பள்ளிக்கூடம் நாவல் - வாசகர் மதிப்புரை



புத்தகத்தலைப்பு: பள்ளிக்கூடம்
ஆசிரியர்: பா.செயப்பிரகாசம்

** தமிழ்நாட்டின் ஒரு சிறுநகரமான வில்வநத்தத்தின் அரசு உயர்நிலைப் பள்ளியே கதை மையம். 

** இந்தப் பள்ளியே அனைத்துக்கும் சாட்சியாயிருப்பதால் நாவலுக்கும் “பள்ளிக்கூடம்” என்று பெயர் வைத்திருக்கிறார்

** நாவலின் தலைப்பு பள்ளிக்கூடம் என்றிருப்பதால் வெறும் ஆசிரியர்கள், மாணவர்களோடு கதை நின்றிடவில்லை.

** பள்ளிக்கூடம் ஆலமரத்தின் மையத்தூணாய் இருக்க பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதியம், பெண்ணியம் என்று கதையின் போக்கு வளைந்து நெளிந்து கிளைபரப்பி விரிந்து கொண்டே செல்கிறது.

** எத்தனை கிளை பரப்பி நாவல் விரிந்தாலும் நாவலின் மையமாய் இருப்பது மனிதம்!

** புறக்கணிக்கப்படும் அரசுப்பள்ளிகள், பாதிக்கப்படும் ஆசிரியர்கள், மாணவர்கள், எளியவர்கள், பெண்கள் , என அனைவரையும் திகட்டத் திகட்ட நேசித்த ஒரு எளிய “மனிதனின்” எழுத்துக்களே இந்நாவல்.

** நாவலின் கதைப்போக்கு சுருக்கமாய்….
வில்வநத்தம் ஒரு சிறு நகரம். சுற்று வட்டார கிராமங்கள் அனைத்துக்குமான அரசு உயர்நிலைப்பள்ளி அங்குள்ளது. சமீபகாலத்தில் அப்பகுதியில் பிரபலமான தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளால் அப் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை இறங்குமுகமாக உள்ளது. அந்த சமயத்தில் அப்பள்ளிக்குத் தலைமை ஆசிரியராய் அப்துல் கனி வந்து சேர்கிறார். வேறெந்த தகுதியையும்விட ஒரு ஆசிரியராய் இருப்பதற்கான அடிப்படைத் தகுதியான “மாணவர்கள் மீதான அன்பு” அவரிடம் அதிகம் இருந்தது. கூடவே நல்ல நிர்வாகத்திறனும் இருந்தது. இது போதாதா? மோசமான பள்ளியை மாற்றி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறார்

** உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுகிறார்

 ** பள்ளியின் பல நாள் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கும் தீர்வு கண்டு பொது மக்களால் “பிள்ளைகளோட தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தந்தாரே பெரிய மனுஷன்” என்று போற்றப்படுகிறார்.

** பள்ளியின் தமிழாசிரியரும் முற்போக்கு எண்ணங்களைக கொண்டவருமான முத்துராக்கு. வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ஆசிரியர் ஜான் என்பவரும் தலைமை ஆசிரியருடன் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருக்கிறார். இவர்களின் செயல்பாடுகளால் மகிழ்வுற்று பெற்றோர் ஆசிரியர் கழகமும் துணை நிற்கிறது. இவ்வாறான செயல்பாடுகளால் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மளமளவென்றுஅதிகரிக்கிறது. 

** தலைமை ஆசிரியர் அப்துல் கனி மற்றும் பிற ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு பள்ளி மாணவர் எண்ணிக்கையிலும், தேர்ச்சியிலும் அபாரமான வளர்ச்சியை எட்டுகிறது. 

** தலைமை ஆசிரியர் அப்துல் கனிக்கு ஒரு சுவாரசியமான முன் கதையுண்டு. இவரின் போராட்ட குணம் இந்தப் பள்ளியை மட்டுமல்ல, இதற்கு முன்னரும் ஒரு பள்ளியை உயர்த்தியது. அது சென்னை புறநகரிலுள்ள ஒரு எம்எம்டியே மாநகராட்சி குடியிருப்பு பள்ளி. அங்கும் சுணங்கிங் கிடந்த ஒரு பள்ளியை தலை நிமிரவைக்க இவர் எடுத்த முன்னெடுப்புகள் ஆசிரியப் பணியிலுள்ளோருக்கு ஒரு பாடம்.

** வீட்டில் படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு பள்ளியிலேயே இரவு சிறப்பு வகுப்பு நடத்தி அனைவரையும் தேர்ச்சி பெறச்செய்தது, பெற்றோர் ஆசிரியர் கழக ஒத்துழைப்புடன் பள்ளியில் கழிப்பிட வசதி, மின்விசிறி வசதி என தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப்பள்ளியை உயர்த்தியது என இவர் செய்த ஒவ்வொன்றும் புரட்சி.

** ஒரு நல்லாசிரியர் கடமையுடன் அர்ப்பணிப்பு உடன் பணியாற்றினால் அரசுப் பள்ளியை அனைவரும் விரும்பும் பள்ளியாக மாற்றலாம்.

நன்றிகளுடன்
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
பட்டதாரி ஆசிரியர் கணிதம்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
பக்கநாடு ஆடையூர்,
ஆடையூர் அஞ்சல்,
எடப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம்-636501
தொடர்புக்கு:9080290529
தேதி: 02-11-2020 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

பலியாடுகள்

வட்டார இலக்கியம்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசக்தின்‌ "பள்ளிக்கூடம்‌” நாவல்‌: தமிழர்கள்‌ தமிழர்களாக இல்லை, சாதிகளாகச்‌ சிதைவுற்றுக்‌ கிடக்கிறார்கள்‌