“தான் என்ற மமதையினால் சுக்குச் சுக்காய் சிதறி போனவர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள்; புராண காலத்திலும் இருந்தார்கள்.
சூரபத்மன், சுப்பிரமணியனைப் பார்த்து எள்ளி நகையாடினான்.
'சின்னப்பயல்'
இரணியன், பிரகலாதனைப் பாரத்து எள்ளி நகையாடினான்.
'நீயோர் சின்னப்பயல்'
தாடகை, இராமனைப் பார்த்து எள்ளி நகையாடினாள்.
சின்னப்பயல்! சின்னப்பயல்! சின்னப்பயல்!
எள்ளி நகையாடிய தாடகையின் ஆணவம் சின்னப்பயல் இராமனால் அழிந்தது."
ராமக்காளை கதையை முடிக்கிறபோது அவனுடைய 'வில்' ஜல், ஜல் என்று பேசும்;
உடுக்கை டும், டும் என்று முழங்கும்.
குடம் 'திடும், திடும்' என்று ஓசையிடும்!
'வில்லடிக்க, குடமடிக்க
வீரமணி ஓசையிட'
தஹ தஹ என்று போர் முழக்கம் செய்வது போல் வில்லோசை நடக்கும்.
தொடர்ந்து வெறும் கதையாகவே பாடிக் கொண்டிருந்தால், சலித்துப் போகும். ஊடே ஊடே சொலவடைகள், விடுகதைகள், சிறுகதைகள் என்று சேர்மானங்கள் சேர்த்து, வில்லைச் சிங்காரிப்பான் ராமக்காளை.
பழைய பாணி வில்லுப் பாட்டு ஒன்றுண்டு; பழைய வில்லில் மிருதங்கம் கிடையாது; ஆர்மோனியம் கிடையாது. வில்லோடு உடுக்கு, குடம், கஞ்சிரா, கட்டைத் தாளம், சிங்கி (ஜால்ரா) மட்டும்தான்.
![]() |
சாத்தூர் பிச்சைக்குட்டி |
வில்லிசைக் கலைஞர் பிச்சைகுட்டி பிரவேசத்தின் பின்தான் ஆர்மோனியம். மிருதங்கம், இரண்டையும் சேர்த்து நவினமாக்கினர். நகைச்சுவையை, அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறு போட்டுச் சிரிக்க வைத்தார். வசனங்கள் வீரியமாக விழுந்தன; சமுதாயக் கருத்துக்கள் சரளமாகப் பழகின. உள் ஞானத்திலும் சொல் ஞானத்திலும் நவீனம் நடமாடியது. முற்போக்கான சமுதாயக் கருத்துக்களை அங்கங்கே சொருகிச் சேர்ப்பார்.
நவதானியங்களைப் பதுக்கி வைத்து, செயற்கையான உணவுப் பஞ்சத்தை உருவாக்கி, கொள்ளையடிக்கும் பழக்கம் அக்காலத்தில் நிலவியது; பதுக்கல்காரர்கள், கள்ளச் சந்தை பேர்வழிகளைப் பற்றி, ஒரு நவீனமான கதை போடுவார்.
“இரண்டு பதுக்கல்காரர்களை, ஒரு அறையில் அடைத்து வைத்து விடுங்கள். ஆடவோ அசையவோ முடியாதபடி நாற்காலிகளில் சேர்த்துக் கட்டிப் போடுங்கள். அவர்களுடைய கைகளில் கணுக்கையிலிருந்து தோள்வரை நீளமான சிரட்டை அகப்பையை கட்டிவிடுங்கள். (சிரட்டை - கொட்டாங்குச்சி). முன்னால் பெரிய மேஜை. மேஜை நிறைய பிரியாணி, அறுசுவை உணவு வகைகள்; பார்க்க, பார்க்க நாவில் எச்சில் ஊறுகிறது. ஒரு நேரம் ஆனது. ரெண்டு நேரம் ஆனது. எவ்வளவு நேரம்தான் பசி தாங்குவார்கள்?
அப்போது ஒரு வேடிக்கை நடக்கும். இரண்டு பேருக்கும் இடையில் அந்நியோந்யம் உருவாகும். கையில் கட்டிய அகப்பையால் சோற்றை எடுத்து இவன் அடுத்தவன் வாயில் ஊட்டுவான்; அவன் இவனுக்கு ஊட்டுவான்.
அடுத்தவனக்கு வயிறு நிறைஞ்சாத்தான் நம்ம வயிறு நிறையும் என்ற தத்துவத்தை அப்போதுதான் அவர்கள் கண்டு கொண்டார்கள்; முதன்முதலாக மற்றவர்களுக்கும் வயிறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்கள். தன்னுடைய வயிற்றைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டவன் அவன்; இப்போதுதான் அடுத்தவனக்கும் வயிறு இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட ஆரம்பிக்கின்றான்”
பிச்சை குட்டியாரின் ஒவ்வொரு பேச்சும், பாட்டும், கதையும், சமுதாய அக்கறை கொண்டதாக இருந்தன.
உழைக்கும் அடிப்படை மக்களுக்கான கருத்துக்கள், அவர் வில்லில் அம்பாரம், அம்பாரமாய் குவிந்திருக்கும். வில்லை உலுக்குவார்; பொல, பொலவென்று கொட்டும்.
பிச்சைகுட்டியார் வில்லிசை, ஒரு மகசூல் பெருத்த புஞ்சை. அந்தப் புஞ்சையில் நாட்டுப்புற மெட்டுக்களாய்த் தான் வெள்ளாமை. திரைப்பட மெட்டுக்கள், பாட்டுக்கள் என்று கலப்பட வெள்ளாமை கிடையாது.
கிராமிய மெட்டுக்கள் என்ற பாரம்பரிய விதைகளை மட்டும் போட்டு, சேதாரம் இல்லாமல் இசை வெள்ளாமை எடுத்தவர் அவர். இப்போது எங்கு பார்த்தாலும் சினிமா பெருகிவிட்டது. ''அந்தப் படத்தில் பாடு; இந்தப் படத்தில் பாடு" என்று கேட்கிறார்கள், பாடுகிறவர்களுடைய வில்லும் குழ்நிலைமைக்கேற்ப, இடத்துக்கு ஏற்ப வளைந்து கொள்கிறது.
ராமக்காளையின் பாணி, பிச்சைக்குட்டியார் வில்லிசை பாணி; வெம்பூர் செவத்தையா பிள்ளைதான் அவனுக்கு வாத்தியார். பிச்சைகுட்டியார் பாணியாகவே சொல்லிக் கொடுத்தார். ஆறுமாசம் அவரிடம் இருப்பாய் இருந்து படித்தான்.
சிலர், வில் வாத்தியார் என்ன கற்றுக் கொடுத்தாரோ அதிலிருந்து ஒரு படி மேலே போக மாட்டார்கள். ராமக்காளை மேடைக்குத் தகுந்த மாதிரி, நேரத்துக்கு தகுந்த மாதிரி, இடம், பொருள் ஏவல் பார்த்து, கதைகள், விடுகதைகள், நையாண்டி, சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் சிந்து, தெம்மாங்கு, கட்டபொம்மன் நாடக மெட்டு என்று சுயமாய் ஒரு சுழட்டுச் சுழட்டிவிடுவான். சுண்டி விட்டது மாதிரி, சனங்கள் அவனிடம் வந்து அடைவார்கள். அவனுடைய இசை மழையில் கிறங்குவார்கள்; அவனை விட்டால் அடைய வேறு கூடு கிடையாது என்பது போல.
எதையும் வலிந்து சொல்லாமல் இருப்பதே, கைக்குள் கலையை அடக்கும் வித்தை. இந்த வித்தை ராமக்காளைக்குள் கூடு கட்டியிருந்தது.
எம்.கே. தியாகராச பாகவதரின் குரலுக்காகவே, எத்தனையோ பேர் மயங்கி வந்தததாகச் சொல்வார்கள், அவர் பாடுகிற போது நிலைகுலைந்து, சாமியாடுவார்களாம்.
