மரக்காணம் - மற்றுமொரு வரலாற்றுச் சாட்சியம்

பகிர் / Share:

மரக்காணம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பான கட்டையன் தெருவைச் சென்றடைந்தபோது மூன்று நாட்கள் தாமதமாகியிருந்தன. ஏப்ரல் 25ஆம் நாள் ‘கோடிவன்னியர் ...
மரக்காணம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பான கட்டையன் தெருவைச் சென்றடைந்தபோது மூன்று நாட்கள் தாமதமாகியிருந்தன. ஏப்ரல் 25ஆம் நாள் ‘கோடிவன்னியர் கூடும் சித்திரை முழுநிலவு விழா’ மாமல்லபுரத்தில் நடந்தது. அதே நாளில் பட்டப்பகலில் கட்டையன் தெருவிலும் புதுச் சேரியிலிருந்து மரக்காணம் வரும் வழியில் அங்கங்கும் தலித் மக்கள் மீது பா.ம.க. வினர் கொடூர ஆட்டத் தை நிகழ்த்த ஆரம்பித்துவிட்டனர்.

பி.யூ.சி.எல். சார்பில் உண்மை அறியும் குழுவில் நாங்கள் (பேராசிரியர் சரசுவதி, த.முகேஷ், ராகவராஜ், கௌதம் பாஸ்கர்) சென்ற நாள் ஏப்ரல் 29. நிற்கக் கூட இயலாத தில்லையாம்பாள் என்ற (67 வயது) மூதாட்டியின் நெல் மூட்டைகளும் வைக்கோல் போரும் எரிந்துபோயிருந்தன. குத்துக்காலிட்டு உட்கார்ந்து வைக்கோல் படப்பும் தொழுவமும் எரிந்து கிடந்ததைக் காட்டி அழுதார். துரை என்பவரது மனைவி ரூபாவதியின் சினைப்பசு சில நாட்களே இருந்தன ஈனுவதற்கு. அதையும் கொளுத்தினார்கள்.


தாக்குதலுக்கு ஆளான கட்டையன்தெரு குடியிருப்பு, முந்திரிக் காடு, உயர்ந்த தைல மரக்காடு களுக்குள் இருந்தது. கிழக்குக் கடற் கரைச் சாலையில் பயணிக்கும் எவரொருவரும் அடுக்குகளினுள் மறைந்திருக்கும் ஓலைக் குடிசைகளைக் காணமுடியாது. உள்ளூர்காரர்கள் காட்டிக் கொடுக்காமல் வெளியூர்க்காரர்கள் படை எடுத்து சின்னாபின்னப்படுத்த இயலாது.

உள்ளூர்காரர்கள் நேரடித் தாக்குதலில் இறங்கி இருந்தால் வட்டார வாசனை எப்படியேனும் மேலெழும்பி துப்புத் துலங்கிவிடும். பம்மிப் பம்மி நடந்தாலும் பழகிய முகம் தெரியாமல் இருக்கமுடியாது. வெட்டரிவாள், உருட்டுக் கட்டை, கத்தி எல்லாமும் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு இருந்தன.

திண்டிவனத்தில் நடைபெறவிருந்த தீமிதி திருவிழாவைப் பார்த்துவிட்டு அங்கு உறவுகளோடு இரவுத் தங்கல்; விடிகாலையில் ஊருக்குத் திரும்பிட வேண்டுமென்ற திட்டம்; மகள் பேரக் குழந்தைகளோடு புறப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு நடந்து கொண்டிருந்தார் செல்வியம்மா. கொஞ்ச தூரம் பின்னால் வந்து கொண்டிருந்த மகள் “அம்மா வீட்டைக் கொளுத்துறாங்க” என்று கத்தினாள். பேரக் குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓடி வருகையில் வலதுபக்கம் காடுகளுக்குள்ளிருந்து மஞ்சள் சட்டை ஆட்கள் ஓடுவதைக் கண்டார். வாகனங்களில் இருந்த ஆயுதங்கள் கைகளுக்கு மாறியிருந்தன; மக்கள் பயந்து வீடுகளைப் பூட்டாமல் செய்யாமல் கிழக்கே கடல் பக்கமாக ஓடினார்கள். தப்பிச் செல்ல அந்த ஒரு திசை மட்டுமே உண்டு.


