கரிசல் வெள்ளாமை

கரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது.

வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘சலா’ வரிசையுடன் சிலம்பம் ஆடியிருந்தார். அவருக்கு வட்டாரத் தாய்மடி அற்புதமாகச் சுரப்பு கொடுத்தது, படைப்பபுத் தொழிலில் இருந்தவா்களும் வாசகரும் இவா் கையாளுகிற மொழியை அவ்வளவு சாதாரணமாய் ஒதுக்கிவிட முடியாது என்பது உணர்ந்துள்ளார்கள்.

மண்ணின் மைந்தா்களது வருகைக்கு முன்னர் வரை, ஒரு நூற்றாண்டாக பொதுமொழி என அங்கீகரிக்கப்பட்ட உரைநடை இருந்தது. எழுத்து இலக்கியம் படித்த அறிவாளிக் கூட்டத்தின் மொழியாக பொதுமொழி வெளிப்பட்டது. இந்தப் பொதுமொழி முதலில் ஒரு வாசகனாய் என்னையும் என் போன்றவா்களையும் தொந்தரவு பண்ணியது. எனக்கும் என் போன்றோருக்கும் அந்நியப்பட்டதாக இருந்ததை உணர்ந்தோம். ஆத்துக்கு, ரேழி, பூஜை புனஸ்காரம், அம்பி, தர்மிஷ்டை, சந்தியா வந்தனம், அபிஷ்டு, விச்ராந்தியாய், அமானுஷ்யம் போன்ற சொற்களும், வந்தேளா, போனேளா என்ற பேச்சு மொழியும் மக்களினும் மேலானவா்களாக கருதப்பட்ட பிராமணா்களால் பயன்படுத்தப்பட்டவேளையில் அவை எம்போன்றோருக்கு தலைவலி தந்தது. சாதியிலும் கல்வியறிவிலும் உயா்ந்தோராக அங்கீகாரம் இருந்ததால் அவர்களது மொழி இலக்கியப் பொதுமொழியாக கருதப்பட்டது.

படித்த, அறிவாளிக் கூட்டத்தின் மொழி என்று அதற்கு அப்படியொரு அங்கீகாரம்; சாதாரண மக்களின் உயிருள்ள பேச்சுமொழி என்பதில் புறக்கணிப்பு. வட்டார வாய்மொழி எழுத்து வடிவம் பெற்றபோது, புரியவில்லை என்ற அலட்சியத்துடன், கொச்சையாக எழுதுகிறான் என்றொரு கோளாறும் சொன்னார்கள். “பாஷை புரிவதில்லை என்று நம்முடைய பிரயோகங்களை அவா்கள் அடிவற்றிலிருந்து வெறுக்கிறார்கள். பிரதேச மண்ணில் எங்கள் மக்கள் பேசுகிற வார்த்தைகளை அவா்கள் தள்ளுபடி செய்து மண்வாடையைப் போக்கி ரத்து செய்துவிடுகிறார்கள்” கி.ரா புலம்புகிற அளவுக்கு அட்டூழியம் அளவுமீறிப் போய்விட்டது.

தாய்மார்பிலிருந்து பெருக்கெடுக்கும் இந்தக் கொச்சையான அமிழ்தப்பால் சுவைதரவில்லை என்றார்கள் சிலர். அப்படியானால் சென்னைக் கொச்சை எப்படிப் புரிந்தது? வாழ்க்கைக்குக்குத் தேவைய்யாயிருக்கிற போது, அதனை நீங்கள் ஏற்றுக்கொண்டதும், இலக்கியம் என வந்த போது அதனை அப்புறப் படுத்தினீர்களே, எவ்வகையில் சரி? இதன் பொருள் என்ன? இலக்கியம், எழுத்து என வருகையில், அது வாழ்க்கைக்கு தொலைதூரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டுமென்ற கவருபட்ட கருதுகோள் தானே! அதிகாரமையம் கொண்ட தலைநகரமாக இருந்ததால் தலைநகரத்து மக்களின்மொழி (அடித்தட்டு மக்கள் மொழி) தவிர்க்க முடியாமல் கேலிக்குள்ளாகி அங்கீகாரம் பெற்றது.

உயிர்ப்புள்ள இந்த வாய்மொழியிலிருந்து இலக்கியம்செய்ய வருகிறறோம் என கரிசல் இலக்கியத்திற்கு ‘முன்னத்தி ஏா்’ பிடித்துக்கொடுத்த கி.இராஜநாராயணன் தனக்கு முன்னோடியாக கு.அழகிரிசாமியைக் குறிப்பிடுவார்.