கச்சேரி செய்ய மேடையில் வந்து நிற்கிறபோது, தேவலோக இந்திரன் போலவே இருப்பதாக ராமக்காளை கேள்விப்பட்டருக்கிறான். கண்டது இல்லை.
எம்.கே.டி.யின் குரல்வளம் அப்படி. அவருடைய குரல் வெள்ளந்தியான நேர் குரல். நெளிவு சுளிவு கிடையாது. 'பிர்க்காக்கள்' இருக்காது.
அவருடைய சமகால நடிகர், இசைக்கலைஞர் பி.யு.சின்னப்பா அப்படி இல்லை. பாடுகிறபோது ஏற்ற இறக்கம்; எற்றடி, இறக்கடி என்று 'பிர்க்கா' நிறைய இருக்கும் .
ராமக்காளை, ஏற்ற, இறக்க “பிர்க்கா” வோடு பாடுவான்; பாடிப் பாடி, அப்படியே வேரோடிவிட்டது. சில பேர் நேரே சீவுவார்கள். மொழுக்கையாக, தார்ச்சாலை மாதிரி. சில பேர் வளைவு, வளைவாகவே தலைவாரிக்கொள்ள ஆரம்பித்து பிறகு தானாக சுருள், சுருளாக வந்துவிடுமே அதுபோல்; ராமக்காளை பிர்க்கா வைத்துப் பாட ஆரம்பித்தான்; பிர்க்கா இல்லாமல் அவனில்லை என்றாகிவிட்டது.
“என்ன அண்ணாச்சி, அந்த ஊருக்கு 'வில்லு' வாங்கியிருக்கீக”
சகலரும் ஆச்சரியப்பட்டுக் கேட்டார்கள்.
இசைமழை அண்டாத ஒரு பாலைவனம் திருமழிசை என்ற ஊர். ஊர்ப் பேருக்கும் இசைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது; (தென் மாவட்டத்தில் ஒரு திருமழிசை உண்டு.)
ஏற்கெனவே ஊர் மொத்தமும் 'தண்ணி' போடும். எந்நேரமும், எல்லோரும் சதா 'ஊத்து'த்தான். போதையில், “என்னடா, நீ, வில்லுப் படிக்கிறே, வில்லு" என்று மேடையில் ஏறி வில்லை ஒரு வெட்டு வெட்டியிருக்கிறார்கள். அவர்களின் பட்டாக் கத்திக்குப் பகைவன் மார்ப்பில் பாயும் பழக்கம் இல்லை போல! வில்லின் மேல் பாய்ந்துவிட்டது. வில் இரண்டாகப் போய் விழுந்தது. வில்லுக்காரர்கள் 'தப்பிச்சோம் பிழைச்சோம்' என்று விழுந்தடித்து ஓடியிருக்கிறார்கள்.
அத்தோடு, அந்த ஊரின் கலைச் சகாப்தம் முடிந்தது. அதற்குப் பின் வில்லுக்காரர்களோ, வேற கலைஞர்களோ திருமழிசைப் பக்கம் தலைகாட்டிய சரித்திரம் இல்லை.
அந்த கிராமத்தின் பழைய வரலாறு தெரியாமலேதான் ராமக்காளை வில்லுப்பாட ஒத்துக் கொண்டான்.
“சரி, ஒத்துக் கொண்டாச்சி, என்ன உயிரையா எடுத்திரப் போறாங்க” மற்றவர்களுக்கு இப்படிச் சொன்னான். ஆனாலும் மனசுக்குள் 'வெருக் வெருக்' என்று முள் நிமிண்டியது.
“ஒரு காலம் அப்படி இருந்தா, எல்லாக் காலமும் அப்படி இருப்பாங்களா?” என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான். கூட வந்தவர்கள் எல்லோருக்கும் பயம்.
அங்கே போனபிறகு, வித்தியாசமான அடையாளங்கள் கண்ணில் பட்டன. சிலபேர் வருகிறார்கள். போகிறார்கள். எல்லோருடைய இடுப்பிலும் சூரிக்கத்தி! படித்தவர்கள் பேனா வைத்திருக்கிற மாதிரி, எல்லோரும் சூரிக்கத்தி சொருகியிருக்கிறார்கள்.
கொஞ்சம்பேர் நல்லவர்கள் போல் தெரிந்தார்கள். போனதும் "வாங்க அண்ணாச்சி'' என்றார்கள். வீட்டிற்குக் கூட்டிப்போய் உபசரித்தார்கள். விருந்து சாப்பிட்டு விட்டு பிறகு கச்சேரிக்குப் போகலாம் என்றார்கள்.
அந்தக் குளுமையான உபசரிப்பு, கழுத்தில் மாலை போட்டு, மஞ்சத் தண்ணீர் தெளித்து, நெற்றியில் குங்குமம் இட்டு, கோயிலுக்கு பலி கொடுக்கப்படப் போகும் ஆட்டைப் போல், தனக்கு வரப்போகும் ஆபத்துக்கு முன்னறிவிப்போ என்று ஐயறவுப்பட்டான் ராமக்களை.
ஆனால் முன்னம் ஒரு போதில் தீப்பட்டுக் கருகிப் போயிருந்த கலைஞர்களின் மனசை, குளுந்த பேச்சு இதமாய்த் தடவியது. உபசரிப்பு என்ற மயிலிறகுகளால் நீவிவிட்டார்கள். அவர்களுடைய மனசிலிருந்தும் பழசு அத்துப் போகவில்லை. அது தோற்றாமல் இருக்கத்தான் பிரியமாய் எல்லா எற்பாடுகளும் செய்தார்கள். இனியொரு கலைப் பூ மலராது என்ற சாபம் பெற்ற முரட்டு ஆத்மாக்களின் பூமியில் அன்றைக்கு கலை குப்பென்று பூத்தது. எந்தவொரு இடைஞ்சலும் ஏற்படாமல், கலைநிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தார்கள்.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது; ஊர்க்காரர்கள் அவனை அறிமுகப்படுத்தினார்கள்.
"இந்த அம்மா நல்லாப் பாடுவாங்க, வில்லுக்குத் தோதா இருந்தா வச்சிக்கிறலாம்".
அந்த இடத்திலேயே அவளுக்குப் பாடஒரு வாய்ப்புக் கொடுத்தான்.
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தை, குளுமையாகப் பொழிந்தாள் அவள். வில்லுக்குப் பொருத்தமாக, பிசிறடிக்காமல் ஒட்டிக் கொண்டது குரல்.
அப்படியொரு குரலை தன்னுடைய குரலுக்குத் துணையாக தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம் எனறு முடிவெடுத்தான் ராமக்களை. "என் கூடவே வர்றியா” என்று கேட்டுவிட்டான்.
பாடுவதற்கான அர்த்தத்தில் தான் சொன்னான். வாழ்க்கைக்கான அர்த்தமாக அது மாறிவிட்டது.
முன்னந்தி மறைந்து 'வரட்டுமா' என்று கேட்கும் இரவு நேரம். தெருவில் பிள்ளைகள் கூட்டாக 'நிலாச் சோறு', சாப்பிட சம்மணம் போட்டு உட்காந்திருக்கிறார்கள்.
புதுசாக ஒரு பாட்டுச் சத்தம்! இரவின் அமைதியின் மேல் மிதந்து வந்தது.
பிள்ளைகள் சாப்பாட்டுத் தட்டுகளையும், பழைய காலத்து வட்டில்களையும் அப்படியே தூக்கிக்கொண்டு, தேங்கீதம் மிதந்து வந்த திசையை நோக்கி ஓடினார்கள்.
ராமகாதையைப் பாட்டால் வடித்துக் கொண்டிருந்தாள் நிலா வெளிச்சம் போல் ஒரு பெண். பாவாடை, தாவணி, அப்போது தான் தோண்டி எடுத்த காட்டுக் கிழங்கு போல் உடல், சிவப்புத் தோல்.
ஒரு பொம்பிளை தாவணி போட்டு வருவளா? குளுவச்சிகள் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள். குடை அத்தி மரத்தடியில் இருப்பவர்கள் குளுவக்காரர்கள்.
