“ஏலம் கிராம்பே நீங்க
எனக்கு வாச்ச புத்திமானே,
சாதிக் கிராம்பே நீங்க
தள்ளுபடி ஆகலாமோ,
நெல்லிலயும் ஈக்கஞ்சம்பா, நீங்க
நிலத்திலயம் முத்துவில்லை
குணத்திலையும் அமிர்த குணம்
கூடுனது நல்கிரகம்
வீசினார் கையை
வீச்சு விலைபெறுமோ
விலை ஆயிரம் பொன்பெறுமோ
துன்னூர் பூசிய நெத்தி
தொன்னுறு பொன்பெறுமோ"
பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்த தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் என்ற அந்த நூல் அக்டோபர் 1960-ல் வந்தது. தமிழ்நாட்டுப் பாடல்கள் என்ற அடுத்த தொகுப்பு ஜூன் 1964-ல் வந்தது. இந்த இருநூல்களிலும் சேகரித்தவர் எஸ்.எஸ்.போத்தையா என்று முதலில் அவர் பெயர் வந்தது.
1959-ல் தங்கம்மாள்புரம் உயர்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். அப்போதே அவர் பேரா. நா.வா.வின் சித்தனைப் பள்ளியில் முதல் மாணாக்கராக வசப்பட்டிருந்தார். 'ஏழாம் வகுப்பு ஸார்' என அழைக்கப்பட்ட இளவயது எஸ்.எஸ்.போத்தையா, வட்டார ஆணும் பெண்ணும் அரைமனசாயும் முழுமனசாயும், வெக்கப்பட்டும், படாமலும் கொட்டியவைகளையெல்லாம் சேகரித்து பேராசிறியர் நா.வானமாமலையிடம் கையளிக்க, அவையெல்லாம் தொகுப்புக்களாய் வந்தன.
- சந்நியாசிக்கும் சாதிப்புத்தி போகாது
- இருந்தா வெங்கலப் பெண்டாட்டி, இல்லாட்டா வெறும்பய பெண்டாட்டி
- முள்ளடிச்ச கம்பு முள்மேல
- தேர் செய்யற ஆசாரிக்கு, அகப்பை போடத்தெரியாது
- மாமியா செத்து அறுமாசம் கழிச்சி மருமகளுக்கு வாசல் நிலைதட்டி அழுகை வந்திச்சாம்
கடல்வளம் கண்மண் தெறியாமல் சூறையாடப்பட்டதால் முத்துக் குளித்தல், சங்கு குளித்தல் ஆகிய தொழில்கள் அருகிப் போய்விட்டன என்று குறிப்பிடுவார் எஸ்.எஸ். போ. முத்துக்குளித்தலுக்கும் சங்கு குளித்தலுக்கும் ஈடாக ஒரு பணி உண்டு. அது நாட்டுப்புறப்பாடல்கள் சேகரிப்பது. நாட்டுப்புற வழக்காறுகள் எனும் கடற்சங்கமத்தில் போத்தையா மூழ்கி முத்தெடுத்தார். அந்த முத்துக்களும் சங்குகளும்தான் மேலே மூழ்கிக் கண்டவை. இன்று கல்வியியல் கல்லூறிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நாட்டுப் புறவழக்காறுகள் ஆய்வு 'பேஷனாக' வருவதால், எஸ்.எஸ்.போத்தையாவோடு சேகரிப்பும் அருகிப் போய்விட்டது எனலாம்.
சமுதாயத்தை நேராய் வகிந்து தருகிற சொலவடைகளைத் தொகுத்தார் போத்தையா. அப்படி அவர் தொகுத்தவைகளை யார் யாரோ வாங்கிப் போனார்கள். “கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்” என்று அவர் சேகரித்த பழமொழிக்கு அவரே உதராணமாகப் போனார். மக்களிடமிருந்து அவர் கடன் வாங்கியதை, மற்றவர்க்குக் கடனாகக் கொடுத்ததாக அவர் நினைத்திருந்தார். அப்படித்தான் ஒன்பது கம்பளத்தார் (நாயக்கர்) வகையறாக்களின் சடங்குகள், ஒவ்வொரு சடங்கையும் ஒவ்வொரு பிரிவினரும் நடத்தும் வித்தியாசம், பயன்படுத்தும் சொற்கள், பழக்கவழக்கங்கள் பற்றியெல்லாம் சிறுகச் சிறுகச் சேகரித்து எல்லாவற்றையும் (நான் அந்த 'குறிப்பேட்டை' பார்த்துள்ளேன்) யாரோ ஒரு புண்ணியவாளன் அல்லது புண்ணியவாட்டி ஆய்வு செய்கிறேன் என்று வாங்கிக் கொண்டு போனார்களாம். இன்னார் எவர் என்று போத்தையாவால் கடைசிவரை ஞாபகத்துக்கு கொண்டுவர முடியவில்லை.