கி.ரா அதை ஒரு வேலையாக எடுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். பிறகு பொன்னீலன், பூமணி, வீர.வேலுச்சாமி, பா.செயப்பிரகாசம், ச.தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, சோ.தா்மன், சூரங்குடி அ.முத்தானந்தம், மேலாண்மை பொன்னுச்சாமி, கதைப்பித்தன், சுயம்புலிங்கம் என்றொரு பட்டாளமே பின்னத்தி ஏா் பிடித்து, பொதுமலான கரிசல்மண்ணை பொங்குகொழிக்கச் செய்தார்கள். தமிழ் உரைநடை மண்ணின் வாசனை கம, கமவென்று வேறொரு வாசம்கொண்டு பரவியது.

எங்கெங்கு காணினும் கறுப்புமண், கானல், புஞ்சைக்காடு, மானாவாரி விவசாயம், மழைபேஞ்சா வெள்ளாமை - இது கரிசல் சீமை. சீமை என்பது பிரதேசம் எனப் பொருள் பெறும்.
“வறுத்திடித்த எள்பொடியை
வாகாகத் தூவிவிட்டு
நீர்தெளிக்கப் பொறுமுகின்ற
நிலையுடைய நெய்க்கரிசல்”
என்பார் பூமணி. தண்ணீர் பட்டால் ‘உஸ்’ என்று சீறி பொறுமுகிற கரிசல் கரம்பைக்கட்டி; சகட்டடி மழை போட்டு அடித்தால் முழங்கால் வரை இறங்குகிற களிமண்.

கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு,கொத்தமல்லி (தனியா) திணை, அவரை, துவரை என்று நவதானியங்கள் ஒரு தடவை மழைத்தண்ணி தெளிச்சாலும் தெளிச்சியாய் முகம் காட்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்திலன் மேல்எல்லையான பெருநாழி, சூரங்குடி, வேம்பார் தொடங்கி, தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, சங்கரன்கோவில் என்று தொடர்ந்து, விருதுநகா், ராஜபாளையம், தென்காசி என்று மேற்குமலை அடிவாரம் வரை இந்த வட்டாரம் விரியும். இந்த எல்லைப் பரப்புக்குள் பயிர்வகை, செடி, கொடி, மரவகைகள், விளையாட்டு, சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், உணவுமுறை எல்லாமே வித்தியாசமானவை. உலகளாவிய ஒரு பொதுக் கலாச்சாரத்தின் (ஏகாதிபத்தியக் கலாச்சாரம்) ஒரே முகமாக ஆக்க, தாக்குதல் இலக்கு கரிசலையும் குறிவைத்துச் சிதைத்துவருகிறது. அதன் புவியியல் முதல் வாழ்வியல் வரை சிதைப்பு நடைபெற்று வருகிற காலத்தும், வித்தியாசப்பட்ட அந்தமுகத்தை பதிவு செய்து காடடுவதுதான் இன்றைக்கு எங்களைப் போன்ற படைப்பாளிகளின் முன்னிற்கிற முக்கியமான வேலை.

இந்த மண்ணையும், மக்களையும் கி.ராஜநாராயணன் சுவாரசியமாகவும் நுணுக்கமாகவும பதிவு செய்தவா். தமிழ் நாட்டின் வேற வட்டாரங்களில் பூமிவாசனையோடு வாழ்க்கையைப் பதிவு செய்தவா்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்களின் வாழ்மொழி, வாய்மொழி இலக்கியப் பாரம்பரியங்களிலிருந்து உவமானங்கள், சொலவடைகள், சொல்லாடல்கள், விடுகதைகள், நெடுங்கதைகள், கிராமியக் கலைகள் தன்னால் முடிந்த அளவு வஞ்சனையில்லாமல் அள்ளிக் கொடுத்திருக்கிறார். அவரே ஒருமுறை சொன்னது போல் எடுக்க வேண்டியவை இன்னும் வண்டி வண்டியாக இருக்கின்றன.