இடது கையில் தூக்குப் போகாணி. நாய் விரட்ட வலது கையில் சிறு கம்பு, வாயில் பாட்டு;
அவளுடைய பாட்டில் சொக்கிப் போய் நின்ற தன் பிள்ளைகளுக்காக, ஒரு தாய் சொன்னாள்,
“கூடக் கொஞ்சம் பாடு.
நிறைய சோறு போடறேன்''
ஒவ்வொரு இரவிலும் தொடர்ந்து அவள் வந்தாள். பிச்சைப் பாத்திரம் தோளில், பாட்டு தொண்டையில், இனிமை வீதியில்.
அவள் வருகின்ற பகல் வித்தியாசமானது.
கையில் மாட்டுக் கொம்பில் செய்த சீப்பு, கொக்கு, கிளி; நாயுருவி மாரில் துடைப்பம். கறுத்த கம்பளிக் கயிறு.
ஆலமரத்தடியில், அந்தக் கூட்டம் உற்பத்தி செய்யும் பொருட்களை, விற்பனை செய்பவளாய் அவளுடைய பகல் பொழுதுகள்.
காலாங்கரை மேட்டில் வளர்ந்திருக்கும் 'வெள்ளமொச்சி' விளாறுகள், அவர்களின் கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் கூடைகளாக உருவெடுத்தன. இது கூடைதான். ஆனால் ஒரு தாமரைப் பூவின் இதழ்கள் கூட அவ்வளவு நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருக்குமா?
சிலுப்பட்டை முடிபோல் ஆடும் காட்டுப் புல், அவர்கள் கைகளில் துடைப்பமாக மாறும். அது துடைப்பம்தான். வீசினால் வெண்சாமரைக் காற்றுக்கும் அப்படி ஒரு குளுமை உண்டா?
அவர்கள் கண்களுக்கு மட்டுமே தென்பட்டு, அவர்கள் கைகளுக்கு மட்டுமே அகப்பட்டு, குப்பை மேட்டில், கிடந்த மாட்டுக் கொம்புகள், ஒற்றைக்கால் கொக்காய், சிங்காரச் செப்பாய், சிக்கெடுக்கும் சீப்பாய் உருமாறும்.
படலிலும் கூரையிலும் சொருகி வைத்த தலைமுடி சவுரியாகும்; அங்ஙனயே இருப்பாய் உட்கார்ந்து பின்னிக் கொடுப்பார்கள்; கண்பட்டு விடாதிருக்க கம்பளிக் கயிறு கிடைக்கும்.
சின்னச் சின்னப் பொருட்கள்! சின்னச் சின்ன வருமானம்.
ஒரு ஆசாரியைப் போல், அவர்கள் வண்டிச் சக்கரத்தின் ஆரக்கால் ஒக்கிட்டுத் தருவதில்லை.
ஒரு கொல்லனைப் போல், ஏர்க்கலப்பையின் கொழுமுனை ஒண்டித்துத் தருவதில்லை.
கொத்தாசாரி போல், ஆட்டுரலும், அம்மிக் கல்லும் கொத்தித் தருவதில்லை.
உதிரி, உதிரியான பொருட்களை உருவாக்கினார்கள். அவை இல்லாமலும் ஒரு விவசாயி மகசூல் பார்த்து விட முடியும்.
மூன்று கற்களை வைத்து நெருப்பு மூட்டி சின்ன உலை.
விரல் தண்டிப் பிள்ளை முதல், மூத்த கிழடுவரை ஊர்க்காரர்களையெல்லாம் 'சாமி' என்றழைக்கும் பணிவு.
அவர்களுடைய வயிறும், சமூக உறவும், அளந்தே வைக்கப்பட்டிருந்தன.
ஒருநாள்,
மாட்டுக் கொம்புச் சீப்புகளை, ரப்பர் சீப்புகள் தின்றன. 'வெள்ளை மொச்சி' விளார்க் கூடைகளை சந்தைக் கூடைகள் போக்கடித்தன. வீட்டு முடியில் பின்னப்பட்ட சவுரியை, சாயமுடிச் சவுரிகள் ஒழித்தன.
கை விரல்களை இயந்திரங்கள் முறித்துத் தூக்கி எறிதன
இயந்திரங்களின் இடுக்கில் அவர்கள் வாழ்கை சத, சத என்று அரைபட்டு ரத்தக் கூழாயிற்று.
அவர்கள் வாழ்க்கையின் முகம் அழித்த எதிரிகள் யார் என்று கூட அவர்கள் அறியார்கள்.
பக்கத்து டவுனுக்கு போய்வந்த விவசாயின் மனைவி, கக்கத்தில் ஒரு துடைப்பத்தை இடுக்கியபடி வந்தாள். கடைகளில் விதம் விதமாய் விற்கும் பட்டுக் குஞ்சலம் கட்டிய துடைப்பம்.
பேன் சீப்பு, ஈர்க்குத்திகளால் ('ஈர்வலி' என்பார்கள்) தலைவாரிய மக்களின் கைகளில் சின்னச் சின்ன 'சேம்பூ' உறைகள்; பேன், ஈர் ஒண்ணுமில்லாமல், போயே போய்விடச் செய்யும் உறைகள், டப்பாக்கள்.
பெருவாரியாக உற்பத்தியான நவீன நுகர்வுப் பொருட்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு பிடி மண் அள்ளிப் போட்டது. சிதைமேல் கிடத்தி வைத்த வாழ்க்கையின் வாயில் பிடி வாய்க்கரிசி போட்டாகி விட்டது.
கடின உழைப்பும் கைத்தொழிலும் இருந்தும், பிழைப்பை மூடிய கெட்டியான மண்பொக்கை தூக்கி எறிந்து முளைக்க வகை தெரியாமல் அழியும் அவர்கள்.
'காலம் ஒருநாள் கண்ணாடியை எடுத்துத் தரும்; இந்த விசைகள் தங்கள் முகம் பாக்கும்' என்ற நம்பிக்கையில் திரிகிறார்கள்.
அந்த உர்க்காரர்கள் அறிமுகப்படுத்திய மூக்கம்மா, அந்த குளூவக்காரர்கள் கூட்டத்தில்தான் இருந்தாள். அப்போது திருமழிசையில் 'டேரா' போட்டிருந்தார்கள்.
சடங்காகிற வயசில் ஒரு பெண். மகளைக் கைப்பிடித்தபடி அவர்களின் கூட்டத்தில் அவள்; ஊர் ஊராய் அலையும் வாழ்க்கை.
கணீரென்ற குரல்;நாட்டுப்புறப் பாடல்கள், மெட்டுகள் பெருக்கெடுக்கும் தன்னூற்று.
அவள் வாழ்க்கையின் முகத்தை அழித்த புருசன்காரன் எங்கேயோ தேசாந்திரியாய் அலைகிறான். தன் வாழ்க்கையை அழித்தவனின் முகம் கூட அவளுக்கு மறந்து போய்விட்டது.
வாழ்க்கை வெளியில் பற்றுக்கோடு எதுவும் இல்லாமல், கதிக்க அடிக்கும் வெயில்; வெயிலுக்கு மரநிழல் குளிர்ச்சி போல் ராமக்காளையின் அழைப்பை மூக்கம்மா ஏற்றுக் கொண்டாள.
முதலில் அவள் ஒரு நாடோடி, இருப்பான வாழ்க்கை இல்லாமல், கூடாரத்தை மாற்றி மாற்றி ஊர் ஊராய் அலைந்து கொண்டிருக்கிற சாதி.
ஆனால் குணத்தில் சித்திரம். அந்த சித்திரத்துடன் வாழ, கட்டின கணவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. அவளது நெஞ்சுக்குள் உட்கார்ந்திருந்தது ஒரு வைரக்கல். சகல திசைகளிலும் பீய்ச்சியடிக்கும் அந்த ஒளிவீச்சைத் தாங்க முடியாமல் அவன் வெளியேறிவிட்டான்; சஞ்சல புத்திக்காரன்;
தாயும் மகளும் இனி அடைய ஒரு கூடு தேவை. நாடோடி வாழ்க்கையின் முரட்டுக் காற்றுக்கு அந்த இளங்குஞ்சின் நெஞ்சாம்பட்டை தாக்குப் பிடிக்காது.