கட்டையன் தெருவில் மொத்தம் எட்டு வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன.

அங்காளம்மனுக்கு வீட்டுக்குள் கோயில் வைத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார் செல்வியம்மா. மண்கோயில். அங்காளம்மனும் மண்தான். செல்வியம்மா பூசாரி. அம்மனுக்கு கூடுவிட்டுக் கூடு பாயத் தெரியவில்லை. இல்லையெனில் கொளுத்தப்பட்டபோது அந்த மண் உருவும் எரிந்து கருகியிருக்காது. பூசாரி செல்வியம்மா அம்மனுக்கு கல்லில் உரு எடுக்கவென்றும் அதை ஒரு கோயிலாக்க வேண்டுமென்றும் கோயிலுக்கு வருவோர் செலுத்திய கும்பிடு காசு, காணிக்கை எனச் சேர்த்து வைத்திருந்த ரூ. 36000 -மும் சொந்த நகை 10 சவரனும் களவாடப்பட்டுவிட்டது என்கிறார். சொந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டதை பால்வாடியில் ஒளிந்து கொண்டு பார்த்துக் கதறியிருக்கிறார்கள். வீட்டோடு சிறு கடையும் வைத்திருந்தார் செல்வியம்மா.

“ரூபாய், நகை அத்தனையையும் கொள்ளையடித்துப் போய் விட்டார்கள். கடையும் சாமான்

களும் ரூ. 25 ஆயிரம் பெருமான முள்ளவை. எல்லாம் எரிந்துபோயின. பண்ட பாத்திரம் எல்லாமும் கொளுத்தி விட்டார்கள். கோயி லோடு சேர்ந்து அங்காளம்மன் சாமியும் அருகிலிருந்தப் புற்றும்கூட எரிந்துப்போச்சு” என்றார்.

மரக்காணம் காலனி, கட்டையன் தெருவில் வாழும் அஞ்சலை (க/பெ. நாராயணசாமி)யின் வீடு

முற்றாக எரிக்கப்பட்டு குட்டிச் சுவர்களே மிஞ்சியிருந்தன. வீட்டி லிருந்தப் பண்ட பாத்திரங்கள், கிரைண்டர், மின் விசிறி போன்ற அனைத்தும் எரிந்து கருகிக் கிடந்தன. அரிசி எரிந்து சாம்பலாகி இருந்தது.

“சம்பவம் நடந்த அன்று இந்த கிராமத்தின் வலது பக்கம் பா.ம.க.வைச் சேர்ந்த சேது திருக்காமுவின் தோட்டத்தில் நிறைய பேர் கூடியிருந்தார்கள். அத்தனை பேரும் குடித்திருந்தார்கள். மத்தியானம் 12 மணி அளவில் கையில் வெட்டரிவாள், உருட்டுக் கட்டை, பெட்ரோல் குண்டுகளுடன் எங்கள் பகுதியை நோக்கி வருவதைப் பார்த்து, உயிரைக் காத்துக்கொள்ள ஓடி விட்டோம். அங்கிருந்து ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, வீடுகளை உடைத்து, பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். பெட்ரோல் குண்டு ‘டமால்’ என்று வெடித்து, குப்பென்று தீயும் புகையும் மேலெழுந்தது. எங்களது கூரை வீடுகள் கொளுந்துவிட்டு எரிவதைத் துடிக்கத் துடிக்கப் பார்த்துக்கொண்டு நின்றோம்” என்றார் அஞ்சலை கண்ணீருடன்.


