இளைஞர்களின் போராட்டம்: எப்படிப் பார்க்கிறார்கள் மொழிப் போராளிகள்?

ஜனவரி 25 மொழிப் போராட்ட நாள். 1965 போராட்டத்தின் மூலம் தமிழ் மொழியை மட்டுமின்றி, நாட்டின் பன்மைத்துவத்தையும் காத்த அன்றைய மாணவர்கள், இன்றைய (2017 ஜல்லிக்கட்டு) மாணவர் போராட்டத்தை அன்றைய பின்னணியில் எப்படிப் பார்க்கிறார்கள்?

மதுரையில் ஊர்வலம் சென்ற மாணவர்களைக் காங்கிரஸார் அரிவாளால் வெட்டிய பிறகுதான், இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கே முடிவுகட்டிய போராட்டம் அது. இப்போதும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் பற்றிப் பரவுவதற்கு மதுரை அலங்காநல்லூர்தான் காரணமாக இருந்திருக்கிறது. அன்றைய போராட்டத்தை வழிநடத்திய மாணவர்களுக்கு எதற்காக இந்தப் போராட்டம் என்ற புரிதல் வரலாற்றுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் இருந்தது.

அரசியல் சட்டத்தை எரித்தால் போராட்டம் பரவும் என்ற திட்டத்தோடு, சட்ட எரிப்புப் போராட்டத்தில் நானும் பங்கேற்கிறேன் என்றபோது, “வேண்டாம், நாங்கள் கைதானால் போராட்டத்தைத் தொடர்ந்து வழிநடத்த தலைமை தேவை” என்றார்கள் சக மாணவர்களான கா.காளிமுத்துவும், நா.காமராசனும். அவ்வளவு புத்திசாலித்தனமாகவும், இலக்கோடும் முன்னெடுக்கப்பட்ட அந்தப் போராட்டம், தமிழ்த் தேசியப் போராட்டமாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், ஏமாந்துவிட்டோம்.

ஆனால், இன்றைய மாணவர்களிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, வாய்மொழி வாக்குறுதியை ஏற்க மாட்டோம், முதல்வரே எழுத்துபூர்வமாகத் தரட்டும் என்று கூறியது பாராட்டுக்குரிய முடிவு. என்னைப் பொறுத்தவரையில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்பது ஒரு அடையாளம்தான். அது வாடிவாசல் எல்லைகளைத் தாண்டி பண்பாட்டு மீட்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, பறிபோன வாழ்வியல் முறைகள் மீட்பு என்று பல பரிமாணங்கள் கொண்டதாக மாறிவிட்டது. எந்தப் புரட்சியும் நேரம் குறித்து வைத்துக்கொண்டு உருவாவதில்லை. வரலாற்றின் போக்கில் வரும். அதனை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது!

நன்றி: இந்து தமிழ் - 25 ஜனவரி 2017

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசத்தின் “கரிசலின்‌ இருள்கள்‌” - எஸ்.ராமகிருஷ்ணன்

பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

சாகாப் பொருளும் அது, சாகடிக்கும் பொருளும் அது!