மூக்கம்மாவை நேராய் அவனுடைய வீட்டிற்குக் கூட்டிப் போய்விட்டான் ராமக்காளை.
'அந்தச் சிறுக்கி இருக்கிற வீட்டில், நா ஒரு பொழுதும் இருக்கமாட்டேன்' என்று அவனுடைய வீட்டம்மாள் வெளியேறிவிட்டாள். ''வாதுக்குச் சக்களத்தி வந்து முளைச்சிருக்கா, கீரைக்குச் சக்களத்தி கிண்டி முளைச்சிருக்கா'” என்பது போல் முதல் சம்சாரம் ஒப்பாரி வைத்தாள். ஆனால் மூக்கம்மா அப்படியொரு பிறவி இல்லை. இதம், பதமாக, மூத்தவளுக்கு அனுசரணையாகத்தான் இருக்க வேண்டுமென்று சபதம் எடுத்துக் கொண்டு போயிருந்தாள். ஆனால் ராமக்காளைதான் பிடிவாதமாய் நின்றான். மூக்கம்மாவை தனியாக ஒரு வீடு பார்த்துக் குடியமர்த்தினான்; அந்த வீட்டிலேயே வாசம். சம்சாரம் திரும்பி வந்த பழைய வீட்டுக்கு எப்போதாவது அவன் போனான்; வந்தான்.
சம்சாரமும் குடும்ப அம்சமான குணம் தான். 'பட்' டென்று ஒரு வார்த்தை வராது; தடிப்பான வார்த்தைகளோ, 'இங்ஙன கண்டோம், அங்ஙன கண்டோம் ஒன் வீட்டம்மாவை' என்ற பேச்சுக்கோ, இடம் இல்லை.
'இந்த மாதிரி ஒரு பொம்பிளையை சேத்துக்கிட்டாராம்' என்று ஊரில் அலர் ஆகியது.
“மைனர் மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி, இருந்தால் தப்பில்லை. கல்யாணம் ஆன பிறகும் மைனர் மாதிரி துள்ளலாமா?” என்று கண்டிக்கிற அளவுக்கு நிலைமை போய்விட்டது.
அவனுக்குச் சொல்லிப் பார்த்தார்கள். ''போனது போய் விட்டது. இனியாவது திருந்தி வாழு'' என்று பல பேர் எடுத்துப் பேசினார்கள்.
இனியொரு வெட்டரிவாளோ, கோடாரியோ கொண்டு அந்த உறவை தனியாகப் பிளந்துவிட முடியாது. அவள் பேரில் விழுந்த கவர்ச்சி, கெட்டியாய் இறுகி ஒட்டிக் கொண்டது. தாம்பத்திய உறவாய் முறுக்கிக் கொண்டது என்று தெரிந்ததும் சொந்தக்காரர்கள் 'கம்' மென்று ஆகிவிட்டார்கள்; இரண்டு வீட்டையும் எப்படியாவது கட்டி அழட்டும் என்று அவர்கள் ஓதுங்கிக் கொண்டார்கள்.
வில்லு வாத்தியாரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு, வேற வாத்தியாரைத் தேடவேண்டுமா என்ன? மூக்கம்மா முறையாக வில்லு கற்றுக் கொண்டாள்.
ரமக்காளைக் உயிர்ப் பிரியமான "பிர்க்கா' மட்டும் அவளுக்கு வரவில்லை. அவளுக்கும் வெள்ளேந்தியான நேர்க்குரல்; தன் போக்குக்குப் பாடட்டும், அது அவளுடைய பாணி என்று விட்டு விட்டான்.
நாட்டுக் கலப்பை உழவில் இடைவெளி இல்லாமல் புழுதியாகி, மழை பெய்தவுடன் பொதுமலில் 'சொரு சொரு' வென்று தண்ணி உள்ளிறங்குமே, அதுபோல், அவளுடைய கலைக்குணம் இசையை உள்வாங்கிச் சேகரித்துக் கொண்டது.
கிடை போட்ட நிலத்தில், கம்மம் பயிர் கரும்பச்சையாய் தூரும் துப்புமாய் வெடித்து வரும்; நாடோடியாய்த் திரிந்த காலத்தில் கொட்டி முழக்கி வடித்த கிராமியப் பாட்டுக்கள், உதிர்த்த விடுகதைகள், சொலவடைகள் என்று குப்பென்று பூத்துக் குலுங்கின.
வானவெடி கொளுத்தியது போல் மேலெழுந்து பூப்போல் கொட்டுகிற திறமை அல்லது 'தீ' போல் எரியும் தகதகப்பு. அந்தச் 'சூடு' அவன் மேலும் தாவியது. கொஞ்சம் உணங்கிப் போனான் (உணங்குதல் - வாடுதல்). பிறகு அவளால் தனக்குப் பெருமைதானே என்று தெளிச்சிக்கு வந்தான். அவளுக்குத் துணையாக இருக்க முடிவு கொண்டான்.
இரண்டு பேரும் சேர்ந்துதான் 'வில்லு' நிகழ்ச்சி பேசினார்கள்.
ராமக்காளை வரமுடியாத நாட்களில், அவளே எடுத்து நடத்தினாள். அவன் நடத்தியதை விட அவளுடைய வில்லுப்பாட்டு பேர் போனதாய் மாறியது.
சில ஊர்களில் அந்தக் கதைபாடு, இந்தக் கதைபாடு என்று கேட்பார்கள். அவர்கள் கேட்கிற கதை வில்லுப்பாட்டுக் காரர்களுக்குத் தெரியும். ஆனால் கைவசம் கொண்டு போகாமல் இருப்பார்கள். அதனால் முன்னக் கூட்டியே 'இந்தக் கதை தான்' என்று தெட்டத் தெளிவாக்கி விடுவார்கள் அல்லது வில்லு பேச வருகிறவர்களே எங்களுக்கு இந்தக் கதை வேண்டும் என்று கேட்பதுண்டு.
பாரதக் கதை நடத்திக் கொண்டிருக்கிறபோதே அவள், கெளரவர்கள் கூட்டத்தில் ஒருத்தன் பொடி போட்டான் என்பாள்.
“பக்கத்திலிருக்கிற ஒருத்தனும் பொடி கேட்டான். அதைப் பார்த்து இன்னனொருத்தன். பிறகு இன்னொருத்தன் என்று கைமாறிக்கிட்டிருக்கு. மூக்குக்கும் மாறுது, கெளரவர்கள் சபை முழுதும் தும்மல் காடாய் ஆகிருச்சி. அவர்கள் பொடியர்கள், ஆனால் தர்மன் தலைமையிலான பாண்டவர்களோ, கொடி கட்டி ஆண்ட 'கொடியர்கள்'.
கிலேடை, அவள் கைச் சுண்டுதலுக்கு வாசப்பட்டு, கரணம் அடித்து, பிரமிக்க வைத்தது.
படை படையாய், லட்சம்லட்சமாய், கண்டம் விட்டு கண்டம், தாண்டி குபு குபுவெனத் தாவி வரும் பறவைக் கூட்டம்போல், உள்ளிருந்து பெருக்கெடுத்து பறந்த இசையினால் மற்றவர்கள் கண்கொட்டாமல் பார்க்கும் ஒரு அதிசயமானாள்.
“அந்தக் கண்ணபிரான் சகாதேவனிடம் கேட்கிறான். மதியூக சகாதேவா! இனி இந்தப் போரை நிறுத்த என்ன செய்யலாம்?”
“எனக்கென்ன தெரியும்? பிரானே'' என்கிறான் சகாதேவன்.
“நீ சகல சாஸ்ரத்திலும் கற்றுக் கரை போகியவன். எது, செய்தால் போரை நிப்பாட்டலாம்?"