கி.ரா.வின் முதலிரண்டு கதைத் தொகுதிகள், வேட்டி, கதவு ஆகியவை நிஜமாகவே முன்னத்தி ஏா் உழவு போட்டவை. கோபல்ல கிராமம் ஆந்திராவிலிருந்து குடிபெயா்ந்தவந்த மக்களைப் பற்றிய சொல்கதை; சொல்கதை என்பது நாவல், நவீனத்துக்கும் மேலானது. இந்த சொல்கதை முறையை, பின்னா் கரிசல் காட்டுக் கடுதாசிகளில் சுவாரசியமான, தனக்கேயான பாணியாக உருவாக்கிக்கொண்டார்.

‘கொண்டி’ என்ற சொல் இப்போது புழக்கத்தில் காணோம். ‘கொண்டி’ போட்ட கதவுகள் மறைந்து, நவீன மோஸ்தர் கதவுகள் வந்து விட்டதால், கொண்டியை என்ற வார்த்தையைக் கழற்றி எறிந்து விட்டார்கள். கொண்டி போட்ட கதவு, ஜப்தி செய்யப்பட்டு, ஊர்ப் பொது இடத்தில் வைக்கப்பட்டதினால் ஏக்கம்கொண்டு நையும் கௌழந்தைகள் பற்றிய உருக்கமான கதை ‘கதவு’.

கரண்டு, குடும்பத்தில் ஒரு நபா், கோமதி (ஆணாங்கியைப் பற்றிய கதை) ஜெயில், ஜடாயு போன்ற நல்ல கதைகள் ‘கதவு’ தொகுதியிலும், வேட்டி, வேலை வேலை வேலையே வாழ்க்கை, கரிசல்காட்டில் ஒரு சம்சார், கருவேப்பிலைகள் - மாதிரி பரிபூரணமான படைப்புகள் வேட்டி தொகுப்பிலும் இருக்கின்றன.

புதுப் புதுக் கருக்களை வைத்தே கதை எழுதனும் என்று அவருக்குப் பிறவியிலிருந்தே ஒரு மோகம் ஒன்றை எடுத்து விட்டால் பிறகு அந்தக் கருவைத் தொட மாட்டார் என்பதை. ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தார். அதனாலேயெ அவருடைய படைப்புக்கள் துலாம்பரமாகத் தெரிந்தன. அவருடைய படைப்புக்கள் மக்கள் பேசுகிற பாஷையில், அவா்கள் சிந்திக்கிற மனோஇயலில் அவா்கள் வசிக்கிற சூழ்நிலையில் அமைய நினைக்கிறவா். “அவா்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவா்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்” என்றார்.

மண்ணின் மற்றொரு பக்க வரலாறு தான் கோபல்லகிராமம். அந்த மக்களை கொள்ளை ஆசையோடு நேசித்ததால் தான் ‘சலாவத்தாய், ஏழு கோட்டை தப்பு. சேக்காளி, கெண்டை பண்ணுதல், கேலி செய்தல் பெண்ணாங்கி, ஆணாங்கி, செட்டையைத் தூக்கிக் கொண்டு என்று, அந்த மக்களின் மொழிகளில் பூமலா்வது போல் அர்த்தங்களின் வாசனை விரிகிறது. கர்ப்பத்தில் கிடக்கும் குழந்தை, கையை காலை விலுக், விலுக் என்று உதைத்தது முண்டுவது போல், சொற்களுக்குள் கர்பபங் கொண்ட அர்த்தங்கள் துடிக்கின்றன.

‘நிமிட்டாம் பழம் என்று கேள்விப்பட்டிருக்கிறீா்களா? அந்தக் காலத்து வாத்தியார், படிக்காத பையன்களை, கிள்ளி நிமிண்டுவார். கிள்ளிய இடம் சொப்புளம் வந்து விடும். இதற்குத் தான் ‘நிமிட்டாம் பழம் என்று சொல்வார்கள்” என சொற்சுவாரசியம் வாழ்வுக் காட்சிகளின் ஊடாக நிமிர்ந்து கெடக்கும். கி.ரா சிறுகதை, நாவல், கடுதாசிகள் என்று எழுதியது பாதி என்றால், மக்கள் மொழிக்காக வாதாடியது மீதிக்காரியம். ’மக்கள் தமிழ் வாழ்க’ என்று ஒரு நூலே தந்துள்ளார்.