"மணமகன்: ஆ. அருண், மணமகள்: ஆ. அனுசுயா; மணநாள்: 27.5.2013 - திங்கட்கிழமை" என் றிருந்த திருமண அழைப்பிதழைக் கண்டோம். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த மணமகள் வீடும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. மணமகள் அனுசுயா பிளஸ் டூ படித்திருக்கிறார். திருமணச் செலவுக்காக வைத்திருந்த மூன்று லட்ச ரூபாயும், 15 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக மணமகளும் அவருடைய தாயாரும் துயரத்துடன் தெரிவித்தார்கள். “இரவு தங்குவதற்கு இடமில்லாமல் தூரத்தில் இருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டில் தினமும் தங்கிவிட்டு, பகலில் திரும்புகிறோம்” என்று வேதனையோடு சொன்னார் அனுசுயா. தன்னுடைய திருமணம் நடக்குமா என்ற ஏக்கமும் அவர் பேச்சில் இழையோடியது.எரிக்கப்பட்டிருந்த அங்காளம்மாளின் வீட்டுக்குள் வெந்து உருகிய பாத்திரங்கள் மட்டுமல்ல, தீ வைத்தவர்கள் குடித்துவிட்டுப் போட்ட கிங் பிஷர் பீர் பாட்டில்கள் 10-க்கும் மேல் கிடந்ததை காண நேரிட்டது. இவர்கள் எரித்ததில் பலாமரம் கூட தப்பவில்லை. நிறைய காய்களைச் சுமந்து நின்ற பலாமரத்தைச் சுற்றிப் போடப்பட்ட வேலியும் காய்களும் கருகிக் கிடந்தன. கடைசி நேரத்தில் போலீஸ் வந்து விரட்டியதால், போகிற போக்கில் ஒரு வீட்டுக் கூரையில் வைத்துவிட்டுப் போன நெருப்பு மேலும் பரவாமல் அணைக்கப்பட்டிருந்த அடையாளத்தைக் காணக் கூடியதாக இருந்தது.

சென்னையில் பணியாற்றும் கணேசன் என்பவருடைய செங்கற் களால் கட்டப்பட்ட வீடும் தாக்கு தலுக்கு உள்ளாகியிருந்தது. சன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு தூள் தூளாகச் சிதறியிருந்தன. கண்ணாடியை உடைத்த கல்லும் அருகிலேயே கிடந்ததைக் காண முடிந்தது. கணேசனுடைய தம்பி மனைவி தேவி. மகளிர் சுயநிதிக் குழுத் தலைவி. சுயநிதிக் குழுவின் தொகை ரூ.10 ஆயிரமும் தன் னுடைய நான்கு சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

கூலித் தொழிலாளியான கலை வாணன், (வயது 45) தலையில் வெட்டுக் காயத்துடன் கட்டுப் போடப்பட்டு காட்சி தந்தார். 20 பேர் கொண்ட கும்பல் விரட்டி வந்ததாகவும், மற்றவர்கள் ஓடிவிட்டதாகவும், தான் மட்டும் அகப்பட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தாக்கிய அதிர்ச்சி காரணமாக நாக்கு லேசாய் துண்டிக்கப்பட்டு பேச்சு தடுமாறியது.

சாதி, மத, இன வெறித் தாக்குதல் நடத்தப்பெறும் எந்த இடத்திலும் வெறியாட்டத்திற்கு முதல் இலக்காகிறவர்கள் பெண்கள்தாம். யுத்தம், ஆக்கிரமிப்பு, தாக்குதல் என வடிவம் வேறுபட்டாலும் ராணுவம், மதம், இனம், சாதிக் குழுக்களின் முதல் இலக்கு பெண்கள். தோல்வியடைந்த அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தை அடிமைச் சமூகமாய்க் கருதி, பெண்கள் மீது அனைத்து வன்முறைகளையும் நிகழ்த்த உரிமை கொண்டோராக மேலாண்மை சக்திகள் எண்ணிக் கொள்கிறார்கள். பாலியல் வன்முறையும் பெண் சித்திரவதைகளும் அவர்களின் இயல்பாய் அக்கணத்தில் விரிவடையும். இவ்வகைக் கொடூரக் காட்சி கட்டையன் தெருவிலும் நடந்தது. ஆண்கள் முன்னிலையில் பேசத் தயங்கிய சில பெண்கள், உண்மை அறியும் குழுவை ஒருங்கிணைத்துச் சென்ற பேராசிரியர் சரசுவதியைத் தனியாக அழைத்து, “தாய் மாதிரி இருக்கீங்க, ஒங்ககிட்ட சொல்றதுக்கென்னம்மா -? ஊருக்குள்ள நொழஞ்ச ஆம்பளைங்க, ஜட்டியைக் கழட்டி தலமேல போட்டுக்கிட்டு, முன்பக்க வேட்டியை விரிச்சி விலக்கிக் காட்டி, வாங்கடி, வாங்கடின்னு கூப்பிட்டாங்கம்மா. நாங்க அப்படியே கூசிக் குறுகிப் போனோம்மா!” என்றார்கள்.

