கால் போனால் என்ன காலக் கவியே...

பகிர் / Share:

கவிக்கோ "அப்துல் ரகுமான்', கவிஞர் மீரா, தி.கு.நடராசன், பாவலர் பாலசுந்தரம் எனப் பிரசித்தி பெற்ற சிலர் மதுரைத் தியாகராசர் கல்லூரியில...
கவிக்கோ "அப்துல் ரகுமான்', கவிஞர் மீரா, தி.கு.நடராசன், பாவலர் பாலசுந்தரம் எனப் பிரசித்தி பெற்ற சிலர் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் அப்போது தமிழ் முதுகலை பயின்றனர். நான் புகுமுக வகுப்பு (Pre University Course) மாணவன். கவிஞர் நா.காமராசன் தமிழ் இளங்கலை முதலாண்டு மாணவர்; அனைவரும் முன் பின்னான ஆண்டுகளில் மதுரைத் தியாகராசர் கல்லூரியின் ஒரு சாலை மாணாக்கர்கள்.

தியாகராசர் கல்லூரியில் முதுகலை முடித்து சிவகங்கை மன்னர் கல்லூரியில்’ ஆசிரியராக கவிஞர் மீரா. அவருடைய மாணவராய் புகுமுக வகுப்பில் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது. புகுமுக வகுப்பு முடித்து மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு வகுப்பு முடிக்கும் வரை எங்களுக்கு அவர் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது.

எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது கவிதைகள் எழுதினார். இளங்கலை முடித்து, பிறகு ஓராண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுநர். அப்போது கல்லூரிகளில் பயிற்றுநர் என்றொரு பணியிடம் உண்டு. இளங்கலைப் படிப்பு அல்லது முதுகலை முடித்தவர்கள் இந்தப் பணிக்கு வரலாம். ஆனால் எல்லாரும் வர இயலாது.

1967-ல் இளவேனில் சென்னையில் ஆசிரியராக இருந்து நடத்திய 'கார்க்கி' இதழில் எஸ்.கே..எஸ் - இன்குலாப் ஆகிறார். அதே காலகட்டத்தில் அதே 'கார்க்கி'யில் பா. செயப்பிரகாசம் - சூரியதீபன் ஆனேன்.


ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் புனை பெயரை வரித்துக் கொள்ளலாம் புதுமைப்பித்தன் போல. அல்லது வலுவான ஒரு எதிரியைப் பற்றி எழுதும்போது, தனது காலம் கனிகிறவரை தன்னை மறைத்துக் கொள்வதற்காகவும் புனைபெயர் சூட்டிக்கொள்ளலாம். நாங்கள் சூட்டிக்கொண்டது இக்காரணங்களுக்காகத்தான் என்கிறார்.

சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுவிக்கிற அப்போதிருந்தே (1966) சொந்தப் பெயர் பின்னுக்குப்போய், இன்குலாப் என்ற பெயரே அறியப்பட்டதாயிற்று. விருத்தாசலம் என்னும் பெயர் கண்மறைவாகி, புதுமைப்பித்தன் என்ற பெயர் இயற்பெயர் என்பதுபோல் ஆகியதோ, அது போல் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது மறைந்து இன்குலாப் என்பது இயற்பெயராகிவிட்டது “செத்தும் கொடுத்த சீதக்காதியின்“ பிறப்பிடமும் இன்குலாப் பிறந்த ஊரும் கீழக்கரை. சீதக்காதியின் சமாதி கீழக்கரையில் இருக்கிறது. ஆனால் சீதக்காதிகள் இன்று இல்லை. அந்தக் கீழக்கரையில் அதே சீதக்காதியின் பெயர்சொல்லி ’’ஊரின் சீரைக் கெடுக்கும் சர்வதேசக் கொள்ளைக்காரர்களின் பொய்முகங்களை“ 'புல்முளைத்த சமாதி' கட்டுரை யில் அம்பலப்படுத்தினார் இன்குலாப்.

"என் போன்ற எளிய குடும்பத்தவர்கள் மீது அகந்தை மனோபாவமும், ஆதிக்க சக்திகள் முன்பு அடிவருடித்தனமும் காட்டும் சக்தியை கீழக்கரைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதவில்லை நான்" என்பார் இன்குலாப்.

எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது பிறப்பதற்கு ஆறு தலைமுறைக்கு முன் ஒரு மரைக்காயருக்கும் (உயர்நிலை சாதி) ஒரு நாவிதர் வீட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடந்துவிட்டது. திருமணத்தின் பின் நாவிதர்கள் வீடுகள் மீது தாக்குதல்கள் நடந்தன. கலப்பு மணம் என்பதால் தாக்குதல். அந்த செல்வந்த மரைக்காயருக்கும் நாவிதப் பெண்ணுக்குமான குடும்ப வழியில் வந்தது இன்குலாப் குடும்பம்.

இஸ்லாமியச் சமுதாயத்தில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த நாவிதக் குடி - அவர் பிறந்தது. நாவிதத் தொழிலை அவர்கள் இழிவாகக் கருதவில்லை. சித்த மருத்துவமும், நாவிதமும் நெடுங்காலமாக இணைவாகக் கைகோர்த்து நடப்பன. தனியாக பிரித்துப் பெயரிடப்பட்ட நாவிதர் குடியிருப்பு - மரைக்காயர் முஸ்லிம்கள் வாழ்முறைகளிலிருந்து விலக்கப்பட்ட குடியிருப்பாக அமைந்தது. பெயரோ நாசுவக்குடி; நாவித முஸ்லிம் இளைஞர்களின் அயராத முயற்சியால் அந்தப் பெயர் மாற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வளர்ந்து வந்ததால், அவருள் கனலும் எதிர்ப்புக் கங்கும் சீராய் வளர்ந்து வந்தது. ஒடுக்கப்பட்ட குடியில் பிறந்து வளருபவர் எல்லாரும் எதிர்ப்பியலைக் கைக்கொண்டு எதிர்ப்பியல் அலை வரிசையில் பயணிப்பார்கள் எனக் கருதவேண்டியதில்லை. பிரச்சினைகள் எனும் வெளிக்காற்று வீசுகையில் அதை ஊதி அணைத்துவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். பிரச்சினைகளின் காற்றில் விசிறி விசிறி கங்கை வளர்த்தார் அவர்.

1965-ல் மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் வெடித்தபோது, சனவரி- 25 முதல் இரு மாதங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சமூகத்தின் ஒரு அங்கமான மாணவர்கள், தாம் இயங்கவேண்டிய கல்வி வளாகங்களுக்குள் இல்லாமல், சுவர்களைத் தாண்டிய வெளியில் இயங்கினார்கள். இரு மாதப் போரை நடத்தியபின் போராட்டத்தைத் திரும்பப்பெறுவது என முடிவு செய்தோம். திரும்பப்பெறுவது மீண்டும் தொடங்குவதற்காகவே என்று அறிவிப்புச் செய்தோம். கல்வி நிலையங்கள் விடுமுறைக்குப் பின் திறக்கப் படுகையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மொழிப்போர் தொடங்கும் என ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் கூட்டம் நடத்தி  உரையாற்றினோம். அதைக் காரணம் காட்டி தமிழ்நாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறைக்குள் அடைக்கப்பட் டார்கள். அதில் நா.காமராசன், கா.காளிமுத்து, பா.செயப்பிரகாசம் ஆகிய நாங்கள் மூவரும் ஒரே கல்லூரி மாணவர்கள்.

நான் அப்போது இளங்கலை இறுதியாண்டு முடித்ததால், முதுகலை தமிழ் அதே கல்லூரியில் சேர விண்ணப் பித்திருந்தேன். சேரவிடாமல் பாதுகாப்புச் சட்டம் குறுக்கே தடுத்தது. இரண்டு மாதம் கழித்து விடுதலையாகி, பின்பு மிகப் பெரிய தள்ளு முள்ளு, தடைகளுக்கிடையில் நான் முதுகலை வகுப்பில் சேர்ந்தேன்.

பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளேயிருந்த எங்களுக்கு அது பாதுகாப்பாக ஆகியிருந்தது. இரண்டு மாதங்களாய் வெளியே இருந்த மாணவர்கள் காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். எங்களைவிட கல்லூரிக் குள்ளிருந்த மாணவர்களுக்கு பொறுப்புகளால் தோள்கள் கனம் கொண்டன. தியாகராசர் கல்லூரி மதுரையிலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் போராட்ட முன்னோடியாகத் திகழ்ந்தது. அந்தப் பாரம்பரியத்தைத் தொடரும் பணியை இன்குலாப், ஐ.செயராமன், இரா.முத்தையா (முன்னாள் சட்டப் பேரவைத்தலைவர்), முருகையா (தற்போது சுடர் முருகையா), கன்னியப்பன், சரவணன் (காருகுறிச்சி அருணாசலத்தின் மகன்) போன்றோர் ஏற்றுச்செய்தனர். செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் வீராச்சாமி என்ற மறவர்கோ, புலவர் ஆறுமுகம், செயபால சண்முகம், அமெரிக்கன் கல்லூரியில் சதாசிவம், பரமசிவம் (முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்), பிச்சைஅரசு ஆகியோரும் இப்போராட்டத்தில் கொடிய அடக்குமுறைக்கு ஆளாகினர்.

1965 ஆகஸ்டு 15-ல் தியாகராசர் கல்லூரியில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவுசெய்தார்கள். அப்போது நாங்கள் சிறையினுள் இருந்தோம். கறுப்புக் கொடி ஏற்றிய இன்குலாப், ஐ.செயராமன் போன்ற சிலரை இழுத்துச் சென்ற போலீஸ், மயங்கி விழும்வரை அடித்திருக்கிறது. நாங்கள் சிறையில் அடைபட்டிருந்த அக்காலத்தில்தான் மதுரை அழகர் மலையில் ரகசியக் கூட்டம் ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். இனி எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. ஆயுதங்கள் செய்வோம் (குண்டு தயார் செய்வது) என சபதம் எடுத்தார்கள். இரத்தத்தில் கையெழுத்திட்டார்கள். அதில் இன்குலாப் முக்கியமானவர். ஆயுதப் போராட்டம் பற்றிய கருத்து கருநிலையில்கூட இல்லாத காலம் அது. 1967-க்குப் பின்னர்தான் நக்சல்பாரி புரட்சி என்னும் வசந்தத்தின் இடி முழக்கம் கேட்கத் தொடங்கிற்று. அதற்கு ஈராண்டுகள் முன்னரே இக்கருத்து இன்குலாப் முதலான இளம் உள்ளங்களில் உருவாயிற்றெனில் கட்டுத்திட்டில்லாது அவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் அந்நிலைக்கு நடத்திச்சென்றது உண்மை.

பள்ளியில் பயின்றபோது அவர் தி.மு.கழகத்துக்காரர். அக்காலத்தின் இரண்டு தலைமுறையினர் எப்படி உருவானோமோ, அப்படியே அவரும் உருவானார். சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்த இரு ஆண்டுகளில் அவர் ஒரு மார்க்சியர். மார்க்சியம் அவரை ஈர்த்திட 1968 டிசம்பரில் 48 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட வெண்மணிப் படுகொலை அடித்தளம் அமைத்தது. அப்போது அரசதிகாரத்திலிருந்த தி.மு.க.வின் பண்ணை ஆதரவுப் போக்கு அவரை எதிர்ப்பக்கம் திருப்பியது.

ஒரு கோட்பாடு தவறானது என்பதை அனுபவங்கள் உணர்த்து மேயானால், அதை உதறிவிட்டுச் செல்வதுதான் பகுத்தறிவுப்பூர்வமானது. அவ்வாறு உதறுவது பரந்துபட்ட மக்களின் நலன் கருதியதாக இருக்கவேண்டும்.

அவர் தன்னுடைய வாழ்நாளை வளர்ச்சிப் பரிணாமத்திலேயே வைத்திருக்க இந்தக் கருத்துதான் துணையாற்றியிருக்கிறது. தி.மு.க.வை உதறித்தள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கச் சார்புடையவராய் ஆகியதும், பின்னர் மா.லெ புரட்சிகர இயக்கத்தில் இணைந்து செயல்பட்டதும், இன்று மார்க்ஸிய-லெனினிய அடிப்படையிலான தமிழ்த் தேசிய விடுதலையில் ஊன்றி நிற்பதும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடரும் வளர்ச்சிப் போக்கு.