பொன்னீலன் – கரிசல் நாவல்
கரிசல் காட்டில் ஒருமூலையில் பிறந்து, தலைப்பிரட்டான தலையீடு எதுவுமில்லாமல் உறக்கத்திலேயே நடமாடுகிற மனிதா்கள் வாழும் ஒரு சிற்றூா் பெருமாள்புரம். அவ்வூா் மக்களின் வாழ்க்கையை கரிசல் வாழ்க்கைக்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகச் சொல்ல ஆரம்பித்து, ‘பளிச்’ செனத் தெரிய வைத்த நாவல்.

”உண்மையில் எனது கதைகளை என் வாழ்க்கைக்குள்ளும் பக்கத்திலும், தூரத்திலும் எங்கிருந்து எடுத்தேனோ அந்த என் ஊரைச் சுற்றியுள்ள பத்து, பதினைந்து கல் தொலைவில் நடக்கும கதைதான் ‘கரிசல்’” என்கிறார் பொன்னீலன். சுவாசத்தை அசுத்தப்படுத்தும் பஸ்கள், இராசாயன பூச்சி கொல்லிகள் அவர் எழுதிய காலத்தில் கரிசலில் இல்லை. உப்பு, புளிக்குக்கூட ஆகாமல் வேகு, வேகு என்று ஓடித் தவிதாயப்படும் வாழ்க்கை இல்லை. அடிமைத்தனமான வாழ்க்கையை வெறுக்கும் படியாகவும், தம் வாழ்க்கையின் உண்மை நிலையுணர்ந்து மனிதன் என்ற சிறப்புக் கேற்ற வாழ்க்கையை பெறுப்படியாகவும் போராடும் ஏழை, எளிய மக்களை கரிசலில் அணியப்படுத்துகிறார். கடைசிவரை கலைவண்டி தடம்புரளாமல் ஓடுகிறது.

”ஏலேய், சக்கிலித் தாயிளி. மாடு பாருடா. படப்புல மேயிறதை. வாயில வந்தாத் தெரியுமா” என்று ஆரம்பிக்கிறது பூமணியின் ‘பிறகு’ நாவல். கெட்ட வார்த்தைகளாய் தொடங்குகிறது இந்தப் படைப்பு என்று நூலகங்களுக்கு போடாமல் ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்ட நூல். இன்றைக்கு அப்படியெல்லாம் ஒதுக்குபவா்களை எண்ணி ஒரு கீத்துச் சிரிப்பு உதிர்க்கிறது கடைவாய். ‘ரீதி’ சிறுகதைத் தொகுப்பு தொடாத புள்ளிகளை, இதுவரை பேசாது விடப்பட்ட விசயங்களை ஏந்தி வருகிற தொகுப்பு.

தலித்துகள் பிரதேச வட்டாரங்கள் வட்டாரத்தில் வாழ்கிறார்கள். வட்டார மொழி பேசுகிறார்கள். வட்டார மொழியிலும் தலித்துகளுக்கேயான வார்த்தைகள், வழக்காறுகள், மொழிகள் இருக்கின்றன. அதைப்பயன்படுத்தி ஒரு தலித் வாழ்க்கையைச் சொல்ல முடியும். ஒரு வட்டாரத்திற்குள் வாழ்ந்தாலும் சாதிப்பிரிவுகள் தனித்த அடையாளங்களுடன் நிலவுகிறபோது அதற்குப் பொருந்த, கலாச்சாரம், வார்த்தை, மொழிப் பிரயோகம், வேறுபடும், மலைப்பாறை விழுந்து அடியின் அகப்பட்டு மூச்சுத்திணறு விழுவது போல், சாதியக் கட்டுமானத்தில் மூச்சுத் திணறும் தலித் தனக்கிழைக்கப்படும் தாழ்வுகளை உதறி, அப்பால் தள்ளி ஒன்னுமில்லாமல் ஆக்க வேண்டும் என்ற எதிர்ப்பு இலக்கியக் சூழல் நாவலின் இரு அட்டைகளுக்கு அப்பாலும் ஒலிக்கிறது.

ரீதி யதார்த்த வகை இலக்கியத்தின் சிறந்த உதாரணக் கதைகள் கொண்டது.

சோ.தர்மன் ‘ஈரம்’ சிறுகதைத் தொகுப்பு
இன்னும் அந்த மக்களின் நடுவில் உக்கிரமமாய் வாழ்ந்து கொண்டிருப்பதால், தணலாய் கொதிக்கிறது எழுத்துக்கள். எடுக்கக் குறைவதில்லை தணல்.