இடைகழியூர்

மரக்காணம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இடைகழியூர். அங்கு கழிக்குப்பம் அம்மச்சியம்மன் கோயில் தெருவில் இரு வீடுகள் எரிக்கப்பட்டு சாம்பலாகிக் கிடந்தன.

மணிமேகலை, அவருடைய மகன் பார்த்திபன், மருமகள் காஞ்சனா. மகனுக்கு மூன்று குழந்தைகள். அந்த விதவைத் தாய், மகன் இருவரது வீடுகளும் கொளுத்தப்பட்டிருந்தன. மகனும், மருமகள் காஞ்சனாவும் தவணை முறையில் வாங்கியிருந்த கிரைண்டர், டி.வி., டி.வி.டி. பிளேயர், மின்விசிறி என இரண்டு லட்சம் பெறுமானப் பொருட்கள் எரிந்து போயிருந்தன. எட்டு சவரன் நகையைக் காணவில்லை எனவும் தெரிவித்தார்கள். பிரதான சாலையில் முதலில் இருப்பது ஒரு தலித் அல்லாதவர் வீடு. அந்த வீடு தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. அதற்கடுத்து இருந்த தலித் வீடுகள் குறிவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தன.

கொளுத்தப்பட்ட வீடுகளுக்கு எதிரில் ஒரு மேல்நிலை குடிநீர்த் தொட்டி உள்ளது. தண்ணீரை எடுத்து தீயை அணைத்து விடுவார்கள் என்பதற்காக தொட்டியிலிருந்து தண்ணீர் பிடிக்கும் குழாயை வெட்டிவிட்டிருக்கிறார்கள்.

தீ வைப்பு அடுத்தடுத்து இருந்த தலித் வீடுகள் மீதும் நடந்திருக்கும். ஆனால் நிறையப் பேர் திரண்டு வந்துவிட்டதால், தாக்கிய கும்பல் எதிர்கொள்ள முடியாமல் திரும்பியிருக்கிறது.

கூனிமேடு

கூனிமேடு பகுதியிலுள்ள பள்ளிவாசல் அருகில் ஒரு சுற்றுச் சுவர், விழாவுக்கு வந்தவர்களின் வாகனம் மோதி இடிக்கப்பட்டிருந்தது. பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடத்துக்குள் மது பாட்டில்கள் வீசப்பட்டதாகத் தெரிவித்தார்கள். அருகிலுள்ள கடைகள் தாக்கப் பட்டிருந்தன. மகளிர் அரபிப் பாடசாலையில் பயின்று கொண் டிருந்த பெண்கள் மீதும் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தினர். பெண்கள் பயந்து சிதறி ஓடியதைப் பார்த்த அப்பகுதியிலுள்ள பொது மக்கள், முஸ்லிம்கள், வன்னியர்கள், தலித்துகள், மீனவர்கள் என்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கலவரக்காரர்களை எதிர்த்து விரட்டியடித்திருக்கிறார்கள். தாக்கியவர்கள் எல்லோரும் குடிபோதையில் இருந்ததாகவும், அரைமணி நேரம் கலாட்டா நீடித்ததாகவும், இந்திய தேசிய முஸ்லிம் லீக்கின் கூனிமேடு பகுதி செயலர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

மாமல்லபுரம் நோக்கி வாகனத்தில் பயணித்த பா.ம.கவைச் சேர்ந்த இருவர் அடித்துக்கொல்லப் பட்டதாகவும் அக்கொலை பற்றி சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென ராமதாஸ் அறிக்கை தந்திருந்தார். அது தொடர்பாக விசாரித்தபோது, மரக்காணம் கலவரப் பகுதியை நெருங்கவிடாமல் வாகனத்தில் வந்தவர்களை காவல்துறை விரட்டியடித்தபோது, ஒரு வேனின் பின் பகுதி திறந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக மக்கள் தெரிவித்தார்கள்.

இது தொடர்பில் பா.ம.கவைச் சேர்ந்தவர்களை விசாரித்தறியலாம் என்று தாக்குதலுக்குள்ளான கட்டையன் தெருவிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள அகரம் என்ற ஊரிலிருக்கும் பா.ம.க. ஒன்றியச் செயலாளர் சேது என்பவரைச் சந்திக்கச் சென்றோம். அவர் ஊராட்சி ஒன்றியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார்.

ஏப்ரல் 25ஆம் தேதி தலித் மக்கள் மீது நடந்த தாக்குதல் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்றும், மதியம் இரண்டரை மணி வரை சேது வீட்டில் இருந்ததாகவும், இரண்டரை மணிக்குமேல் இறால் பண்ணை மீன்களுக்கு உணவு வாங்கவும், பழுதான இயந்திரப் பாகங்களை வாங்கி வருவதாகவும் கூறிச் சென்றதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்பது தனக்குத் தெரியவில்லை எனவும் அவருடைய மனைவி தெரிவித்தார்.

ஒருவாரம் கழித்து மரணமடைந்த இருவரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் எனவும், அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது எனவும் காவல்துறை அறிவித்தது.

ராமதாஸ் அனைத்துச் சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தை நடத்தினார். தமது மேல்நிலையினைக் கூட்டாகப் பேணிக்கொள்ளும் முன்திட்டமிடல் இது. மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தேவர் பேரவை, கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை, கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம், முத்தரையர் கட்சிகளைச் சேர்ந்தோர் வெளிப்படையாகக் கலந்துகொண்டு தலித்துகளுக்கு எதிராகச் சூளுரைத்தார்கள். தம்மினும் கீழானவராய் எண்ணுகிற சாதியினரை ஒடுக்கி வைப்பதற்காக இவர்கள் ஒன்றிணைந்தார்கள்.

‘மழை நீர் மண்ணின் நிறம் கொள்வது போல் நமது இரு நெஞ்சங்களும் அன்பில் கலந்தன’ என்ற முந்தைய மூத்த தமிழ்ப் பண்பாட்டையே, தருமபுரி நத்தம்சேரி இளவரசன் என்ற மாணவரும், செல்லங்கொட்டாய் திவ்யாவும் வழுவாமல் கடைப் பிடித்தனர். கற்பு போன்ற தமிழ் ஒழுக்க மதிப்பீடுகளில் எகிறிய பண்பாட்டுக் காவலர்களால், காதல் போன்ற இயல்பூக்க உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கற்பு, காதல் போன்ற அனைத்து உணர்வு நிலை மதிப்பீடுகளும் சாதிக்குட்பட்டவை. சாதிக்குள் திருமணம், சாதிக்குள் கற்போடு வாழுதல், சாதிக்குள் காதல் செய்தல் என்பன அந்தக் கலாச்சாரத்தின் எல்லைகள். சாதி தாண்டி ஒரு துளிரும் துளிர்க்கக்கூடாது. சாதி கடந்து ஒரு காடும் பூக்கக் கூடாது.

“கடந்த ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் வன்னிய குலப் பெண்கள் இருபது பேர் தாழ்த் தப்பட்ட சாதியினரால் காதல் நாடகத்துக்கு இரையாகி விரட்டப் பட்டிருக்கிறார்கள்,” என்று பா.ம.க. சட்டமன்றத் தலைவர் காடுவெட்டி குரு கோபாவேசப்பட்டார்.

“வன்னிய குலப் பெண்கள் கலப்புத் திருமணம் செய்தால் அவர்கள் கையைக் காலை வெட்ட வேண்டும்; யாராவது நம்ம சாதிப் பெண்களுக்கு வேற சாதியில் திருமணம் செய்து வைத்தால் தொலைத்துப் போடுவேன்.”

மாமல்லபுர மாநாட்டில், ராமதாஸை வைத்துக் கொண்டு சென்ற ஆண்டு காடுவெட்டி குரு பேசியது இது.

2012 அக்டோபர் 14இல் கோவையில் நடைபெற்ற கொங்கு வேளாளர் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் “கலப்புத் திருமணச் சட்டத்தை தடை செய்ய வேண்டும்” எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். மட்டுமல்ல, கூடியிருந்தோரை தீர்மானத் தை வாசித்து உறுதி ஏற்கச் செய்திருக்கிறார்கள்.

"நகரத்தார் சமூகத்துக்குரிய அடையாளங்கள் என சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டு கின்றனர். நேர்மை, ஆழமான பக்தி, சிக்கனம், அறக்கொடை, திட்டமிடல் போன்றவை அவை. இந்த அடையாளங்கள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடர வேண்டுமானால், நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறி கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை, நம் சமூகத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும்."

தன்னை தமிழ்ப் புலமைத்துவம் கொண்டவராக காட்டிக் கொள்கிற அரசியல்வாதி பழ. கருப்பையா, நகரத்தார் சமூகம் நடத்தும் ‘ஆச்சி’ இதழில் இப்படி வெளிப் படையாகவே எழுதினார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறை என்று வருகிறபோது எந்த அரசியல்வாதியும் விற்பன்னர்களும் ஒன்றாகவேமுகம் காட்டிக்கொள்வார்கள். தனக்குள் மறைத்து வைத்திருக்கும் உண்மையான முகத்தை தானே கிழித்துக்காட்டிக் கொள் கிறார்கள். இதயத்துக்குள் இருக்கும் சாதி உணர்வை அப்புறப்படுத்துவதற்குப்பதிலாக தலித் மக்களைஅப்புறப்படுத்துவதில் தமக்குள் ஒன்றாய் இணை கிறார்கள். இதன் கொடூர முகமே மரக்காணத்தில் வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இழப்பீடு வரவேற்புக்குரியது என்ற போதும், அம்மக்களின் வாழ் வாதாரம் நிரந்தரமாக்கப் படவேண்டும்.

உப்பு வாரியம் நடுவண் அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. மரக்காணம் காலனி மக்களுக்கு பிரதானத் தொழில் உப்பள வேலைகளே. உப்பளங் களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே மாதம் வரை ஐந்து மாதங்களுக்குத்தான் வேலை. அவர் களில் எவரும் உப்பள ஒப்பந்தக் காரர்கள் இல்லை. பெரும்பாலும் சாதி இந்துக்களே உப்பள உரிமை யாளர்கள். தலித் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த, அரசு, அந்தப் பகுதியில் வேலை வாய்ப்பு தரும் தொழில்களை, தொழிற்சாலைகளை உருவாக்கி ஊக்குவிக்க வேண்டும்.

வழக்கமாய் வயலைக் கண்ணும் கருத்துமாய் காத்தும், மரம் செடி கொடிகளை நெஞ்சில் வைத்தும் வளர்த்து வருபவர்கள், ஒரு பலா மரத்துக்கும் வேலி போட்டு பாது காப்பவர்கள், காடுகளை அழிக்க வேண்டும் என்று நினைக்க மாட் டார்கள். ஆனால் கிழக்குக் கடற் கரைச் சாலையிலிருந்து தங்கள் குடியிருப்பை மறைத்து நிற்கும் உயர்ந்த தைல மரக் காடுகளும் முந்திரிக் காடுகளும் அகற்றப்பட வேண்டும் என்கிறார்கள். சாதி வெறியர்கள் மறைந்து வந்து தாக்குதல் தொடுக்க அவை பாதுகாப்பாக அமைகின்றன. குடியிருப்பின் அருகிலிருக்கும் காடுகள், சமூக விரோதச் சக்திகளுக்குப் புகலிடமாக மாறி, தங்கள் பாதுகாப்பைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக மக்கள் குறிப்பாக உணருகிறார்கள். எனவே காடுகள், சமூக விரோதச் சக்திகளின் கூடாரமாக மாறாமல் இருப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து, மக்களின்

பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். கூனிமேடு பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து, தாக்கியவர்களை விரட்டியடித்தார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. இத்தகைய சமூக நல்லிணக்கத்துக்கான முன் னெடுப்புகளை அனைத்துத் தரப் பினரும், மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், இயக்கங்கள் மற்றும் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

2002ஆம் ஆண்டிலிருந்தே சமுதாய மோதல் வரலாறு கொண்ட பகுதி என்பதாலும், அண்மையில் தருமபுரி தாக்குதல் நடந்திருப்பதைக் கருத்தில் கொண்டும் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி, தாக்கு தல்களும் மோதல்களும் நிகழாமல் செயல்பட்டிருக்க வேண்டும். அன்று அந்தப் பகுதியில் போதுமான காவலர்கள் இல்லை என்பது, காவல் துறையின் மெத்தனப் போக்கையும், அலட்சிய அணுகுமுறையையும் காட்டுகிறது.