புரட்சிகர மா.லெ இயக்கச் செயல்பாட்டில் இணைந்தபோது "மனிதன்", "புதிய மனிதன்" என கலை இலக்கியப் பண்பாட்டிதழ்களை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார். இன்குலாப் நடந்த பாதை போலவே எனதும் அமைந்தது. கல்லூரியில் தி.மு.க.காரன்; விரிவுரையாளர் வேலைக்குப் போனபின் மார்க்சியவாதி; அதன்பின் புரட்சிகர மா.லெ இயக்கம். ஆனால் இன்குலாபும் நானும் வேறு வேறு புரட்சிகரக் குழுக்களில் இயங்கினோம். தனித்தனி அமைப்புகளில் இயங்கும் காலத்திலும், புரட்சிகர விடுதலை என்னும் இறுதிமுனையில் ஒன்றாய் இருந்தோம்.

மக்கள் கலாச்சாரக் கழகம், மக்கள் உரிமைக் கழகம் என்னும் இரு மக்கள் திரள் அமைப்புகளை நான் இயங்கிய மா.லெ அமைப்பு 1970, 80-களில் பின்னிருந்து இயக்கிற்று. மக்கள் கலாச்சாரக் கழகம் சார்பில் "மனஓசை" என்ற கலை இலக்கிய சமூக அரசியல் மாத இதழ் பத்தாண்டுக் காலம் நடைபோட்டது. மக்கள் உரிமைக் கழகம் சார்பில் "கேடயம்“ இதழ் வெளியானது. ஏற்கெனவே நிலவும் கருத்தியலுக்கு எதிராய் எதிர்க் கருத்தியலை முன்னிறுத்தி "மனஓசை" நடந்த பத்தாண்டுக் காலமும் நான் அதன் தலைமறைவுப் பொறுப்பாசிரியராய் இருந்தேன். அப்போது அரசுப் பணியிலிருந்தேன். சூரியதீபன் என்னும் புனைபெயர் பல வழிகளிலும் உதவியது.

இன்குலாப் கல்லூரிப் பணியில் இருந்தபோது 'மனிதன்', 'புதிய மனிதன்' இதழ்களில் ஆசிரியராக இயங்கினார். கல்லூரியில் பணியாற்றிய காரணத்தால் இதழாசிரியர் பெயர் வெளிப்படையாக இருக்காதே தவிர முழுமையாக பின்னணியில் நின்று இயக்கியவர் இன்குலாப்.

புதிய கருத்து உருவாகிறபோது, அதன் மூலக் கருத்து எது என்று காணமுடியாதவர்களுக்கு அதிர்ச்சி உண்டாகும். "ஆய்வென்பது ஒரு செயலுக்கான புத்திபூர்வ முன்னேற்பாடு" என்கிறார் ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. ஒரு கருத்தையும் அது உருவாவதற்கான கடந்தகால, சமகால அனுபவங்களையும் தொகுத்து ஆய்வு செய்கிறபோது அடுத்தகட்ட செயலாற்றுதற்கான நகர்வைநோக்கி ஒருவர் செல்வது இயல்பானதாகும்.

கீழவெண்மணி நிகழ்வை அதிர்ச்சியும் வேதனையுமாய் உணர்ந்து, ஆய்வு மேற்கொண்டதால், மார்க்ஸிய செயல்பாடு என்ற அடுத்தகட்ட புத்திபூர்வ ஏற்பாடே இன்றுவரை இன்குலாப்பின் நடைமுறையாக இருந்துவருகிறது.