“ஒன்னையக் கட்டனும். ஒன்னையக் கட்டினா போரை நிறுத்திரலாம்” என்றான் சகாதேவன்.
“அது சரிப்பா. அர்ச்சுனன் வில்லை ஒடித்து விடலாம்; பாஞ்சாலி கூந்தலை அறுத்தவிடலாம். என்னை நீ எப்படிக் கட்டுவாய்?”
"நான் ஒன்னைக் கட்ட முடியும்” என்கிறான் சகாதேவன்.
கிருஷ்ணன் பல உருவங்கள் எடுக்கிறான். சகாதேவன், மனசை ஒருமுகப்படுத்தி, ஐம்புலன்களை அடக்கி, கிருஷ்ணனை கட்டுகிறான். கிருஷ்ணனோ, மனசை அலையவிட்டபடி, உள்ளபடி இருக்கிறான். சகாதேவனோ மனச் சிதறல் இல்லாமல், ஐம்பொறிகளையும் தன்னிலைப்படுத்தி 'கிச்' சென்று கட்டிவிடுகிறான். பரமாத்மாவால் ஆட முடியவில்லை; அசைய முடியவில்லை. கட்டிலிருந்து வெளியே வர முடியவில்லை.
பரமாதமா 'அவிழ்த்து விடு, அவிழ்த்து விடு' என்று கூப்பாடு போடுகிறார்.
"சகாதேவா, விட்டுறப்பா. நீ சொல்றதைக் கேட்கிறேன்” என்கிறார்.
"சரி, அப்படியே செய்கிறேன். ஆனா நீ எனக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும், பாரதப் போரில் எங்க அஞ்சு பேரையும் காப்பாத்த வேண்டும்” என்கிறான் சகாதேவன். சரியென்று ஒப்புக் கொள்கிறார் கிருஷ்ண பரமாத்மா. சகாதேவன், கட்டை அவிழ்த்து விடுகிறான். அப்போது கிருஷ்ணனாகப்பட்டவர் என்ன கேட்கிறார் தெரியுமா?
"அப்பா, சகாதேவா, நீ எனக்கு ஒரு வரம் கொடுக்கணும்” என்கிறார்.
"ஓன்னு நான் உனக்குக் கொடுத்த வாக்குறுதியை யாருக்கும் சொல்லிடாதே, முக்கியமா நீ என்னைக் கட்டிப் போட்ட விசயத்தை யாருக்கும் சொல்லக் கூடாதப்பா" என்று உறுதி வாங்கிக் கொள்கிறார்.
கொண்டு கூட்டி எடுத்துப் பேசும் திறமையை மூக்கம்மா முந்தாணையில் முடிச்சுப் போட்டு வைத்திருந்தாள் போல, இந்த இடத்தில் ஒரு கதைபோடுவாள் மூக்கம்மா. இந்த இடம் அவள் தன்னை அடையாளம் கண்டுகொண்ட இடம்.
"ஒரு ஊரில் ஒரு சண்டியர் இருந்தான். சண்டியர்! அவனுக்குப் பெயர் சண்டியர். எந்நெரமும் பெரிய பிச்சுவாக் கத்தியோடு தான் அலைவான். ஒருநா ஒரு வியாபாரி எதிரே ஓடையில் வந்துக்கிட்டிருக்காரு. சேவு வியாபாரி.
வியாபாரிக்கு ஏற்கனவே பயம், பிச்சுவாக்கத்தி பிச்சாண்டின்னு கேள்விபட்டிருக்கிறார். ஆனால் பார்த்தில்லை. அந்த வழிப்பறி கொள்ளைக்காரன் இடையிலே வந்து மறிச்சிருவானோ என்ற பயம்.
எதிரே அந்த சண்டியர் வந்தான்.
“ஏலே, நூறு சேவு கொடு!” என்கிறான். வியாபாரி சேவு கொடுத்தார். சாப்பிட்டதும் 'சில்லரை, கொடுங்க' என்று என்று கேட்டார். 'சில்லரை என்னலே சில்லரை? போடா, தாடையிலே ரெண்டு கொடுத்தன்னா?' மிரட்டுகிறான் சண்டியர்.
வியாபாரி மறுபடி கேட்க, சண்டியர் ஒரு அடி கொடுத்திருக்கிறான். ரெண்டு அடி கொடுத்திருக்கிறான். மூணாவது அடிக்கு வியாபாரி தாவிப் பாய்ந்து, சண்டியரை இழுத்துப் போட்டு மேலே அமுக்கினார். சண்டியர் கீழே வியாபாரி மேலே.
அப்புறம் “ஏலே, நா யார் தெரியுமாலே? எங்கிட்டயா கட்டுற உன் வீரத்தை? நான்தான்லே பிச்சுவாக்கத்தி பிச்சாண்டி" என்று கீழே படுத்திக்கிட்டே சொல்றான்
“பிச்சுவாக்கத்தி பிச்சாண்டி” என்று சொன்னதும் வியாபாரிக்கு வெல வெலத்துப் போச்சு.
அந்தாக்கில பயந்து, 'குபீர்னு' எந்திரிச்சிட்டார்.
“இப்ப நா கீழே படுத்துக்கிறேன். நீங்க மேல போட்டு அமுக்குங்க; அடியுங்க; சேவு எவ்வளவு வேணுமின்னாலும் சாப்டுங்கய்யா'' என்று விருளியடித்துப் போய் சொல்றார் வியாபாரி.
“சேவு வேண்டாம், ஓண்ணும் வேண்டாம். நீ இப்ப என்னை தூக்கிப் போட்டு அமுக்கின பாரு. அத மட்டும் வெளியே சொல்லிராதே" சண்டியர் அப்படியொரு விண்ணப்பம் போட்டான்.
இந்த பிச்சுவாக்கத்தி பிச்சாண்டி கேட்டு கொண்டது மாதிரியே, பாரதத்திலே வருகிற கிருஷ்ண பரமாத்மாவும் கேட்டுக் கொண்டார் என்றால் பாருங்களேன் என்று கதை சேர்ப்பாள முக்கம்மா.
“சத்தி மிக்க கிருஷ்ணனை, மனசில் காட்டியதால் தானே மதியூக சகாதேவனுக்குப் பெருமை. ஆகவே பலசாலியான சண்டியரை மல்லுக்கட்டி அழுக்கியதால் சேவுக்காரனுக்கு பெருமை" ௭ன்று பிறகும் சோடிப்பாள்.
சுய முத்திரைகளை அவள் செதுக்கினாள். லாவகமான சொல்லும், நாட்டுப்புறங்களில் அலைந்து திரிந்ததால் கிடைத்த கதைகளும், சொலவடைகளும், அனுபவமும் வரம் தந்தன.
“லேசப்பட்டவளா? ஏழுர்த்தண்ணி குடிச்சி வளர்ந்த பிறவியாச்சே! எல்லாச் சொல்லும் அங்கனதான இருக்கும்” பெருமைப்படுவார்கள்.
“கேட்டா அவ பாடுற மாதிரி கேட்கணும். மற்றவர்களும் பாடுறாங்களே” என்று அவன் காதுபட புகழ் மாலைகள் விழுந்தன.
நிறைய முடி இருந்தால் கொண்டை போட்டுக் கொள்ளலாம். கொப்பு வைத்துக் கொள்ளலாம். பூ வைத்துக் கொள்ளலாம் (கொப்பு தலையில் சூடும் நகை). குரல் இனிமை, புத்தி வளம் இருந்தால், எப்படி எப்படி சிங்காரிக்க வேண்டுமோ, அப்படி சிங்காரித்துக் கொள்ளலாம். இசை வளத்தால் மூக்கம்மா எவ்வளவோ சிங்காரித்துக் கொண்டாள்.
ரொம்ப நாளைக்கு ஒதுக்கம் கொண்டிருக்க முடியாது; கலை நிகழ்ச்சிக்காக வேகு, வேகு என்று ஓடிக்கொண்டிருக்கிற போதும் வாழ்க்கைப் பாதையில் சாலையின் மேடுபள்ளங்களை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். நொடிகளில் வண்டி குடை சாயாமல் சாதுரியமாய்ப் பயணிக்க வேண்டும்.