பா.ம.க. தலைமையை, கட்சியை தனிமைப்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மேற்கொண்ட முயற்சி போதுமான வெற்றியடையவில்லை. குறிப்பிட்ட சாதியில் இருக்கும் தமக்கான வாக்குகள் கைநழுவிப் போய்விடுமோ என்ற உதறல் அனைத்து இயக்கங்களிலும் நிலவுகிறது. “அவர்களைப் பெருந்தன்மையாக நடத்தவேண்டும்; வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்” என்கிறார் தி.மு.க தலைவர். மன்னித்து விடலாம் என்கிறது காங்கிரஸ் கட்சி.

அரசின் நடவடிக்கைகளிலும் தவறு உள்ளது. மரக்காணத்தில் தலித்துகள் மீதான தாக்குதல், மாமல்லபுரத்தில் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள், செயல்கள்- என அண்மையில் நிகழ்ந்தவை தொடர்பான வழக்குகளின் அடிப் படையில் கைது செய்தல் பிழையல்ல. ஆனால், பழைய வழக்குகளைத் தோண்டி எடுத்து கைது செய்வது ஒரு அராஜக நடவடிக்கை. கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி

கூடங்குளம் பகுதியில் தடையை மீறி உண்ணா நோன்பு இருக்க முயன்றதாக ராமதாஸ் மீது போலீஸார் பதிவு செய்த வழக்கைப் புதுப்பித் துள்ளார்கள். இதனை ராமதாஸின் மீதான நடவடிக்கையாக மட்டும் பார்க்க முடியாது. கூடங்குள மக்க ளின் நீண்ட நெடிய நியாயமான அமைதி வழிப் போராட்டத்துக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும். இதனை பா.ம.க. சாதகமாகப் பயன்படுத்தி கொள்வதற்கான முன்னெடுப்புகளில் தீவிரமாக இறங்கிவிட்டது.

தருமபுரியோ, மரக்காணமோ தனித் தீவுகளல்ல. ஆனால் தலித் மக்கள் வாழும் இடங்கள் புறக் கணிப்புக்கு ஆளாகி, வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட தனித்தீவுகளாக ஆகியுள்ளன. தென்மாவட்டங்களில் முக்குலத்தோர், மேற்கு மண்டலத்தில் கொங்கு வேளாளக்கவுண்டர்கள், வடமாவட்டங் களில் வன்னியர்கள்-இந்த தலித் தீவுகளில் அடிக்கடி படை யெடுப்பு நடத்தி அட்டூழியம் செய்வது வழக்கமாகியுள்ளது. ஈராயிரம் ஆண்டுகால சாதி வெக்கரிப்பு இவர்களுக்குள் ஓடிக் கொண் டிருக்கிறது. தமக்குக் கீழ் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே தலித் மக்கள் இருக்கவேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.

தலித் மக்கள் தொகையில் விகிதாச்சார அளவில்கூட முன் னேற்றம் நிகழவில்லை. வணிகம், தொழில், இட ஒதுக்கீட்டுப் பயன்கள் என இடைநிலைச் சாதிகள் பெற்றுள்ள வாய்ப்புகள் சாதியத் திமிரை மேலும் அதிகரிக்க வைத்து விட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் புதிய வாழ்நிலைகளைக் கண்டறியும் முண்டுதலில் உள்ளனர். அதற்கான உரிமைகளை, அதிகாரத்தை அடைய அமைப்புகளை, இயக்கங்களைக் கண்டடைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த எழுச்சியை, இதனூடாக கலாச்சாரத்தில் உருவெடுக்கும் மாறுதல்களை ஆதிக்கச் சாதிகளால், குறிப்பாக இப்போது உயர்நிலை பெற்றிருக் கும் சூத்திர சாதிகளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பெரிய அநியாயம் நிகழ்ந்துவிட்டது போல் தலித்துகளின் வாழ்வைச் சூறையாட முற்படுகிறார்கள். தருமபுரியும் மரக்காணமும் நிகழ்கால ரத்த சாட்சியங்களே. சூத்திரராய் தம்மைக் கருதும், உதட்டளவிலேனும் அதை உச்சரிக்கும் திராவிட இயக்கங்கள், தமிழ்த் தேசியம் பேசுவோர் ஒவ்வொருவருமே தமக்குள்ளிருக்கும் சாதியுணர்வை தொட்டுப் பார்த்து, அடிக்கடி சுய சோதனை செய்து கொள்வது நல்லது. தாழ்த்தப்பட்டவர்களை விடுதலை செய்யாத சமூகத்திற்கு விடுதலை இல்லை.

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content