விழி.பா.இதயவேந்தனும் சூரியதீபனும்


விழி.பா.இதயவேந்தன் தொடர்ச்சியாக மனஓசை இதழில் சிறுகதைகளை எழுதினார். பா.செயப்பிரகாசத்துக்கு இதயவேந்தனின் படைப்புகள் மீது பெரும் நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது. இதயவேந்தன் பா.செயப்பிரகாசம் எழுதிய ஒரு ஜெருசலேம், காடு, இரவுகள் உடையும் தொகுதிகளில் உள்ள கதைகளையெல்லாம் மனப்பாடமாக கரைத்துக் குடித்திருந்தார். அந்த அளவுக்கு அக்கதைகளோடு அவர் ஒன்றியிருந்தார். அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்த காலத்தில் தன் மகனுக்கு சூரியதீபன் என்று பெயர் சூட்டி மகிழும் அளவுக்கு பா.செயப்பிரகாசம் மீது அவர் பாசமும் பற்றும் கொண்டவராக இருந்தார்.  

இதயவேந்தன் தன் 'நந்தனார் தெரு' நூல் முன்னுரையில் பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.


எண்பத்தொன்றின் ஆரம்பத்திலிருந்து 'மனஓசை' பத்திரிகையோடு தொடர்பு. தோழர் சூரியதீபனின் எழுத்து வெகுவாய் கவர்ந்தது. ஆசிரியர் பொறுப்பிலிருந்து “மாணவர் சிறப்பிதழ்” என்று ஒரு மனஓசையைக் கொண்டு வந்தேன். அந்தக் கட்டத்தில் தான் வாசகனாய் இருந்த எனக்கு தைரியமாய் பேனாப் பிடிக்க முடிந்தது.

கணேசலிங்கனின் "செவ்வானம்" புத்தகத்தை முதன் முதலில் சூரியதீபன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் கொழுந்து விட்டெறியும் என் நெஞ்சிற்கு முன், என் சனங்களின் கதை என்னில் நிழலாடியது. "சாது மிரண்டால் காடுகொள்ளாது” என்பார்கள். சூரியதீபனின் 'காடு' படித்த பிறகு எனக்கு இன்னும் வேகம் அதிகமானது. கதையைப் படித்து கலங்கியிருக்கிறேன். ஒரு சமயம் வாய்விட்டே அழுதிருக்கிறேன்.

ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளுக்கிடையே கருத்துக்கள் எழுதித்தந்து உதவிய தோழர் சூரியதீபன், நண்பர் பாவண்ணன் ஆகியோருக்கும் புத்தகத் தயாரிப்பில் உதவும் தோழர் ப.தி.அரசுவுக்கும் அச்சகத்தார்க்கும் மற்றும் பெயர் விடுபட்டுப்போன தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

தோழமையுடன்,

விழி. பா. இதயவேந்தன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்