கருத்துருவாக்கத்திற்கு சொல்லாடல்கள் அடிப்படையானவை. ஆதிக்க சக்திகள் நம்முள் நடமாட வைத்துள்ள கருத்தியல்களை இந்தச் சொல்லாடல்களே இன்றும் உயிரோட்டமாய்க் கொண்டு செல்கின்றன. இந்தச் சொல்லாடல்களை,
வெள்ளையாய்த் தோன்றும்
எந்தச் சொல்லும் வெள்ளையாய் இல்லாததால்
இல்லை எனது சொல்லும்
வெள்ளையாய்
என்று உடைக்கிறார் இன்குலாப். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் வாழுகிறது என்னும் மார்க்சிய தத்துவத்தை இந்தக் கவிதை மூலம் விளங்கிக்கொள்ளலாம். அவரின் சமகாலத்தவர்கள் எவரும் சொல்லாத அளவுக்கு சமகாலக் கருத்தியலை புரட்சிகரமாக்கிச் சென்று கொண்டிருந்தார். அதற்கான தகிப்பு அவருக்குள் இயல்பாய்ச் சுரந்தது. ஒருபோதும் அந்தச் சுரப்பு வற்றிப்போகவிடாமல் இதழ்ப் பணி, கவிதை, நாடகம், சொற்பொழிவு என பல வடிவங்களில் வினையாற்றிக் கொண்டிருந்தார்.
முதுகில் சுமந்தாய்
அவர்கள் பல்லக்கு
முகத்தில் சுமந்தாய்
அவர்கள் எச்சில்
இன்றும் சுமப்பாய்
அவர்கள் மலங்கள்
என்று நிறுத்தியிருக்கலாம். அப்படி முற்றுப்புள்ளியிட்டிருந்தால், அது ஒரு விவரச் சித்தரிப்பாக முடிந்திருக்கும். அனுபவச் சித்தரிப்பிலிருந்து அடுத்த செயல்பூர்வத்தின் வழிகாட்டுதலை வைக்கிறார்.
இனியும் சுமப்பாய்
அவர்கள் தலைகள்
முதல் ஆறுவரிகள் ஒரு கலைஞனுக்குரிய  அனுபவ வெளிப்பாடு. இறுதி இரு வரிகள் ஒரு புதிய உலகத்தைக் காணும் முயற்சிக்கான மானுடப் பிரகடனம்.

"மனுசங்கடா நாங்க மனுசங்கடா" என்ற பாடல் தலித் இதயத்தில், குரலில், இயக்கத்தில் இன்றும் போர்க்களப் பாடலாக ஒலிக்கிறது.

உயரம் கூடக்கூட அதிகாரமும் சீரழிவும் அதிகரித்துக்கொண்டு போகும் என்பது நடைமுறை விதி. நாற்றமும் அதனோடு சேர்ந்துவரும். அதிகாரத்தோடு இணைந்த நண்பர்கள், அரசியல்வாதிகளோடு கைபிணைத்தவர்கள் என அனைவரையும் கண்டார். ஆனால் எந்தப் பதவி என்றாலும் இன்றைய நிலையில் அசிங்கப்பட முடியும் என்பது சமகாலத்தின் குணக்கேடு; நிகழ்கால லட்சணம் அது.

சமகாலப் பருவநிலையால் அவர் எவ்விதப் பாதிப்பும் அடையவில்லை.

அவர் கவிதையால் நினைக்கப்படுவார்:

எழுதிய நாடகத்தால் நினைக்கப்படுவார். எல்லாவற்றினும் மேலாய் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார்.

நவீன கவிதை, நவீன நாடகம், கலைப் பிரதேசத்தில் அவர் கொண்டு வந்த புதிய பதிவுகள் முக்கியம் வாய்ந்தவை. ஆயினும் அவை பொருட்டேயல்ல. மனிதனைப் பேசுபவை மனிதனாய் வாழ்ந்த பதிவுதான்.

2015, மார்ச், 11- புதனன்று மாலை பெங்களூருவில் உறவினர் வீட்டுத் திருமணம்; அன்று மாலை வரவேற்பு; மறுநாள் காலை திருமணம். வரவேற்பில் கலந்துகொள்கையில் இன்குலாப்பிடமிருந்து ஒரு தொலைபேசி. எனது புனைபெயர் சூரியதீபன். என்னுடைய மகன் பெயரும் சூரியதீபன். இன்குலாபும் இரண்டாவது மகனுக்கு தனது பெயரையே இட்டிருந்தார். இப்போது பேசியது மகன்.

"மாமா, எஸ்.ஆர்.எம் பல்கலை மருத்துவமனையிலிருந்து பேசுகிறேன். அப்பாவுக்கு வலது காலில் புண் வந்திருந்தது. சர்க்கரை வியாதியால் அது ஆறவேயில்லை. வலது சுண்டுவிரலுக்கு அடுத்திருக்கும் விரலை எடுத்தாகிவிட்டது. எடுத்தாலும் வேதனை குறையவில்லை; புண்ணும் ஆறவில்லை. அதனால் ஹோமியோ மருந்து கொடுத்தால் சீக்கிரம் குணமாகும் என்று சொல்கிறார்கள். நீங்கள் ஹோமியோ மருத்துவரி டம் சொல்லமுடியுமா?"