ஒரு சொல் கொடுத்து, அவனை ஏற்றுக் கொண்டு வந்தாகி விட்டது. வாக்குத் தந்து வந்ததினாலேயே அவனை மட்டும் நம்பிப் போக முடியாது. ஒரு நோய் நொம்பலத்தில் விழுகிறபோது துயரத்தின் பாதளத்திலிருந்து கை தூக்கிக் கூட்டிப் போகிறவர்கள் உறவுகள் தான்.
உறவு, சொந்தங்களின் மேடு, பள்ளம் கண்டு எங்கெங்கே நிதானப்பட வேண்டுமோ, அங்கே நிதானப்பட்டாள். அவனுடைய சொந்தங்கள் அவளுக்கும் சொந்தங்களாகின. அப்படித்தான் அவனுடனான உறவு இறுகிக் கொண்டது.
தொலை நோக்கில் பார்த்தபோது, வாழ்வின் நுட்பங்கள் அவளுக்குப் பிடிபட்டன; நேர்பார்வைக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் வளைவுகள் தென்பட்டன. மூத்த குடியாளுக்குக் கிடைத்தவை தாலியிட்டு வந்த உரிமைகள்; சொந்த சாதியிட்டு கிடைத்த உரிமைகள்; தாலியும் இல்லை. சாதியும் இல்லை. மூத்த குடியாளுக்கு இருக்கிற உரிமைகள் தனக்கிருப்பதாகச் சொல்ல முடியுமா? அவனுடைய சொந்தங்களையே கூட, தன் சொந்தமாக அழைக்கிற அளவுக்கு இன்னும் பழக்கம் கைகூடவில்லை. எந்த வயசுக்காரராக இருந்தாலும் வர்றேம்மா, போறேம்மா என்று பொத்தம் பொதுவாக 'அம்மா' போட்டுத்தான் பேச முடிகிறது,
அதனால் அவள் ஒரு முடிவெடுத்தாள். என்ன தலைபோகிற காரியமாக இருந்தாலும், அவனுடைய சொந்தக்காரர்கள் விட்டிற்குப் போய், உட்கார்ந்து நாலு வார்த்தை பேசிவிட்டு வருவது; மாறி மாறிப் போய் பேச்சுக் கொடுத்தாள். 'கலைவாணி' என்ற அங்கீகாரத்தோடு மின்னுகிறவள், தங்கள் விட்டுக்கு வந்து உட்காருவது அவர்களுக்கு பிரமிப்பைக் கொடுத்தது 'வங்கக்கா' என்று வாய் நிறைய அழைத்து, உறவுகள் அவளை எடுத்துப் வைத்துக் கொண்டார்கள்.
மகள் மதுரை மீனாவை ஒருநாள் அழைத்து "போய் பெரியம்மாவைப் பார்த்து வா" என்று சொன்னாள். "நீங்க, அவளைக் கூட்டிட்டுப் போங்க ஒத்தையிலே போக, சின்னப் பிள்ளை தெகைச்சிப்போகும்" என்றாள். முதலில் அவன் சுணக்கம் செய்தபோது அக்காவை எனக்குத் தெரியும். அவங்கள பூப்போட்டுக் கும்பிடனும்' என்று அனுப்பி வைத்தாள். மனச் சம்மதம் இல்லாமல் ராமக்காளை, மதுரை மீனாவை கூட்டிக் கொண்டு போனான்.
பார்த்து திரும்பி வந்த மகளிடம், 'பெரியம்மா நல்லா பேசினாங்களா?' என்று கேட்டாள். சந்தோசமாக தாயாரின் கழூத்தைக் கட்டிக் கொண்டு மதுரை மீனா சொன்னாள்;
"ஓம் மக முகத்தைப் பார்த்தா தெரியலயா?" என்று மலர்ந்த முகத்தை விரித்தாள்.
“வெட்டை, கட்டையில போகும்” என்பார்கள்.
“வெட்டை வெடிசூலை
வட்டறத் தீராது காண்” என்று சொல்கிறது மருத்துவ நிகண்டு.
வெள்ளை ஒழுக்குப் போகிற வெட்டை நோயும், அடிவயிற்றைச் சுற்றித் தீராத வலி கொண்டு எரிகிற சூலை நோயும், மண்டையோடுதான் போகும். 'வட்டறத் தீராது' என்றால், உயிர் போகிறவரை போகாது என்று பொருள்.
கிராமத்தில் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கைப்பக்குவ மருந்து உண்டு. ஒரொரு வீட்டுக்கு, ஒரொரு நோய்க்கு கைப்பக்குவமாய் மருந்து சேர்த்துக் கொடுப்பார்கள்.
கண்ணில் எரிச்சல், வெள்ளையாய் பூ விழுதல் ஆகியவைகளுக்கு ஒரு பச்சிலை உண்டு. நல்ல கொழுந்து இலையாக நாலு பிடுங்கி, கைகளில் நன்றாகக் கசக்கி கண்ணில் பிழிந்து விடுவார்கள். ஒரு நேர மருந்துதான்.
எவ்வளவு ஆழமான வெட்டுக் காயம், பிளவு எதுவாக இருந்தாலும் மிளகாய் வத்தலை கரி மாதிரி கருக்குவார்கள். மரவையில் போட்டு, நல்லெண்ணெய் விட்டு, ஒரு கட்டையை வைத்துத் தேய்ப்பார்கள். கண்ணங்கரேல் என்று மைப்பாகமாக வந்தவுடன், வெட்டுக் காயத்தில் களிம்பு மாதிரி அப்பி, கட்டுக் கட்டி விடுவார்கள். ஒரு கட்டோடு சரி. அப்படியே புண் சுக்கு மாதிரி காய்ந்து விடும். மிளகாய் வத்தல், நல்லெண்ணெய்க் கூட்டினுடைய பலனா அல்லது தேய்க்கிற மரவைக் கட்டையோட மூலிகைப் பலனா என்று இதுவரை அந்த வீட்டார் சொல்லவில்லை.
பககத்திலிருக்கிற பெருமாள் பட்டியில் மஞ்சள காமாலைக்கு மருந்து கொடுப்பதில் பேரெடுத்த ஒருவர் இருக்கிறார். போகிறபோது, நாலு காசுக்கு கடையில் மிளகு மட்டும் வாங்கிப் போக வேண்டும். ஒரு பச்சிலை, எந்தக் காட்டில், எந்த மூலையில் கிடைக்கிறதென்று, அந்தப் பெரியவருக்குத் தான் தெரியும். வீட்டில் எப்போதும் அந்தப் பச்சிலை செடி, பிடுங்கிக் கிடக்கும். பச்சிலையில் மிளகை வைத்து சுருட்டிக் கொடுப்பார். வாயில் போட்டு மென்று சாறோடு விழுங்க வேண்டும். இதுவும் ஒரே நேர மருந்துதான். ரொம்ப முற்றிப் போன நோயாக இருந்தால் இரு நேர மருந்து.
மூத்த குடியாளுக்கு வெட்டை நோய் கண்டு, உதிரப் போக்கு ஆகியது. ஒன்னுக்கு, ரெண்டுக்கு இருக்கிறபோதும், எல்லா நேரத்திலும் உதிர ஒழுக்கு போய்க் கொண்டிருந்தது. நாளுக்கு நாள் இளைத்து, உள்ளுக்குள் ஒடுங்கிக் கொண்டே போனாள்.
கோவில்பட்டி, மதுரை என்று பெரிய டாக்டர்களிடமெல்லாம் ராமக்காளை கூட்டிப் போய் காட்டினான். மட்டுப்படவில்லை.
மூக்கம்மா வந்து இரண்டு வருசம் தாண்டிப் போய்விட்டது.
இப்படியொரு கொடூர நோய் மூத்த குடியாளை வாட்டி எடுக்கிறது என்று ராமக்காளையும் சொல்லவில்லை; “எனக்குத் தெரியாமலே வச்சிருந்தீகளாக்கும்'” என்று அவனைக் கோபித்துக் கொண்டாள்.
