்கள். விசாரணை பற்றிய அனைத்துத் தகவல்களும் மேல்நிலையிலுள்ளவர்களுக்கே சமர்ப்பிப்பார்கள். எங்களுக்கு அளிக்கப்படுவதில்லை” என்று தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான கட்டையன் தெருவிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள அகரம் என்ற ஊரிலிருக்கும் பா.ம.க. ஒன்றியச் செயலாளர் சேது என்பவரைச் சந்திக்கச் சென்றோம். அவர் ஊராட்சி ஒன்றியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார். “25-ந் தேதி தலித் மக்கள் மீதான தாக்குதல் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்றும், மதியம் இரண்டரை மணி வரை சேது வீட்டில் இருந்ததாகவும், மதியம் இரண்டரை மணிக்குமேல் அவர் இறால் பண்ணை மீன்களுக்கு உணவு வாங்கவும், பழுதான இயந்திரப் பாகங்களை வாங்கி வருவதாகவும் கூறிச் சென்றதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்பது தனக்குத் தெரியவில்லை” எனவும் அவருடைய மனைவி தெரிவித்தார்.

உண்மை அறியும் குழுவினரின் ஆய்வு முடிவு:

1.            முன் கூட்டியே துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்:

                பாண்டிச்சேரியிலிருந்து / பாண்டிச்சேரி வழியாக விழாவிற்கு வந்தவர்கள், பாண்டிச்சேரியில் ஏராளமான காலி மது பாட்டில்களையும் சேகரித்திருக்கிறார்கள். தாங்கள் பயணம் செய்த வாகனங்களிலேயே தாக்குதல்களுக்கான ஆயுதங்களையும் எடுத்து வந்திருக்கிறார்கள். தாக்குதலை நடத்தியவர்கள் வெளியூர்காரர்கள்தான் என்றாலும், அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து உதவியிருப்பவர்கள் உள்ளூர்க்காரர்களே. பிற சாதியினர் வீடுகள் எதுவும் தாக்கப்படவில்லை. உதாரணமாக, கழியூர் குப்பத்தில் பிற சாதியினர் வீடுகளைத் தாண்டி இருக்கும் தலித் வீடுகளை, உள்ளூர்காரர்கள்தான் அடையாளம் காட்டியிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதைப் போலவே மரக்காணம் கி.க. சாலையிலிருந்து பார்க்கும்போது, காடுகள் அடர்த்தியாக இருப்பதன் காரணமாக, காலனி இருப்பதே கண்களுக்குத் தெரியாது. உள்ளூர்க்காரர்கள் காட்டியிருக்காவிட்டால், வெளியூர்க்காரர்கள் அறிய வாய்ப்பில்லை.

2.            வாக்கு வங்கி அரசியல்

                மரக்காணம் பகுதியில் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் தலித் மக்கள். குறிப்பாக 18வது வார்டில் (காலனி) வன்னியர்களுக்கு ஒரு வாக்கும் கிடைக்காது என்று உள்ளூர் பா.ம.க.வினருக்குத் தெரியும். ஆனால் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் அவர்களை உள்ளூர்காரர்கள் நேரடியாகத் தாக்க முடியாது என்று இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வெளியூரிலிருந்து வருபவர்களுக்குத் தகவல் கொடுத்து, உசுப்பிவிட்டிருக்கலாம். பா.ம.க. கவுன்சிலர் சேதுக்கு இதில் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது.

3.            காவல்துறையின் மெத்தனம்:

                2002 ஆம் ஆண்டிலிருந்தே சமுதாய மோதல் வரலாறு கொண்ட பகுதி என்பதாலும், அண்மையில் தருமபுரி தாக்குதல் நடந்திருப்பதைக் கருத்தில் கொண்டும் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி, தாக்குதல்களும் மோதல்களும் நிகழாமல் செயல்பட்டிருக்க வேண்டும். அன்று அந்தப் பகுதியில் போதுமான காவலர்கள் இல்லை என்பது, காவல் துறையின் மெத்தனப் போக்கையும், அலட்சிய அணுகுமுறையையும் காட்டுகிறது.

4.            அரசின் பாராமுகம்:

                இரு சமூகத்தினரிடையும் தொடர்ந்து நிலவும் விரோத மனப்பான்மையைப் போக்குவதற்கும் சுமூக நிலையை உருவாக்குவதற்கும் அரசுகள் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளுவதில்லை. மோதல்கள் ஏற்படும்போது மட்டுமே செயல்படும் அரசு எந்திரம், சாதாரண காலங்களில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு எத்தகைய திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.

பரிந்துரைகள்:

  1. மரக்காணம் காலனி மக்களுக்கு பிரதானத் தொழில் உப்பள வேலைகளே. ஆனால், உப்பளங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்களுக்குத்தான் வேலை கிடைக்கும். அவர்களில் எவரும் உப்பள ஒப்பந்தக்காரர்கள் இல்லை. பெரும்பாலும் வன்னியர்களும் சாதி இந்துக்களுமே உப்பள உரிமையாளர்கள். தலித் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த, அரசு, அந்தப் பகுதியில் வேலை வாய்ப்பு தரும் தொழில்களை, தொழிற்சாலைகளை உருவாக்கி ஊக்குவிக்க வேண்டும்.
  2. தங்கள் குடியிருப்பின் அருகிலிருக்கும் காடுகள், சமூக விரோத சக்திகளுக்கு புகலிடமாக மாறி, தங்கள் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக மக்கள் குறிப்பாக உணருகிறார்கள். எனவே அரசாங்கம், காடுகள், சமூக விரோத சக்திகளின் கூடாரமாக மாறாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
  3. கூனிமேடு பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து தாக்கியவர்களை விரட்டியடித்தார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. இத்தகைய சமூக நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புகளை அனைத்து தரப்பினரும், மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், இயக்கங்கள் மற்றும் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
  4. உயிர், உடல், பொருள் இழப்புகள் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, உரிய நிவாரணங்கள் உடடினயாக வழங்கப்பட வேண்டும்.
  5. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப, மக்கள் அச்சமற்று வாழ்வதற்கான நம்பிக்கையையும் சூழலையும் உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல அது நமது அனைவரின் பொறுப்பும் ஆகும்.

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content