பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2012 - இந்தியா

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, 29.10.2012, திங்களன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்.




தமிழகத் தலைநகரில் பழ நெடுமாறன் தலைமையில் அணு உலை எதிர்ப்பு அணியினர் ஒன்றிணைந்து 29.10.2012 திங்களன்று, சட்டமன்றம் தொடங்கிய நாளில், போராடும் கூடங்குள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தத் திரண்டனர்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் அனைவரும் ஒன்றிணைந்து கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்) தலைமையில், பழ. நெடுமாறன் (தமிழர் தேசிய இயக்கம்) சட்டமன்ற முற்றுகைப் போராட்டப் பேரணியைத் தொடங்கி வைத்தார். இ.க.க. (மா.லெ மக்கள் விடுதலை இயக்கம்) தோழர் மீ.த. பாண்டியன் ஒருங்கிணைப்புப் பணியினை ஆற்ற, தோழர்கள் வை.கோ (ம.தி.மு.க), தொல். திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பேரா. ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், வியனரசு (பாட்டாளி மக்கள் கட்சி), தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தெகலான் பாகவி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி), காலித்முகமது (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா), பாலசுந்தரம் (சி.பி.ஐ. எம்.எல்-விடுதலை), குணங்குடி அனிபா (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்), கே.எம்.செரீப் (தமிழ்நாடு மக்கள் சனநாயகக் கட்சி), அரங்க குணசேகரன் – (தமிழக மக்கள் புரட்சிக்கழகம்), செல்வி (தமிழ்நாடு மக்கள் கட்சி), செந்தில் (சேவ் தமிழ்ஸ்), திருமுருகன் (மே 17 இயக்கம்), கிறிஸ்டினா (பெண்கள் முன்னணி), ஜே.கே.சு. மணி (தமிழ்நாடு மக்கள் மீனவர் சங்கம்), தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு, பூவுலகின் நண்பர்கள், காஞ்சி மக்கள் மன்றம், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற ஐம்பது அமைப்புக்களும் பங்கேற்றிட முக்கியத் தலைவர்கள் உரையாற்றினர்.

பேரணியில் பங்கேற்ற சுமார் பத்தாயிரம் பேர் கைது செய்யப்பட்டு  சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கைதாகிய பா.செயப்பிரகாசம் புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

இப்போராட்டத்தை பற்றிய பா.செயப்பிரகாசத்தின் முழுமையான கட்டுரையை இங்கு வாசிக்கலாம்.





அணுஉலைக்கு எதிரான படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்களின் கூட்டறிக்கை 

அணுஉலைக்கு எதிரான படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்களின் கூட்டறிக்கை 17.09.2012 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான படைப்பாளிகளும், பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் – எழுத்தாளர் கவின்மலர், எழுத்தாளர்கள், சந்திரா, பா.செயப்பிரகாசம், யமுனா ராஜேந்திரன், கவிதா முரளிதரன், விஷ்ணுபுரம் சரவணன் உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு இந்த கூட்டறிக்கையை வெளியிட ஏற்பாடு செய்திருந்தது.

இந்த அறிக்கையை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடும் நிகழ்வில்  பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் வ.கீதா, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பூவுலகின் நண்பர்கள் ஆர்.ஆர்.சீனிவாசன், இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம், தாமிரா ஆகியோர் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கான தங்கள் ஆதரவையும், அரசாங்கத்துக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர்.


பா.செயப்பிரகாசம் பேசுகையில், கூடங்குளத்தில் பெண்களையும் குழந்தைகளையும் போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறுகின்றனர். 1942ம் ஆண்டு, மும்பையில் கப்பற்படைக் கலகம் நடைபெற்றது. அந்தக் கப்பற்படைக் கலகத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் நடைபெற்றது.  எந்த நேரத்திலும் பிரிட்டிஷ் படைகள், அந்தப் போராளிகளைத் தாக்கி கைது செய்து விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது.   அந்தப் போராளிகளைச் சுற்றி இரண்டு அரண்கள் அமைக்கப்பட்டன.  முதல் அரணாக நின்றது பெண்களே.  பிரிட்டிஷ் போலீஸ், அந்தப் போராளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றால்,  அந்த பெண்கள் அரணைத் தாண்டித்தான் கைது செய்ய வேண்டும் என்ற நிலை.  ஆகையால், பெண்கள் போராட்டத்தில் தேவையின்றி ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தவறு என்றார்.


இறுதியாக பேசிய கீதா, எங்களது கோரிக்கை, கூடங்குளத்தில் போடப்பட்டள்ள 144 தடைச் சட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும், சிறை வைக்கப்பட்டுள்ள மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், போராடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான, குடிநீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று கூறினார்.

