கோவில்பட்டி தொகுதி வாக்காளர்களுக்கு கரிசல் மண் எழுத்தாளர்கள் கூட்டாக வேண்டுகோள்

25 மார்ச் 2021

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் எழுத்தாளர்களுக்கு முக்கிய இடம் உண்டு. முற்போக்கு தமிழ் மரபை ஒரு பேரியக்கமாக மாற்றியதிலும் தமிழகமெங்கும் முற்போக்கு கலை இலக்கிய சிந்தனைகளை பரப்பியதிலும் முன்னெத்தி ஏராக திகழ்ந்த கி.ரா உள்ளிட்ட கரிசல் பூமியின் மகத்தான எழுத்தாளர்கள், இன்று அந்த கரிசல் பூமியின் மையமாகத் திகழ்கிற கோவில்பட்டியில் நடக்கும் அரசியலை உற்று நோக்குகிறார்கள். கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரன், அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகிய இரண்டு பெரும் பணம் பலம் மிக்க வேட்பாளர்களுடன், ஒட்டுமொத்த கரிசல் மண்ணின் எளிய மனிதர்களது பிரதிநிதியாக கே.சீனிவாசன் மோதுகிறார்.

கரிசல் காட்டின் தன்னலமற்ற மக்கள் சேவகர் கே.சீனிவாசன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, அவர் இந்த மண்ணின் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும்; ஆழ்ந்தகன்ற இலக்கிய வாசிப்பும் கலை உணர்வும் கொண்ட கே.சீனிவாசன், கரிசல் மனிதர்களின் தலைநகரமான கோவில்பட்டிக்கே உரிய போராட்டப் பாரம்பரியத்துக்கும் தொட்டுத் தொடரும் கலை இலக்கிய மரபுக்கும் பொருத்தமான வாரிசாகவும் தொண்டராகவும் இருப்பார்; அடிப்படை அரசியல் அறத்துடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டி பகுதியில் மக்களின் தலைசிறந்த சேவகராக செயலாற்றி வரும் சீனிவாசனுக்கு பணத்தையும் சாதியத்தையும் தாண்டி அரசியலாக சிந்தித்து அரிவாள் சுத்தியல்நட்சத்திரம் சின்னத்தில் நிச்சயம்வாக்களித்து மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என்று உறுதியாக கரிசல் எழுத்தாளர்கள் நம்புகிறார்கள்.

அந்த வேட்கையை ஒரு அறிக்கையின் வாயிலாக அந்த மகத்தான படைப்பாளிகள் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ் முற்போக்கு படைப்புலகத்தின் முன்னோடியும் சாகித்ய அகாடமியின் விருது பெற்ற படைப்பாளியுமான முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், சாகித்ய அகாடமி மற்றும் அமெரிக்க தமிழ் சங்க விளக்கு விருதாளர் பூமணி, சாகித்ய அகாடமி மற்றும் கனடா இலக்கிய தோட்ட ‘இயல்’ விருதாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், அமெரிக்க தமிழர்கள் வழங்கிய விளக்கு விருதுபெற்ற கவிஞர் தேவதச்சன், கனடா இலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது பெற்ற கவிஞர் சமயவேல், சாகித்ய அகாடமி விருதாளர் சா.தேவதாஸ், கரிசல் மண்ணின் மூத்த எழுத்தாளர் மே.சு.சண்முகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மூத்த தலைவர் ச.தமிழ்செல்வன், அமெரிக்க தமிழ்சங்க புதுமைப்பித்தன் விருது பெற்ற எழுத்தாளர் கோணங்கி, விகடன் சிறார் இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர், எழுத்தாளர் கிருஷி, கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட கரிசல் பிரதேசங்களின் மகத்தான எழுத்தாளர்கள் எஸ்.இலட்சுமணப் பெருமாள், ஜா.மாதவராஜ், எஸ்.காமராஜ், நாறும்பூநாதன், அப்பணசாமி, ஷாஜகான், ம.மணிமாறன், சாரதி, சங்கீத் நாடக அகாடமி விருது மற்றும் மணல் மகுடி நாடக நிலம்விருதுகளைப் பெற்ற ச.முருகபூபதி, யுவபுரஷ்கார் விருதாளர் சபரிநாதன், கவிஞர்கள் அ.இலட்சுமிகாந்தன், எழுத்தாளர்கள் நந்தன் கனகராஜ், கறுத்தடையான், அ.முத்தானந்தம், மு.சுயம்புலிங்கம், ஜனகப் பிரியா, பொன்னுராஜ், சிவக்குமார்,உக்கிரபாண்டி ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

“இந்திய நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சோசலிசக் குடியரசு மாண்புகளும் மக்களும் குடியுரிமையும், கருத்துரிமையும் ஆட்சியாளர் களின் கொள்கைகளால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இன்றைய சூழல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. அரசியல் ஒரு லாபம் தரும் தொழிலாகவும் வியாபாரமாகவும் மாற்றப்பட்டிருப்பது அதைவிடக் கொடுமையானது என்று கருதுகிறோம். இந்நிலை மாற வேண்டும் என விரும்புகிறோம். இந்திய விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த நம் முன்னோடிகள் கனவு கண்ட ஓர் ஆரோக்கியமான, சாதி, மதப் பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தைப் படைக்க, அரசியலை ஒரு மக்கள் சேவையாக கருதும் அரசியல் ஊழியர்கள் பெரும் படையாக புறப்பட வேண்டும். அத்தகைய தன்னலமற்ற மக்கள் சேவகர் கே.சீனிவாசன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுத்தப்பட்டிருப்பதை கரிசல் எழுத்தாளர்களாகிய நாங்கள் மகிழ்வுடன் வரவேற்கிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர். அறிக்கையோடு நின்றுவிடாமல் எழுத்தாளர்கள், கரிசல் காட்டின் பல்வேறு கிராமங்களில் குறிப்பாக எழுத்தாளர்கள் பிறந்த ஊர்களில் நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து கே.சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.





கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை