அன்புள்ள முகைதீன்,
தங்கள் கட்டுரைப் பதிவு சிறப்பாக வந்துள்ளது. இதனை ‘கதை சொல்லி’யின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவும். எனக்கும் அஞ்சலில் நகல் அனுப்புக.
பா.செயப்பிரகாசம்
●●●
இப்படி ஒரு மின்னஞ்சல் கடந்த வாரம் வந்தது. நேற்று எங்கள் அச்சகத்தை வந்து பார்த்துவிட்டு வீட்டிற்கும் வந்துவிட்டார் மூத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
அவரை வரவேற்று தண்ணீர் கொடுத்த துணைவியாரிடம் “தண்ணி வேண்டாம் ஒரு இஞ்சி டீ கொடுங்கம்மா” என்றபடி என்னை விசாரிக்க ஆரம்பிக்கிறார். அந்த பாலில்லாத இஞ்சி டீயை பருகியப்பின் “டீ நல்லா இருக்குமா” என்கிறார். அரைமணி நேரத்தில் ஒரு பல்கலைக்கழக மாணவர் வருகிறார், அவரை பார்க்க. அந்த மாணவருக்கு தேநீர் கொடுத்த துணைவியாரிடம் “எனக்கு இன்னொரு டீ கொடுங்கம்மா” என்கிறார்.
இரண்டாவது தேநீரை அவர் கேட்டவுடன் அவர் அமர்ந்திருந்த அதே சோஃபாவில் அமர்ந்து ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று இஞ்சி டீயை கேட்டுக் கேட்டுக் குடித்த பிரான்ஸ் எழுத்தாளரும், முன்னாள் போராளியுமான சாத்திரி பற்றி அவரிடம் சொல்ல, அவர் ஆச்சரியப்பட்டு “அவர் இங்கு வந்தாரா? அடுத்த முறை வரும்போது எனக்கு சொல்லுங்கள் சந்திக்கனும்” என்றவர் அவருடைய ‘ஆயுத எழுத்து’ நாவல் குறித்து சில சந்தேகங்களை கேட்டு, இதற்கெல்லாம் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்கிறார். ‘ஆயுத எழுத்தை’ அவர் வாசித்திருக்கிறார். அது பற்றி அவருக்கு நெருங்கிய சில எழுத்தாளர்களிடம் விவாதித்திருக்கிறார். அவர்களில் சிலர் பிரன்சில் வசிப்பவர்கள்.
சாத்திரியின் சிறுகதை தொகுப்பான ‘அவலங்கள்’ மற்றும் கட்டுரை தொகுப்பான ‘அன்று சிந்திய ரத்தம்’ ஆகியவை குறித்து சொல்ல மேலும் ஆச்சரியமடைகிறார். சாத்திரியை அவர் மேலும் அறிந்து கொள்ள ‘அன்று சிந்திய ரத்தம்’ நூலை கொடுத்தனுப்பியுள்ளேன்.
இறுதியாக அவர் விடைபெறும்போது கடந்த மாதம் வெளியான அவருடைய ‘மணல்’ நாவலை பரிசளித்தவரிடம் சொன்னேன், “அதன்பின் சாத்திரிக்கு சொம்பில் தான் டீ கொடுத்தோம்” என்று. அந்த மூத்த கரிசல் எழுத்தாளர் சிரித்துக்கொண்டே விடைபெற்றார்.
ஆக, வரவிருக்கும் ‘கதை சொல்லி’யிலும் நான் எழுதிய ஒரு கட்டுரை இடம்பெறுகிறது. இதுவும் கி.ரா.வின் வார்த்தைகள்தான்.
அன்பும் நன்றியும் அய்யா பா.செயப்பிரகாசம்.
- முகைதீன், 1 பிப்ரவரி 2020
கருத்துகள் / Comments