சோற்றுக் கற்றாழை மடலை முள் போக சீவி, தோலையும் சீவிவிட்டு, துண்டம், துண்டமாய் நறுக்கி உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். பொல்லாக் கசப்பு. கசக்கிறதென்று முன்னால், பின்னால் இனிப்பு சேர்த்து விடக்கூடாது. கண்னை மூடிக்கொண்டு வாழைப்பழம் சாப்பிடுவதுபோல் உள்ளே தள்ளிவிட வேண்டும். அந்த நோய்க்கு, அந்த ஒத்த மருந்துதான் என்று சொல்லி, கையோடு சோற்றுக் கற்றாழையை வெட்டி, சீவி, துண்டம் போட்டு கொடுத்துனுப்பினாள் மூக்கம்மா.
ஊர் ஊராய்த் திரிந்த காலத்தில், அங்கங்கே கேட்டுத் தெரிந்து கொண்டது இந்த கைப் பக்கவ மருந்துகள். அதையே இன்னொரு இடத்துக்கு போகிறபோது, பிரயோகப்படுத்தினாள். அனுபவங்களின் குவிப்பில் பலவிதமான நோய்களுக்கு கைப்பக்குவம் பார்க்கிற, மூலிகைக் குணம் தெரிந்த மருத்துவச்சியாகவும் தேர்ச்சி கொண்டிருந்தாள்.
முன்னாலாவது மூத்த குடியாள் வீட்டுக்கு போக வர இருந்தான் ராமக்காளை. இப்போது போக்குவரத்து அறவே நின்று போனது. புஞ்சைக் காட்டு மழை போல, ஒரு நேரம் நினைத்தால் வெள்ளக்காடாய் சகட்டடி அடிக்கும். நின்றால் வருசக்கணக்கில் வெறுங்காடாய் போட்டுப் பார்த்து விடும்.
“அப்படி, சடார்ன்னு நிறுத்திட்டா?” என்று எதிர்க் கேள்வி போட்டாள் மூக்கம்மா, அவனிடமிருந்து சரியான பதில் வரவில்லை.
"அப்படித்தான்" என்றான்,
"அவ பாக்கிறதுக்கு தான் அப்படி, மனசுக்குள்ள நெருப்பை எரிய விட்டிக்கிட்டிருக்கிறா. உள்ளுக்குள்ள பலதும் நினைக்கிறா. தனக்குப் பிள்ளையில்லையேங்கிற வெறுப்பு. எல்லாம் புகையும் கங்குச் சிதறுலுமா எரிஞ்சிக்கிட்டிருக்கு. தன்மையான பழக்கம், பேச்சு, அமர்ந்த குணம் எல்லாம் முன்ன இருந்துச்சு, இப்ப இல்ல"
“எப்ப? என்ன கூட்டிட்டு வர்றதுக்கு முன்னால தானே?” மூக்கம்மா கேட்டாள்.
அவனிடம் பதில் இல்லை.
“அப்படித்தான் இருக்கும். அதுக்கு மேல வேற எப்படி? நானா இருந்தாலும் அதுதானே'' என்றாள் மூக்கம்மா.
'அப்படித்தான்' என்ற சொல்லுக்கு, அவன் மனதடியில் ஓடும் நீரோட்டங்கள் வேறாக இருந்தன. மீனாவை அவளுடைய வீட்டிற்கு அடிக்கடி அனுப்ப வேண்டாம் என்றான். தேவையில்லாமல் எரிச்சலும் மனநோயும் உண்டாகும் என்றான்.
"நீங்கதான் போவலை, அதுக்காக பிள்ளையையும் நிறுத்திர முடியாது. நீங்க சொல்றது சரியாய் இல்ல" என்று கோபமாய் பேச்சை முடித்துக் கொண்டாள்.
பச்சையப்பன், மதுரை 'ஆர்வி' மில் தொழிலாளி. 'ஆர்வி' மில் இப்போது 'மதுரா கோட்ஸ்' என்று பெயர் மாற்றலாகி நிற்கிறது.
அமைதியான நதியின் நெஞ்சில் பாறாங்கல் உருண்டு விழுவது போல், சமுதாயத்தின் நெஞ்சு அதிர்கிற மாதிரி சில சம்பவங்கள் நடந்தன.
இவைகளில் சில - விஞ்ஞான வளர்ச்சியை வாழ்க்கையோடு துல்லியமாகப் பொருத்தாமையால் ஏற்பபட்டவை - அரியலூர் ரயில் விபத்து, ராமேசுவரம் புயல், சாஸ்நலா சுரங்க விபத்து போன்றவை.
சில - பொற்காலத்தை வேகமாய் குறுக்காகப் பாய்ந்து பிடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டதால் விளைந்தவை - ஆளவந்தார் கொலைவழக்கு, பதுக்கல் கொள்ளை, கள்ளச் சந்தை.
சில - வேகமான நகர் மயமாதலின் ஊடே, நகரத்து மயக்கங்களில் ஆத்மாவைத் தொலைத்தவிட்ட உதிரிகளின் ஆட்டம். மணிக்குறவன், கரிமேட்டுக் கருவாயன், சண்டியர்கள் வகையறா.
சமுதாயம் ஏறுக்கு மாறாய் நடந்த நடைப் பிசகால் விளைந்த அதிர்ச்சி சம்பவங்களை, கவியாகத் தொடுத்துத் தருவதில் சமர்த்தர் பச்சையப்பன். கவி தொடுத்துப் பாடவும் செய்வார்
இப்போது நகரங்களில் வாழ்பவர்கள் எல்லோரும் அங்கேயே வேர் ஊன்றி, மூலமாய் இருந்தவர்கள் இல்லை. நகரத்தின் வேர்களுக்குள் கிராமங்கள் இருந்தன. தொழிலாளியாய் நகரத்தை வந்தடைகிறபோது, வெள்ளந்தி ஆத்மாக்களாக வந்தார்கள்; ஆத்மாவின் உள்ளிருந்து வீசும் மண்வாசனைகளோடு வந்தார்கள். மண்வாசனை பிரவகிக்கும் கலைகளோடு வந்தார்கள்.
இடுப்புக் குழந்தைகளாகத் தொத்திக் கொண்டு வந்த கலைகளை, அவர்கள் இறக்கிவிடத் தயாராக இல்லை.
பறை, கஞ்சரா, சிங்கி, உடுக்கு, சலங்கை என்று ஒருத்தர் கையிலாவது, ஒரு நாட்டுப்புற இசைக் கருவி இருக்கும்.
தன்னைத் தொத்திக் கொண்ட கலையுடன், குரல் வளத்துடன், கிராமத்தின் கருக்கு அழியாமல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மதுரை நகரம் ஏறியவர் பச்சையப்பன்.
நெல்லை மாவட்டம் கழுகுமலையில், 'மதுரைக்காரர்கள் திருவிழா' என்று தனியாக ஒருநாள் நடக்கும். அப்போது மதுரையிலிருந்து, எல்லாக் கலைஞர்களும் வருவார்கள். பச்சையப்பனும் வருவார்.
கழுகு மலைக் கோயில் மண்டபத்தில் 'மதுரைக்காரர்கள் சத்திரம்' இருக்கிறது. மதுரையிலிருந்து வரும் பாட்டுக்காரர்கள், ஆட்டக்காரர்கள் அந்த சத்திரத்தில்தான் வாசம்.
பாட்டும் ஆட்டமுமாய் நுரை பொங்கும் மதுக்குடம் மாதிரி, கதகதப்போடு பச்சையப்பன் வருவார். 1956ல் நடந்த அரியலூர் ரயில் விபத்துப் பாட்டு அப்போது அவருக்கு ரொம்பப் பேர் தந்த பாட்டு. மக்களுக்கும் அந்தப் பாட்டு மேல் ரொம்பப் பிரியமாய் இருந்தது.