நன்றி: சவுக்கு



ம.இலெ.தங்கப்பாவுக்கு இலக்கிய விருது - 17 செப்டம்பர் 2012

வேலூர் இலக்கியப் பேரவை சார்பில் கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான ம.இலெ.தங்கப்பாவுக்கு, அரசு தகவல் தொகுப்பு விவர மைய ஆணையர் செ.ராஜேந்திரன் விருது வழங்கி பாராட்டினார். நினைவுப் பரிசும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் கொண்ட இந்த விருது வேலூர் கோட்டையில் நடைபெறும் நூலாறு புத்தகக் கண்காட்சி அரங்கில் சனிக்கிழமை வழங்கப்பட்டது. 

விழாவில் எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அழகிய பெரியவன், பார்த்திபராஜா, பர்வீன் சுல்தானா, பெருமாள் முருகன், பா.ஜெயப்பிரகாசம்  ஆகியோர் பங்கேற்று பேசினர். 

விழாவில் பங்கேற்ற எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் "தனது சொல்லுக்கும் செயலுக்கும் சிறிதும் இடைவெளி இன்றி வாழ்பவர் தங்கப்பா. தமிழுக்கும், தமிழனுக்கும் ஆபத்து நேரும்போதெல்லாம் கள போராளியாய் இறங்கி நிற்பவர். தான் வாழும் புதுச்சேரிக்கு புகழ் சேர்த்து வருகிறார்" என பேசினர்.


அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு -நூல் வெளியீடு 
இடம்: பூவுலகின் நண்பர்கள், சென்னை புத்தககண்காட்சி.
நாள்: 08.01.12

“அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு” நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில் 08.01.12 அன்று மாலை 4 மணியளவில் நடை பெற்றது. இது A4 அளவில், முழுவதும் வண்ணத்தில், 36 பக்கங்களுடன், 75 முக்கிய விளக்க படங்களுடன், கடித வடிவில் ஈழ நியாயத்தை விளக்கும் நூல் இது. எழுத்தாளர் இராம கிருஷ்ணன் , கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் வ.கௌதமன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்

நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் :
  1. ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும்
  2. சிங்களத்தின் வெற்றியா?தத்துவங்களின் இயலாமையா?
  3. பொதுசன வாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான அரசியல் பாதை.
  4. கூடங்குளம் அணு உலை -கொஞ்சம் சோறு நிறைய நஞ்சு, ஆசிரியர் பா.செயப்பிரகாசம்
நிகழ்வு காணொளியை இங்கு காணலாம்.




கூடங்குளத்தைத் திறக்காதே, கல்பாக்கத்தை மூடு - 04 பிப்ரவரி 2012

சென்னை இலயோலா கல்லூரியில் கடந்த 04/02/2012 அன்று கூடங்குளம், அணுஉலை – அழிவின் விளிம்பில் மக்கள் – என்ற தலைப்பில், எழுத்தாளர் அருள் எழிழன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மணிகண்டன் அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அமைய அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது .

பாமரன் முதல் கொண்டு ஞானிவரை என்று சொல்லத்தக்க வகையில் பல படைப்பாளிகள் அவரவர்தம் கருத்தை முன்வைத்தனர்.

1970களில் கரிசல் இலக்கியம் படைத்த திரு.செயப்பிரகாசம், அணு உலைகளுக்கெதிராக போராடுவது இங்கே மிகப்பெரிய தேசத்துரோகமாக பார்க்கப்படுகின்றது. ஆகவே நாமனைவரும் தேசத்துரோகிகள். எனவே அங்கு போராடும் லட்சக்கணக்கான மக்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என தனது உரையை ஆரம்பித்தார். முன்னாள் ஜனாதிபதி உயர்திரு அப்துல் கலாம் அவர்களின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமானது என்றும், பேச்சுவார்த்தக்கு செல்லும் வழியில் அணு உலைக்கு எதிராகப் போராடியவர்களை தாக்கியது என்பது, அடிப்படை ஜனநாயகக் கொலை என்று முடித்தார்.

நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.

நன்றி: கீற்று



வேம்பு மக்கள் சக்தி இயக்கம் - விளாத்திகுளம் புத்தக கண்காட்சி, 22.09.2012

தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் காட்சி ஊடகத்தின் தாக்கத்தினால் மெல்ல மெல்ல செல்லரித்துப் போன வாசிப்பு பழக்கத்தினை மீட்டுவாக்கம் செய்யவும் இளைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை கொண்டு போய் சேர்க்கும் பொருட்டும் வடந்தோறும் விளாத்திகுளத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் புத்தக கண்காட்சியனை நடத்திவருகிறது. அதன் நீட்சியாக 22.09.2012 முதல் 29.09.2012 வரை புத்தக கண்காட்சி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்றது. ஒவ்வொரு மாலை 6.30 மணியளவில் மண்ணின் கலைகள் மற்றும் இலக்கிய பேரளுமைகளின் உரைவீச்சு நடைபெற்றது.

