தக்கலை ஜமாத்தாரும் ஒரு பத்வாவால் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருக்கிறார்கள். ஜமாத்துகளுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது..?
ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்… மனிதனை விடுதலை செய்யும் புதிய கருத்துக்கள், நடைமுறைகள், உலகெலாம் எழுந்து வருகின்றன. பழமைவாத எதிர்ப்பு, மூடப் பழக்கங்களுக்கு எதிர்ப்பு, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை, மனித உரிமைகள் போன்றவை எல்லாம் மனிதனை விடுதலை செய்யும் கருத்தியல்கள். இந்த புதிய வெளிச்சத்தை ரசூல் தான்சார்ந்த மதத்தின் மீதும் பாய்ச்ச முயன்றார்.வெளிச்சத்தை கண்டு பயப்படுகிற மதவாதிகள் ஒன்றுகூடி அவரை விலக்கம் என்ற சவுக்குகளால் விளாசியிருக்கிறார்கள்.
கட்ட பஞ்சாயத்து அதிகாரங்கள் இன்று காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. அது எதன் பேரில் வந்தாலும் சரி. மதத்தின் பெயரில் வருகிற போதும் மனித உரிமைக்காக நிற்பவர்கள் அதை எதிர்த்து நின்றே தீர்வார்கள்.
உலகமெலாம் இஸ்லாத்தின் மீது பயங்கரவாதம் தீவிரவாதம் என்ற சேறு வீசியெறியப்படுகிறது. ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் கைகள் அசிங்கப்படுவது கூட கண்டு கொள்ளாமல் இந்த சேற்றை வீசி எறிகிறார்கள். அதை எதிர்க்க கடமைப் பட்டுள்ள இஸ்லாம் இப்போது உள்ளூர் பயங்கரத்தை விதைப்பதன் மூலம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போகிறதா…
கடைசியாக ஒரு கேள்வி. ஈரான் மன்னர் ஷாவை வீழ்த்தி புதிய இஸ்லாம் குடியரசு உருவான போது பென்கள் தங்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்த முன்வந்தார்கள். ஆனால் பழைய மன்னராட்சிக் காலத்தைவிட மோசமாக பெண்கள் மீது அடக்குமுறை செலுத்தியதுஇஸ்லாமிய குடியரசு.இதை எதிர்த்து குரல் எழுப்பிய எழுத்தாளர் மர்ஜானி கத்ரபி,கவிஞர் மினாஅஸாதி,பாடகி ஷிஷோ ஷத்தாரி ஆகிய மூன்று பெண்களும் ஈரானை விட்டு வெளியேறினார்கள். அது போல ஹெச்.ஜி.ரசூலை நாடு கடத்த விரும்புகிறதா ஜமாத்..?
கருத்துகள் / Comments