ஹோமியோபதி மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன் என் மைத்துனர். அவருடைய துணைவியார் ஜெகதாவும் ஹோமியோபதி மருத்துவர். கவிஞர் இன்குலாபும் அவர்களை நன்கு அறிவார். வெங்கட்ராமனை தொலைபேசியில் தொடர் பெடுத்து, "இன்குலாப்பை பார்க்க மருத்துவமனைக்கு உடனே போகமுடியுமா’’ எனக் கேட்டேன்.

“"நானும் திருமணத்துக்கு வந்து கொண்டிருக்கிறேன் மாமா. இப்போது பெங்களூருவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். ஜெகதா அங்குதான் இருக்கிறார். அவரை மருந்து எடுத்துவைக்கச் சொல்கிறேன். யாராவது ஒருவர் போய் நேரில் வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்" என்று வெங்கட்ராமன் சொன்னார். மகன் இன்குலாப்பிடம் தகவல் தெரிவித்தேன்.

பழைய சோறு போல் மனசு எந்தப் பிடிமானத்துக்கும் வராமல் உளைந்தது. திருமண வரவேற்பில் முழுமையாய் பங்கேற்க முடியாமல், அங்கிருந்து இன்குலாபின் மகள் ஆமீனாவுடன் பேசினேன். முழங்காலுக்குக் கீழே எடுத்துவிடவேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசிப்பதாகவும் இப்போது முழங்காலை இழப்பதால் வாழ்க்கை முழுவதும் நடமாடிக் கொண்டிருக்கலாம்; இல்லையெனில் எதுவும் நிகழலாம் என ஆமீனா சொன்னபோது அந்த நெஞ்சம் வேதனை நீரில் புரளும் பஞ்சாகியிருப்பது உணர முடிந்தது.

"என்ன செய்வது என்று தெரியவில்லை மாமா" ஆமீனாவும் அண்ணன்களும் கவலைப்படுவது தெரிந்தது. "நீ அண்ணன்களுடன் கலந்து ஆலோசித்து தெளிவான முடிவு எடுத்து வைத்திரு. (ஆமினா ஒரு மருத்துவர். ஆனால் ஆங்கில மருத்துவம்) நான் காலையில் புறப்பட்டு மதியம் வந்துவிடுவேன்.’’ என்று தைரியம் கொடுத்துவிட்டு, விடிகாலையில் பெங்களூருவிலிருந்து புறப்பட்டேன். பிற்பகல் மூன்று மணியளவில் மருத்துவமனையை அடைந்தபோது அவர்கள் தெளிவாகவே முடிவெடுத்திருந்தனர். காலை எடுத்துவிடுவதென்று முடிவு செய்தபோதே, அறுவை மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப 'குளோபல்’ மருத்துவமனைக்கு மாற்றவும் வேண்டியதாயிற்று. குளோபல் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அவர்களுடன் சேர்ந்து சென்றேன். அடுத்த நாள் பிற்பகல் அறுவைச் சிகிச்சை முடிந்தது. ஆமீனா சொன்னாள், "வெற்றிகரமாக முடிந்தது மாமா. ஒரு பிரச்சினையும் வரவில்லை. அப்பா நலமாக இருக்கிறார்.’’

எதையும் வெட்டொன்று துண்டொன்றாக பேசிப் பழக்கப்பட்டவர் இன்குலாப். அவ்வாறே வாழ்ந்தவர். ஒரு விசயத்தை, பிரச்சினையை ஒருக்காலும் என அவர் பேசிப் பார்த்ததில்லை. ஈரெட்டாகப் பேசுகிறவர்களுக்குத்தான் அந்த ’ஒருக்காலும்’ சொல் உரித்தானது; "இடுப்பொடிஞ்ச கோழிக்கு உரலடியே சொர்க்கம்’’ என்பது போல் மனசளவில் இடுப்பொடிந்து போனவர்கள் அந்த வார்த்தையாடலை விடமாட்டார்கள்.