துவக்க நாளன்று மண்ணின் மைந்தர் கரிசல் இலக்கிய பேரளுமை மேதகு பா.செயப்பிரகாசம் இலக்கிய பேரூரையுடன் நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில் தென்பகுதி கரிசல் எழுத்தாளர்கள் சூரங்குடி அய்யா அ.முத்தானந்தம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு மார்கண்டேயன், இசை விற்பனர் மம்முது ஆகியோர் கலந்து கொண்டனர். காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, பாரதி புத்தகாலயா, விகடன், அன்னம் க்ஸ்,காவ்யா போன்ற பதிப்பகங்களின் விற்பனை அங்காடிகள் ஏழு நாட்கள் புத்தகங்களை விற்பனை செய்தனர்.



காலச்சுவடு பதிப்பகத்தின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு நிகழ்வு, ஜனவரி 8, 2012 சென்னை புக் பாயிண்ட் அரங்கு

காலச்சுவடு பதிப்பகத்தின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு நிகழ்வு ஜனவரி எட்டாம் தேதி புக் பாயிண்ட் அரங்கத்தில் நடந்தது. ஒன்பது நூல்களில் நான்கு இலங்கையைச் சேர்ந்தவர்களின் ஆக்கங்கள். அவற்றில் ஒன்று சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட புதினம். புத்தகக் காட்சி தொடங்கி மூன்றாம் நாள் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு எதிர்பாராத அளவுக்குப் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

புத்தகக் காட்சி தொடங்கி மூன்று நாள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற இந்த ஒன்பது நூல்கள் வெளியீட்டு நிகழ்வுக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களே. பா.செயப்பிரகாசம், ஜி.குப்புசாமி, சா. கந்தசாமி, அம்ஷன் குமார், இரா. முருகன், சல்மா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வுக்கு வந்திருந்தனர்.


'ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்' நூல் வெளியீட்டு விழா - 7 ஜூலை 2012

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து முனைவர் த.செய ராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பன்மைவெளி வெளியீட்டகம் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக ஆக்கியது.


ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடு வதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13 ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளக்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு எனப் பல்வேறு தலைப்பு களில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.

இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் கடந்த 07.07.2012 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றிய அரங்கில் நடை பெற்றது.


தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செய லாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமை யேற்றார். த.க.இ.பே செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர், திரு இராமச்சந்திரன் (அனு ஃபைன் ஆர்ட்ஸ்), ஆகியோர் நூல்படி பெற்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத் துரை வழங்கினர்.


எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பேசிய போது, இந்திய அரசு தமிழீழத்தை அழிக்க என்னென்ன வகையில் உதவியிருக்கிறது என்பதை பட்டியலிடும் இந்நூலின் பக்கங்களைச் சுட்டிக் காட்டினார்.

கவிஞர் முழுநிலவன் நன்றி நவின்றார். இக்கூட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டு இந்நூலை வாங்கிச் சென்றனர்.









மக்கள் கவிஞன் இன்குலாப்புக்கு பாராட்டு விழா மற்றும் அவரது "நேர்காணல்" நூல் வெளியீட்டு விழா

சென்னை பாவாணர் அரங்கம் - ஞாயிறு, 13.05.2012

சிலருக்கு பாராட்டுவிழா நடத்தும்போது பார்வையாளர்கள் நெளிந்து, தங்கள் இருக்கைகளில் குறுகுறுத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட விழா அல்ல அது. அறிஞர்கள் பேச பேச இன்குலாப் தான் இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தார். பேசியவர்கள் ஒன்றும் அப்படிப் பாராட்டிப் பேசிவிடவும் இல்லை. இன்குலாப்போடு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர் மேல் தாங்கள் வைத்திருக்கும் உண்மையான அன்பை வெளிப்படுத்தினார்கள். இன்குலாப் என்ற தனிமனிதன், மக்களின் விடுதலையை மட்டுமே நேசித்த அந்த மனிதனின் வரலாற்றைச் சொல்லிச் சென்றார்கள். கவிதையாகவே அமைந்துபோன அவரது வாழ்வினை விதந்தோதினார்கள். வீரம் செறிந்த அவரது நக்சல்பாரி சார்ந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்கள். அவரது கல்லூரித் தோழர்கள் அவரது இளமைப் பருவத்தை நினைவுப் படுத்தினார்கள்.

நிகழ்ச்சிக்கு க.பஞ்சாங்கம் தலைமை வகித்தார். பா.செயப்பிரகாசம், அறிவுமதி, இரா.ஜவஹர், கவின்மலர், எட்வின், மணிகண்டன், சரஸ்வதி, தஞ்சை கவிராயர், சுடர் முருகையா, செ.கணேசலிங்கன் என்று அறிஞர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.




நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.










விழா உரையை இங்கு படிக்கலாம்.





கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்