கி.ராஜநாராயணன் தொகுத்த வட்டார வழக்குச் சொல்லகராதி 31.12.1982-ல் வெளியாயிற்று. வட்டார வழக்குச் சொல்லகராதி என்று அருமந்தப் பெயர் வைத்தபோதும், கரிசல் வட்டார அகராதி என்றுதான் இலக்கியவாதிகள் அழைத்தார்கள். அன்று சிறிய அளவில், அன்னம் பதிப்பக வெளியீடாக வந்த அகராதிக்கு, கவிஞர் மீரா எழுதிய அறிமுகவுரையில்
“கால்நடை பராமரிப்புத் துறையினருக்குக் கூட இந்த அளவு தெரியுமோ, என்னவோ, கி.ரா.வும் போத்தையாவும் மாடுகளைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்”
என்று அதிசயித்துப் போனார்.
கரிசல் வாழ்க்கையின் சகல கூறுகளையும் எடுத்துரைக்கும் பிற்சேர்க்கை வட்டார வழக்குச் சொல்லகராதியில் இருக்கிறது. மக்களின் மண்வாசனையான கரிசல் காட்டு விளையாட்டுக்களைத் தொகுத்ததில் கணிசமான பங்கு போத்தையாவுடையது. விளையாட்டுக்கள் தொடர்பில் விளக்கமாய் விரிவாய் எழுதிய கட்டுரை “கத்தாளங் கருங்கப்” - என்பதாய் தமிழரசு இலக்கிய மலரில் 1997-ல் வெளியாயிற்று.
பாடல்களுக்கும், கொலவடைகளுக்கும் அப்பாற்பட்டு,
- முக்கா முக்கா மூணுதரம்,
- பெரிய ஆரியவித்தை, பெரிய அல்லாவித்தை,
- அத்த மாட்டாத பய,
- சனியன் பிடறியில இருக்கான்
- அவரு சண்டாக்கிருவாரு,
- அடிமண்டி இருக்கு,
- புத்தியைக் கடன் கொடுத்திட்டான்,
- சும்மா தாராம் பூராண்ணு,
- ஆமா, அதனாலதான் ஓட்டையாப் போயிருச்சாக்கும்,
- தலையில வெள்ளிடி விழுந்திரும்.
போன்று இரண்டு, மூன்று வார்த்தைகளாலான முழு அர்த்தத்தை அடக்கிய சொல்லாடல்கள் உண்டு. இந்தப் புதிய வகையைக் கண்டுபிடித்து தொடர்ந்து குறித்து வைத்துக் கொண்டிருந்தார்.
நாட்டாரியல் வழக்குகள், சொற்கள், சொல்லாடல்கள், சொலவடைகள், பாடல்கள், விளையாட்டுகள் என வண்டி வண்டியாய் சேகரித்துத் தந்த எஸ்.எஸ். போத்தையா 79 வயதில் 12.03.2012 அன்று நள்ளிரவில் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்
இன்றைய காலத்தில் யாருக்கு என்ன நோய், எந்த வயதில் வருமென்று சொல்ல இயலாது. மனுசப் பிறவி விசித்திரமான நோய்களுக்கு ஆளாகும் காலநிலை இது. வெற்றிலை பாக்குப் பழக்கமில்லை; புகையிலை தொட்டதில்லை; புகை பிடிப்பதும் இல்லை. ஆனாலும் ஒருவருக்குப் புற்றுநோய் வரும். எஸ்.எஸ்.போத்தையாவுக்கு புற்றுநோய் வந்து நுரையீரல் சேதாரமாகியிருந்தது. எந்த நோய்க்கும் கைப்பக்குவ மருந்து அவரிடம் இருந்தது. ஊர்க்காரர்களில் கணிசமானவர்கள், அவரிடம் நோய் சொல்லி கைமருந்து வாங்கிச் சென்றார்கள். புற்றுநோய் கண்டு, நுரையீரல் அரித்திருந்தது என மருத்துவர்கள் சொன்னதை இறுதிவரை அவரிடம் தெரியப்படுத்த வேண்டாம் என்று உறுதி கொண்டிருந்தோம். கடந்த ஒரு மாதமாய் அவருடன் சாவு, வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது. மரணத்துக்குள் நடந்து கொண்டிருக்கிறேன் என பேச்சிலோ, நடமாட்டத்தலோ சிறு குறிப்பும் அவரிடம் தென்படவில்லை. உறவு, நட்பு என ஒவ்வொருவராய் வந்து பார்த்துப் போகிறார்கள் என்ற சிறு சந்தேகம் எழுந்திருக்கிறது. “உடம்புக்குச் சேட்டமில்லாம இருக்கீங்க, எப்படியிருக்குன்னு கேட்டுப் போக வர்றாங்க” என்றார் மருமகள் சீதா.