நேர்வழி நடந்தவர் இன்று வலது முழங்காலுக்குக் கீழ் ‘ஒரு கால்' எடுபட்டு இருந்தார்.

’ஒரு கால்’ அவரைவிட்டு நீங்கியிருந்தது. இன்குலாப் இருந்தார்.

அவருடைய கவிதைகள் இருந்தன.

அவர் வழிநடத்திய கருத்து இருந்தது.

அவர் நடந்த பாதம் மறைந்திருந்தபோதும், பதித்த சுவடுகள் தொடர்கின்றன.

மருத்துவமனையிலிருந்து வீடடைந்த மறுநாள் சென்று கண்டபோது - ’எங்கே போய்விடும் காலம்’ என்றெல்லாம் கேள்வி எழுப்பி காலத்தை நடத்திய கவி, நாளை இந்தக் காலத்தினூடாக நடக்கப் போகிறார் என்பதை, நோயினால் களைத்திருந்தாலும் களைப்புறா அந்த முகம் எனக்குச் சொன்னது.                                                   
நண்பரே, நினைவிருக்கிறதா?




கவிஞராக நீங்கள், எழுத்தாளர் என நான், ஓவியராக மருது, திரைத்துறை இயக்குநராக புகழேந்தி, அரசியலாளர் தொல். திருமாவளவன் என சரிவிகித உணவுக் கலவைபோல் 2002 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற "மானுடத்தின் தமிழ்க் கூடல்" மாநாட்டில் பங்கேற்றோம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தி லிருந்து அலுவல்ரீதியிலான அழைப்பு வந்திருந்த போதும், அது ஒரு பாவனைதான்.  விடுதலைப் புலிகளின் "கலைப் பண்பாட்டுக் கழகம்’’ பின்னிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. கலைப் பண்பாட்டுக் கழகப் பிரிவின் செயலராக கவிஞர் புதுவை இரத்தினதுரை. விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல்பிரிவு செயலகத்தில் நம்மையெல்லாம் ஆரத் தழுவி வரவேற்றாரே, நினைவிலிருக்கிறதா? இன்று அவரோ, அரசியல் ஆலோசகர் பாலகுமாரோ, போராளி யோகியோ உயிருடனிருக்கிறார்களா என்ற கேள்வி நம் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.





நான்கு நாள் மாநாடு. ஒவ்வொரு நாளும் போராளிகள் பாதுகாப்பில் மாநாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தோம். ஒரு காலை யாழ் நகருக்கு சில கிலோமீட்டர் அருகிருந்த "கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துக்கு’’ அழைத்துச் செல்லப்பட்டோம். 1987-ல் விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் என்ற பெயர்போல, இந்திய அமைதிப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் தமிழர் பகுதிகளில் நுழைந்தபோது, கேப்டன் மாலதி தலைமையில் பெண்புலிகள் முதல் தாக்குதலைத் தொடங்கிய இடம் கோப்பாய். கேப்டன் மாலதியும் மற்ற பெண் போராளிகளும் வீரமரணம் எய்திய மாறாத வரலாற்றுப் பெருமையை தன்மேல் பதித்துக்கொண்ட நிலம்; அன்று லேசாய் பொசும்பல் போட்டுக்கொண்டிருந்தது. காலை நேரம். மிதியடிகளில் ஈரமண் ஒட்டி பிசுபிசுப்பு. ஆயிரங்கால் மண்டபம்போல் வரிசையாய் கல்லறைகள். இங்கே போராளிகள் விதைக்கப் பட்டிருந்தார்கள். அறுநூறுக்கும் மேலான கல்லறைகளை ஒரு இளம்போராளி பராமரிப்பு செய்துகொண்டிருந்தார். களப்போரில் காயமுற்று, நீண்ட நாள் நோயுற்றிருந்த ஒரு பெண் போராளி அதற்கு முதல் நாள்  மரணமடைந்திருந்தார். போராளிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட சமாதி மலர் தூவி ஈரம் மாறாது இருந்தது. புதை மேட்டை தீத்துப் பலகையால் தட்டி சமன் செய்து கொண்டிருந்தார். அந்த இளம் போராளி நினைவில் வருகிறாரா இன்குலாப் அவர்களே? ஒரு கால் இல்லாதிருந்த அந்தப் போராளியை நாம் கண்டோம். ஒரு கால் இழந்த நிலையில் ஊன்று கோலை கக்கத்தில் இடுக்கி புதைமேட்டைச் சீர்படுத்தியபடி நம்மிடம் உரையாடிய ’இளம் பையன்’ நம்மை அசையாதபடி ஆக்கிவிட்டிருந்தார். இளமையானாலும் முதுமையானாலும் செயற்பாட்டாளருக்கு ஊனம் ஒரு பொருட்டில்லை என்று உணர்த்திய முதன்மைப் போராளிக்கு தலைவணங்கினோம்.