“பெரியவரே, சிறியவரே
பிரியமுள்ள தமிழர்களே,
அரியலூரு ரயில் விபத்தை
அநியாயத்தை சொல்லி வாரேன்
அளவில்லாத சேதம் - பலர்
அழிந்தாரையா பாவம்"
- கிராமியக் கலைஞனின் விரிந்த குரல் எட்டுக் காலச் சுதியில் ஓங்கி
அடிக்கும்,
“சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்
சரியான மழை விழுக
அநியாயக் காலத்துக்கு
அடித்து வெள்ளம் கரை புரள
ஆனதிந்த மரணம் - ரயில்
அடித்ததையா கரணம்."
“பகவானை வணங்கச் சென்ற
பக்தர் கூட்டம் வருகுதையா,
நகை நட்டுச் சாமான்களோடு
நதியில் விழுந்து செத்தாரையா
ராமேசுவரத்துப் பக்தி - இந்த
நடுப் பாலத்தில் பல்டி."
“மனம் என்ற செங்கலாலே
மாடி காட்டும் மானுடர்கள்
மர்மமாக மறைந்தார் - ஆற்று
மணலுக்குள்ளே புதைந்தார் - ஐயோ!"
ஐயோ என்று இழுக்கிறபோது, அந்தச் சொல் இழுப்பு, உயிரைச் சுண்டி இழுக்கும். இழந்த மனசுக்காரர்கள், தாரை தாரையாகக் கண்ணீர் செரிந்தார்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்களின் சகல புலன்களும், அப்போதைக்கு பச்சையப்பனின் கை வசம் அடக்கம்.
“உயிர் என்ற காற்று - இந்த
உடலுக்குள்ளே இருக்குதையா
நிகர் என்ற மனிதர் கூட்டம்
நெஞ்சைத் தூக்கி நடக்குதய்யா
நிலையில்லாத ஆட்டம் - ஒரு
நிமிசத்தில் ஓட்டம் - ஐயோ!"
“தூத்துக்குடி எக்ஸ்பிரசும்
துயரமான ரயில் விபத்தும்
பார்த்து மனம் துடித்தார்
பச்சையப்பன் கவிதொடுத்தார்
பதிய வைத்தார் ஏட்டில் - இனி
பாடுவார்கள் நாட்டில்."
ஒவ்வொரு கதைப் பாடலிலும் அவர் பெயர் முன்னும் இருக்கும்; பின்னும் இருக்கும். பாடலை வடித்துக் கொடுத்த கவியின் பெயரை, எங்கேயாவது சொருகி வைப்பது, கிராமியக் கலைஞர்களிடம் மாறாமல் தொடரும் மரபு.
செவி வழியாகவும், வாய் மொழியாகவும் பரிமாறப்படும் இலக்கியம். படைத்தவனின் பெயர் சொல்லப்படாமல் போய்விடலாம் என்பதற்காக இவ்வாறு பிற்காலத்தில் பதிவு செய்வார்கள்.
'வேம்பு திங்கிறவனுக்கு வேம்பு ருசி
கரும்பு திங்கிறவனுக்கு கரும்பு ருசி'
- என்கிற மாதிரி இப்பவும் இந்தக் கலைகளை ரசிக்கிற கூட்டம் ரசிக்கத்தான் செய்கிறது. மண்ணின் பாரம்பரியக் கலைகளை அடையாளம் கண்டு, அதிலேயே சொக்கி விழுகிற மனங்கள், எங்கே புலம் பெயர்ந்தாலும் திளைக்கத் தான் செய்கின்றன.
ராமக்காளையும், மூக்கம்மாவும் சின்னப் பிள்ளைகளாட்டம் முன் வரிசையில் உட்கார்ந்து, பச்சையப்பனின் ஆட்டம் பார்த்தார்கள். அவரிடம் நெருக்கமான பழக்கம் இல்லை. அந்தக் கால 'வாய்ப்பாடு' அளவில் விற்கும் பச்சையப்பன் பாடல் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டார்கள்.
ராத்திரி, ராத்திரியெல்லாம் நடக்கும் ஆட்ட, பாட்டத்தை கண் முழித்துக் கிடந்து கிறங்குகிற சுகம்.
ஒரு சுவையான கட்டத்தில் கிறங்கி, லயித்துக் கிடந்த அவர்களின் பின்னால் ஆதிரன் வந்து 'கொஞ்சம் இங்க வாங்க' என்று கூப்பிட்டான். ஆதிரன் குரலும் முகமும் வித்தியாசமாய்த் தென்பட்டன. அவர்கள் சுதாரிப்பாக இருந்திருந்தால் ஒரு சொல்லிலேயே எழுந்திருந்திருக்க வேண்டும். திரும்பிப் பார்க்காமல், ஆட்டத்தில் கண் பதிந்திருந்த அவர்களின் பின்னுக்கு நடுவில் உட்கார்ந்து, காதில், முணு முணுத்தான்.
“ஐயோ போச்சே, போச்சே” என்ற அலறல் மட்டும் மூக்கம்மாவிடம் கேட்டது.
ஊரில் மூத்தகுடியாளிடம் மகளைப் போய் இருக்கச் சொல்லிவிட்டு மூக்கம்மா வந்திருந்தாள். அங்கே இருந்தால் சிரித்துப் பேசி, விளையாடி இருப்பாள் என்று தான் இரண்டு பேரும் கழுகுமலை திருவிழாவுக்கு வந்து விட்டார்கள்.
துணைக்குத் துணையாய், தாய்க்குத் தாயாக இருப்பாள் என்று நினைத்த நினைப்பு, தப்பாகப் போய், மூத்தக்குடியாள் மனசில் வன்மம் வேலை செய்துவிட்டது. ௧ரு, ௧ரு என்று மசங்கி வருகிறநேரத்தில், வெள்ளந்தியான மீனாவைக் கைப்பிடியாய் பிடித்துக்கொண்டு மூத்த குடியாள் வெளியேறியிருக்கிறாள்.
ஊருணிக் கரையில் உள்ள கிணற்றில், அந்த மயில்குஞ்சின் சடலம், குப்புற அடித்து மிதந்தது. மூத்தகுடியாளைக் காணவில்லை.
"எம்பிள்ளைய கொன்னுட்டியா? வன்மம் வச்சிருந்தி பழியெடுத்திட்டேயடி, சண்டாளி” ராமக்காளை தலையைத் தலையை அடித்துக் கொண்டு அழுதான். அப்படியொரு வங்கொலை சரித்திரத்து நிகழ்ச்சிகளில் இல்லை. நல்லதங்காள் கதையில் நடந்திருக்கிறது. மூளி அலங்காரியான அண்ணிமின் கொடுமையால் சொந்தப் பிள்ளைகளையே கிணற்றில் வீசியெறிந்த புராணக் கதை அது.
குடை அத்தி மரத்தடியின் வேரிலிருந்து புறப்பட்டு, முகப்பரப்பில் பூசணிப் பூவைக் கொண்ட ஒரு பொம்பிளையைக் காணாமல் தவங்கிப் போய் கிடக்கிறார்கள் கிராமத்துச் சிறுவர்கள்.
ஒரு துடைப்பத்தையோ, ஒரு சீப்பையோ, தாய்மார்களின கையில் கொடுத்து, கஞ்சியோ, ௯ழோ அந்த நேரப் பாட்டுக்கு வாங்கிப் போன சித்திரத்தை காணோம்.
கிராமத்தின் அந்திக் கனவுகளை அலங்கரித்தபடி வரும் -
பாட்டுத் திறத்தாலே புஞ்சைக் காடுகளை பாலித்தபடி வரும் -
இராமகாதையை பாட்டாய் வடித்து, நிலா வெளிச்சம் போல் வரும் -
ஒரு பெண் பிறவியைக் காணாமல் எங்கள் ஊர்ச் சிறுவர்கள் உணங்கிப் போகிறார்கள்.
சிறுவர்களின் உலகங்கள் காய்ந்து கிடக்கின்றன. செவிப்பறைகள் தாகம் கொண்டு தேடுகின்றன.
கருத்துகள் / Comments