நான் போயிருந்த நாளில், ஒரு முதியவள் வந்து பார்த்தார்; தன்னைப் பார்க்க வந்த முதியவளிடம் கட்டிலில் படுத்தபடியே “வா, உக்காரு” என்று சொல்வார். “நா உக்கார்றது இருக்கட்டும்; நீங்க படுத்திட்டீங்களே, சட்டமா கெடக்கீகளே” என்று சொன்னபோதில், மூதாட்டியின் ஒடுங்கிய கண்களில் நீர் தத்தளித்தது.
கரிசலும் செவலும் கலந்து மயங்கும் ஊர் தங்கம்மாள்புரம். ஊரின் கிழக்கு முடிந்தவுடனே செக்கச் செவேல் என்ற தேரிக்காடு ஆரம்பமாகிறது. காற்றடி காலத்தில், ஆகாயம்வரை பறக்கும் தேரிமண் தீப்பிடித்து எரிவது போல் தெரியும். காற்றடி காலம் முடிந்து பார்க்கையில் தேரி மேடுகள் இடம் மாறி உட்கார்ந்து இருக்கும்.
நாடகக் கலைஞர் முருகபூபதி, போத்தையாவைப் பிடித்து, அவர் வழியாக தேறிக்காட்டுக்குள் புகுந்து, நண்பர்களுடன் நாடகப் பயிற்சி மேற்கொண்டார். உருண்டு, புரண்டு, உடல்மொழியை பூரணமாய் வெளிப்படுத்த தேரிமணல் இடம் தந்தது. கூந்தல் நகரம், மணல் மகுடி, போன்ற நாடகங்களின் பயிற்சிக்களமாக தங்கம்மாள்புரம் தேரிக்காடு ஆகியது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை எஸ்.எஸ்.போ செய்து கொடுத்தார்.
ஓயிலாட்டக் கலைஞர்கள் பற்றி, 'தெற்கின் ஆத்மாக்கள்' என்றொரு சிறுகதை படைத்திருந்தேன். அக்கதையில் சித்திரித்தது போன்ற தெற்குச் சமை மனிதர்களை எழுத முனைந்து ஜூனியர் விகடனில் வெளியாயிற்று 'தெக்கத்தி ஆத்மாக்கள்'. அந்த தெக்கத்தி ஆத்மாக்களைப் படைக்க என் எழுதுகோலுக்கு சேனைப்பால் தொட்டு வைத்தவர் - நாங்கள் செல்லமாக அண்ணாச்சி என்றழைக்கிற 'நாட்டார் வழக்காற்றியல் கொடையாளி' - தங்கம்மாள்புரம் எஸ்.எஸ்.போத்தையா அவர்கள். “ஒருவர் பின், ஒருவராய் அணி வகுத்துவந்த ஆத்மாக்களுக்கு அவர் உந்து சக்தி” என்று எழுதிய வாசகத்துடன் நூல் அவருக்கு காணிக்கையாக்கப்பட்டது.
![]() |
எஸ்.எஸ்.போத்தையா பா.செயப்பிரகாசம், சூரங்குடி அ.முத்தானந்தம் |
எழுத்தாளர் சூரங்குடி அ.முத்தானந்தம், அவருடைய மாணவர். அ.முத்தானந்தம் சொல்வது போல் “ஏழாம் வகுப்பு ஸார்" என்றுதான் போத்தையா அறியப்பட்டார். முத்தானந்தம் கூறுவது போல் கண்டிப்பான ஆசிரியர். கிள்ளு வாங்குவதிலிருந்து தப்பித்த ஒரு காதும் இருக்காது. பிரம்படி வாங்குவதிலிருந்து ஒரு கையோ, முதுகோ பள்ளிக்கூடத்தில் தப்பியிருக்காது. தங்கம்மாள்புரம் காசிநாதன் நடுநிலைப் பள்ளியில் 40 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பணி.
விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் படித்த வேளையில் சுதந்திரப் போராட்டம் மும்மரப்பட்டுக்கொண்டிருந்த காலம்.
மாணவர்களைத் திரட்டிப் போராடினார். அப்போது அணிய ஆரம்பித்த கதராடை, சாவுவரை அவர் உடலைவிட்டுப் பிரிந்ததில்லை.
இந்திய சுதந்திரத்துக்குப்பின், 1950-களில் உருவான இரு தலைமுறை இளைஞர்கள் போலவே, போத்தையா திராவிட இயக்கங்களின் கவர்ச்சிக்கு ஆளானார். பின்னர் எல்லோரும் போலவே, விஞ்ஞான பூர்வ மார்க்சிய தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இறுதி நாட்கள் வரை பிடிமானம் விடாமல் நின்றார்.
பொதுவுடைமை இயக்க முன்னோடியான தோழர் ஜீவா குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். செய்தித்தாள்களில், படங்களில் ஜீவாவைப் பார்த்திருந்த போத்தையா அன்றுவரை நேரில் சண்டதில்லை. “நான் போத்தையா" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ஏற்கனவே போத்தையாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த ஜீவா கட்டித் தழுவாத குறை. எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டு, “எங்கேயும் இல்லை, இப்போதுதான் வருகிறோம்" என்று போத்தையா சொல்ல, “எங்கேயும் அறை போட வேண்டாம், என்னுடனேயே தங்குங்கள்” என்று சொல்லிய ஜீவா அவரைக் கையோடு அழைத்துப்போனது நெகிழ்ச்சியான தருணம்! ஜீவா சும்மா வரவில்லை, இயக்கத்தினருக்கு வகுப்பு எடுக்க வந்திருந்தார் என்பது அங்கு போன பின்பு தெரிந்தது. ஜீவாவும், பேரா.நா.வானமாமலையும் கூடுதலான இரு இதயங்களாய் அவருக்குள் இயங்கினர்கள்.
இந்தக் கண்டிப்பான வாத்தியார், வீட்டிலும் வாத்தியாராக தொடர்ந்தார். தொலைக்காட்சிப் பெட்டி என்ற கலாச்சாரப் படையெடுப்பை அவர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. பேத்திகளும், பேரனும் படித்துக்கொண்டிருந்தார்கள். படிப்பைக் கெடுத்துவிடும் என்று கம்பிவட (கேபிள்) தொலைக்காட்சியை தீண்டாமலே வைத்தார். செய்திகள் பார்க்கவாவது, தொடர்பு கொடுக்கலாமே என்று நான் கேட்டபோது, "யார் செய்தி பாக்கறாங்க? எல்லாம் சீரியல்தான் பார்க்கிறார்கள்” என்றார்.
பணி நிறைவுற்றபோதும் அவர் சும்மா இருந்ததில்லை. பழக்கதோசம் மாதிரி நித்தமும் பள்ளிக்கு வழக்கம்போல வருவதும், வழக்கம்போல மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதும், அறிவுரைகள் சொல்வுதுமாக இருந்தார். அதோடு மாலை மணி 6 முதல் 8 வரை ஊர்ப்பொது மடத்தில் முறைசாராக் கல்வியை நடத்ததினார். அதற்காக யாரிடமும் முக்காத் துட்டு சம்பளமாக எதுவும் பெறவில்லை. பள்ளிப்படிப்பை இடையில் விட்டவர்கள் - ஆடு மாடு மேய்ப்பவர்கள் - வயது வந்தவர்கள் அகியோர்களைக் கூட்டி உட்காரவைத்து அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் மன நிறைவு கொண்ட ஆத்மா அவருடையது.
இருதய அறுவைச் சிகிச்கைக்காய் கோவையில் மருதமலையில் மகன் பாரதி வீட்டில் தறித்து நின்ற அந்த ஆண்டில், அவரால் எட்டையபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமலும், அந்த ஆண்டு நடைபெற்ற பாரதியார் விழாவில் பங்குபெற இயலாமலும் போனமைக்காக மிகவும் நொந்துபோனார். எது தவறினாலும், பாரதிக்கு ஒவ்வொரு ஆண்டும் செலுத்தும் மரியாதையில் அவர் தவறியதில்லை.
பலசரக்குக் கடையில் சாமான்கள் வாங்கினால் ஒரு சிட்டையில் குறித்துக் கொடுப்பார்கள். சிட்டை போல் கையகலத்தாளை மடித்து வைத்துக்கொண்டு, நாட்டார் வழக்காறுகளை நுணுக்கி நுணுக்கி எழுதி வைத்துக் கொள்வார். நோய் பாடாய்ப்படுத்திய காலத்திலும், இந்தப் பழக்கம் அவரைவிட்டுப் போகவில்லை. மரணத்துக்கு ஒருவாரம் முந்திகூட அவர் நுணுகி, நுணுகி எழுதிய சிட்டைகள் சட்டைப்பையில் நிறைந்திருந்தன.
- பா. செயப்பிரகாசம், தீராநதி - ஏப்ரல் 2012
கருத்துகள் / Comments