எனது விழுமிய நண்பரே, கோப்பாய் இளம்போராளி, உங்களில் வாழுகிறான். இனியும்  வாழுவான்.

1983- ஜூலை, இனப்படுகொலைக் குரூரத்தை வெளிப்படுத்தி, ஆகஸ்டு, செப்டம்பர் "மனஓசை" இதழ்களைக் கொண்டுவந்தோம். செப்டம்பர் இதழில் "கரையில் இனியும் நாங்கள்...." என்ற கவிதையால் ஈழத்தமிழருக்கு கரம்நீட்டினீர்கள்.

"காற்று ஈழத்தின் கனலாய் வீசுகிறது.

கரைகளில் இனியும் நாங்கள் கைகட்டி நிற்கவோ?"

உயிர்வலிக்கும் கேள்வி எழுப்பி, உயிர்தருதல் போல் ஒரு பதிலும் தந்தீர்கள்.
ஈழப் போருக்கு கரங்கள் வேண்டும்
இங்குள்ள தமிழர் கரங்கள் நீளுக!
ஈழப் போருக்கு தளங்கள் வேண்டும்
எங்கள் கரைகள் தளங்கள் ஆகுக!
ஈழப் போருக்கு ஆயுதம் வேண்டும்
இங்குள்ள தமிழர் ஆயுதம் செய்க!
ஈழப் போருக்கு ரத்தம் வேண்டும்
இங்குள்ள தமிழர் ரத்தம் பாய்க!
மானுடக் குரல் எங்கிருந்தாலும் தோழமை கொள்ளும் என உலகுதழுவும் குரலைப் பெய்தீர்கள். அந்தக் குரலை அடையாளம் கண்டு, கவிதை எழுதிய கரத்தைத் தடவி மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில் ஈழத்தமிழர் வியந்தார்களே, நினைவில் மேல்வருகிறதா தோழரே!




மாநாடு முடிந்து, போரினால் சிதைக்கப்பட்டிருந்த பூமியைப் பார்த்து, பின்னர் புறப்பாடு நிகழுகையில் கிளிநொச்சி சென்றடைந்தோம். சு.ப.தமிழ்ச்செல்வன், பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன், ஆண்டன் பாலசிங்கம், பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்தோம். பிரபாகரனுடன் பகல் உணவு கொண்டோம். விடைபெறுகையில் கூட்டாகவும், தனித்தனியாகவும் பிரபாகரனுடன் படங்கள் எடுத்துக்கொண்டோம். தங்களுடன் படம் எடுத்துக் கொள்கையில் பிரபாகரன் சொன்னார்: "வாளும் கவிதையும்".

விடுதலைப் போருக்குத் தலைமை கொடுத்துப் போர் புரிந்த போராளி சொன்னது அந்தக் காட்சிக்கு, அச்சூழலுக்கு குறியீடாக வெளிவந்தது - வாளும் கவிதையும். வாசகம் அப்பிரதேசத்தை  பிரகாசப்படுத்தியபடி பயணித்ததை நீங்கள் கவனித்ததுண்டா, இன்குலாப்.

யாரால் காணப்பட வேண்டுமோ அவர்களால் காணப்படுவதும் - எவரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமோ அவர்களால் அங்கீகரிக்கப் படுவதும் - அவர்தான் இன்குலாப்.

நேற்று நீங்கள் நடந்தீர்கள்;

இன்று நீங்கள் நடக்கிறீர்கள்;

நாளையும் காலத்தினூடாக நடப்பீர்கள்.

நன்றி: நக்கீரன் - 1 ஏப்ரல் 2015

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content