காலச்சுவடு - நந்தினி சேவியர் அஞ்சலி கட்டுரை பற்றிய கடிதம்

காலச்சுவடு அக்டோபர் 2021 இதழில் வெளியான இரவி அருணாசலத்தின்  - நந்தினி சேவியர் அஞ்சலி கட்டுரை "ஒரு பயணத்தின் முடிவு" பற்றிய கடிதம்.


அன்புள்ள ரவி,

நெடுங்காலத்தின் பின் தங்களை ”காலச் சுவட்டில்“ சந்திக்க முடிந்தது. இடையில் தாங்கள் வந்து போனீர்களா எனத் தெரியாது. மின்னிதழ்களோ, முகநூல் ஊட்டங்களோ, பின்னூட்டங்களோ நான் அதிகம் வாசிப்பதில்லை.

முதுமையின் பயண உளைச்சலில், இரவுத் தொடர் தூக்கம் இத்துப் போன இரவின் காலை நான்கு மணியளவில் காலச்சுவடில் நந்தினி சேவியர் குறித்த அஞ்சலியைக் காணலானேன். அது பற்றி சொல்ல  மூன்று வார்த்தைகள் பொருத்தமாக அமையும். நெகிழ்வான அஞ்சலி: சிறப்பான அஞ்சலி: சரியான நினைவேந்தல். நெகிழ்வான, சிறப்பான, சரியான விமர்சனப் பார்வையில் வெளிவந்துள்ள பதிவு. 

இப்போது கரையான் அரித்த பழைய ’அலை’ இதழ்களின் பைண்ட் வால்யூமுக்கும், மல்லிகை, புதுசாகவே உள்ள புதுசு தொகுப்புக்குள்ளும்  நுழைந்து வாசிக்கும் கடமையை எனக்குத் தருகிறது. ஏற்கிறேன். கைவசம் இருக்கும் இதழ்களில் எத்தனையில் நந்தினி சேவியர்  கிடைப்பார் எனத் தெரியவில்லை.

அண்மையில் வெளிவரும் ’செம்மலர்’ இதழ்களைக் காணுகிறீர்களா? எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் ஆசிரியர் பொறுப்பேற்ற பின், முற்போக்குப் படைப்பாளிகள் என ’நெற்றிப்பட்டம்’  அணிந்த இடதுசாரிப் படைப்பாளிகளுக்கு, தங்களின் விமர்சனத்தில் கண்ட நல்ல அம்சங்களை வழிகாட்ட முனைகிறார். ’மின்னாமல் செய்யாமல் வருகிற மழை போல்’ செயல்களின் வடிவமாக செம்மலர் வருகிறது. இடது முகாமில் இத்தகைய முன்னெடுப்புகள் வர்வேற்கப் பட வேண்டியவை. செம்மலர் (web site) ”இணையம் உள்ளதா’ எனத் தெரியவில்லை. மின்னஞ்சல் மாத்திரம் தற்போதைக்கு உண்டு (semmalar.tn@gmail.com).

தோழமையுடன்

பா.செயப்பிரகாசம்.

07 - 10 - 2021


கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்