ஜல்லிக்கட்டு ஆதரவு, இந்தி எதிர்ப்பு... இரு போராட்டங்கள்... பல ஒற்றுமைகள்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டம் உச்சம் பெற்று வருகிறது. 51 ஆண்டுகளுக்கு முன், இதேபோன்றதொரு தன்னெழுச்சிப் போராட்டத்தைத் தமிழகம் சந்தித்தது. தமிழகத்தின் வரலாற்றை மாற்றியமைத்த அந்தப் போராட்டம் இந்திக்கு எதிரானது. தொடக்கத்தில் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அந்தப் போராட்டம் மாணவர்களின் கரத்திற்கு வந்த பின்னால் விஸ்வரூபமெடுத்தது. தமிழக இளைஞர்களின் குரல் இந்தியாவையே நடுங்கச் செய்தது. ‛இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம், அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது’ என்கிறார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம்.


“உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜல்லிக்கட்டில் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம் வாடிவாசலைத் தாண்டி வெளியேறி இருக்கிறது. தமிழ்க் கலாசாரத்தைக் காக்கிற போராட்டமாக, காவிரி நீர் உரிமையைக் கேட்கிற போராட்டமாக, விவசாயிகளுக்கான போராட்டமாக, தமிழர்களுடைய ஒட்டுமொத்த பிரச்னைகளுக்காக போராட்டமாக மாறி விட்டது. இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி.

1965ல் நடந்த போராட்டம் என்பது, மொழிக்கான ஒற்றைப் போராட்டமாகவே இருந்தது. அன்று இருந்த மொத்த பிரச்னைகளுக்கான போராட்டமாக அது பரிணாமம் பெறவில்லை. ஆனால் இன்று, தமிழ்நாட்டின் பிரதான பிரச்னைகளின் பரிணாமமாக இந்தப் போராட்டம் மாறியிருக்கிறது.

இந்தப் போராட்டம், தன்னெழுச்சியாகத் தொடங்கினால் கூட தேர்ந்த திட்டமிடல் போராட்டக்குழுவினரிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம், இளைஞர்களையும் மாணவர்களையும் ஈர்த்து, அந்த மையத்தில் இருந்து வெளியேறி தமிழகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. அதற்குப் பின்னால் தெளிவான திட்டமிடல் இருக்கிறது. அமைச்சர்கள் வந்து பேசும்போது கூட, பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மாணவர்கள், "முதலமைச்சர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட வேண்டும், அதை வைத்து நாங்கள் போராட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என்பதைத் தீர்மானிப்போம்.." என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார்கள்.

இதுநாள் வரையிலும் தங்கள் பிரச்னைகளை வெளிப்படுத்தாமல் தங்களுக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அதை வெளிப்படுத்த தகுந்த வெளி இப்போது அமைந்திருக்கிறது. இளைஞர்களை திசைதிருப்புவதற்கான பல்வேறு சூழல்கள் இருந்த போதிலும் அதையெல்லாம் கடந்து ஒற்றைக்குரலில் அனைவரையும் இணைத்திருப்பது இந்தப் போராட்டத்தின் வெற்றி.
1965ல் இல்லாத சில வாய்ப்புகள் இப்போது இளைஞர்களுக்குக் கிடைத்திருப்பதும் முக்கியமானது. அப்போது தொலைக்காட்சிகள் கிடையாது, வலைதளங்கள் கிடையாது, வானொலியும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பத்திரிகைகளும் ஒரு கட்டத்திற்கு மேல் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மாணவர்களுக்கு அப்போதிருந்த ஒரே தொடர்பு, கடிதத் தொடர்பு தான். ஒரு கட்டத்தில் அஞ்சல் அலுவலகங்களிலும் தணிக்கைகள் நடந்தன. இன்று வலைத்தளங்கள், முகநூல் வாய்ப்புகள், உரிமையோடு செயல்படக்கூடிய ஊடகங்கள் என பல வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. இது கூடுதல் வலிமை.


1965-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும், தற்போதைய போராட்டத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு போராட்டங்களுக்குமான வீரியமான தொடக்கம் மதுரையில் தான் நடந்திருக்கின்றன. 1965, ஜனவரி 25ம் தேதி மாணவர்கள் கருப்புப்பட்டை அணிந்து கல்விக்கூடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தலைமை அறிவிக்கிறது. மதுரையில் அதைப்போல மாணவர்கள் கருப்புப்பட்டை அணிந்து ஊர்வலம் செல்கிறார்கள். அப்போது வடக்குமாசி வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தவர்கள் மாணவர்கள் மீது கொடும் தாக்குதலை நடத்தினார்கள். 5 மாணவர்கள் வெட்டப்பட்டார்கள். உடனடியாக மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, காங்கிரஸ் கொடிக்கம்பங்கள், குடியரசு தினத்திற்காக வைக்கப்பட்டுள்ள வளைவுகள் அனைத்தையும் உடைத்து நொறுக்குகிறார்கள். மதுரையில் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற செய்தி எங்கும் பரவுகிறது.

மறுநாள் 26ம் தேதி  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் சிவகங்கையைச் சேர்ந்த மாணவர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார். சென்னையில் பல கல்லூரி மாணவர்களும் ஒருங்கிணைந்து கோட்டை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். ஊர்வலம் முடிந்து திருவல்லிக்கேணி வெங்கடேஸ்வரா ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவர்களைச் சுற்றி வளைத்து காவலர்கள் கொடும் தாக்குதலை நடத்தினார்கள். பச்சையப்பன் கல்லூரியிலும் தாக்குதல் நடந்தது. இப்படி கடும் நெடுக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தொடர்ந்தன. ஆனால், போராட்டத்தை வடிவமைத்தது மாணவர் அமைப்புகளின் தலைமை. அந்தப் போராட்டத்தில் ஒரு ஒருங்கிணைப்பு இருந்தது. ஆனால் இப்போது நடக்கும் போராட்டம் என்பது முழுக்க, முழுக்க தன்னெழுச்சியாக நடக்கிறது. எவ்வித பிரசாரமும் இல்லாமல் உணர்வுப்பூர்வமாக ஆண்களும் பெண்களும் கூடுகிறார்கள்.

மீண்டும் எனக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டக் காட்சிகள் மனக்கண் முன் வந்து போகின்றன. இது முக்கியமான தொடக்கம். இளைஞர்களின் ஒழுங்கும், கட்டுப்பாடும், தங்கள் நியாயத்தை எடுத்து வைத்துப் போராடும் பாங்கும் உண்மையிலேயே நம்பிக்கையை உருவாக்குகிறது. அதே நேரம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை எப்படி வெறியோடு நடந்து கொண்டதோ அதே அடக்குமுறை உணர்வோடு தான் இப்போதும் காவல்துறை நடந்து கொள்கிறது. அன்று எப்படி மத்திய மாநில அரசுகள் போராட்டத்தை எதிர்கொண்டனவோ அதைப்போலவே இப்போதைய அரசுகளும் எதிர்கொள்கின்றன.

இன்றிருக்கும் வாய்ப்புகளும், இளைஞர்களின் வலிமையும் நிச்சயம் நல்லதொரு விளைவை நோக்கி தேசத்தை இட்டுச்செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..." என்று உணர்ச்சிப் பூர்வமாக சொல்கிறார் பா.ஜெயப்பிரகாசம்.

நன்றி: விகடன் - 18 ஜனவரி 2017

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்