கரிசல்சீமை மக்களை விவசாயம் கைவிட்டுவிட்டது. விவசாயத்தை அவா்கள் கட்டி இழுத்துக்கொண்டு அலைகிறார்கள். இன்றைய நிலவரப்படி அவா்களது வாழ்க்கை சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

விவசாயத்தை ஏறக்கட்டியாகிவிட்டது. கரிசாய்க் கிடக்கும் மந்தைப் புஞ்சைகளில், நீா் வறண்ட கண்மாய் பொட்டல் மத்தியில், இந்தக் கால விடலைகள் கிரிக்கெட் ஆடுகிறார்கள். சனங்கள் நகரங்களை நோக்கி கையேந்திப் போகிறார்கள். பின்சாமத்துக்கு தீப்பெட்டிக் கம்பெனிப் பஸ்கள் வந்து கதவுகளைத் தட்டி, சின்னஞ்சிறு பால்குடிப் பிள்ளைகளை வாரிப் போட்டுப் போகிறது. ஒயில்கும்மி, தேவராட்டம், வில்லுப் பாட்டு, தெருக்கூத்து, என்று பூத்திருந்த கலைகள், புளியம்பட்டி நட்சத்திர நாட்டியக் குழு என்று ஆடுகிறது. இந்த நசிவுகளை நடு நரம்பாக்கிய ரத்தஓட்ட்த்தில் ஈரம் தொகுதி உருவாகியுள்ளது.

தனுஷ்கோடி ராமசாமி ‘நூற்றாண்டுத் தகவல்’
படைப்பாக்கத்திற்கான அனுபவங்கள் இயல்பாக நிகழுதல் இன்றைக்கு குறிப்பாக நகா்ப்புற இலக்கியவாதிகளுக்கு சாத்தியமில்லாமல் ஆகிவருகிறது. வம்படியாக அனுபவங்களைத் தேடியடைத்ல் என்பதே சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது. எழுத்தின் திறவுகோல் மெய்யான அனுபவத்தில் தங்கியுள்ளது. சுருங்கச் சொன்னால் அதற்கான தேடல் முக்கியம். இயல்பாகவே சனங்கள் மத்தியில் வாழ்ந்து தேடலைச் சொந்தமாக்கிக் கொண்டிருப்பவர் தனுஷ்கோடி.

தோழர்- அவரது முக்கியமான நாவல். காவலும் நிழலும், சிறுகதைத் தொகுப்பும் சிறந்த படைப்புக்கள்.

வீர.வேலுச்சாமி நிறங்கள் சிறுகதைத் தொகுதி
எப்படி நடந்தது என்று தெரியவில்லை அது விபத்து தான் திட்டமிட்டு விலகல் இல்லை. சிறுவா்களுக்கான நாட்டுப்புறக் கதைகளதை் தொகுத்து தந்தவா் ‘நிறங்கள்’ என்று யதார்த்த நிறம் மாறாத பூக்களைத் தந்த அந்தப் படைப்பாளி நிரந்தர சீக்காளியும் ஆவார். உடல்நலத் தொல்லைகளால் படைப்பாக்கத்திலிருந்து ஒதுக்கம் கொண்டு விட்டார். எல்லை மீறல் அற்ற அறவியல் கோடுகள் கீச்சி, அழகியலாய் அமைந்த அற்புதமான கதைகள் இவை.

மு.சுயம்புலிங்கத்தின் ‘நாட்டுப் பூக்கள்’
“நல்ல மழை நாள் பூராவும்; அந்தமாசம் முழுதும் மழை. ஐப்பசி மாசம்” என்றுதான் ஆரம்பிப்பார். சொல்வது போலவே இருக்கும் எழுத்து. ஊா்க்காரா்களைக் கூட்டி வைத்து, அவா்களுக்கு கதை சொல்லிப் பயிற்சி எடுத்தவா். படிப்பு அதிகம் கிடையாது. சொந்தமாகப் படித்துக்கொண்டதுதான். அசலான கரிசல் காட்டு சம்சாரியாக வாழ்ந்தார். சம்சாரியாக காலந்தள்ள முடியாமல், நகர்ப்புறத்தில் ’ஸ்வீட்’ கடை வைத்துப் பிழைக்கும் தொழிலுக்கு நகா்ந்து விட்டார். கிராமத்து வாழ்க்கையை இயல்பாகச் சொல்லுதல்தான் இவா் ‘நாட்டுப் பூக்களில் வாசனை சொடுக்குகின்றன.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை