பாம்புகள்

கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், நாகம், பச்சைப் பாம்பு, தண்ணீர்ப் பாம்பு, கொரண்டிப் பூச்சி, மண்ணுள்ளி - பாம்புகள் விதவிதமானவை.

கண்ணாடிவிரியன், வாலைச் சுழற்றிச் சுழற்றி மனிதனை அடிக்கும். பச்சைப் பாம்பு கண்மீது பாய்ந்து கொத்திப் பிடுங்கும்.

இலை மறைவில், புதர் இடுக்கில், பாதை ஓரத்தில் மக்களைத் தாக்குவதற்காக எப்பொழுதும் காத்திருக்கும் இவை சூழலுக்கேற்ற
நிறத்தில் வாழும்.

மண்ணில் உருளும் மின்னல்போல் உடல்; கறை படிந்த சிறு நிலாபோல் காற்றில் ஆடும் படம் - இந்த 'அழகு' வேறு யாருக்கும் வருவதில்லை.

இலக்கியத்தின் எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் பாம்புகளை காணலாம். கடந்த காலக் கவிதைகள் எல்லாம் பாம்புகளை ஆராதித்தே வந்திருக்கின்றன.

"புல் தரையில் ஓடும் தண்ணீர்போல், அது எவ்வளவு அமைதியாய் நழுவி ஒடுகிறது" - அதன் நடைக்கு ஒரு கவிஞன் நலுங்கு வைத்தான்.

"பாம்புகள் நல்லவை. நாம் அவைகளை ஒன்றும் செய்யாத வரை அவை நம்மை ஒன்றும் செய்வதில்லை” மதவாதிகள் அதன் குணத்திற்கு பொட்டு வைத்தார்கள். இவர்கள் பாம்பின் சுதந்திரத்தை வலியுறுத்துகிறார்கள்.

உலை வைக்கும் அடுப்பங்கரையில், தானியப் பட்டறையில் அடுக்குப் பானை இடுக்கில், வீட்டுப் பரணில், மச்சு வீட்டில், நமது படுக்கை ஓரத்தில், இங்கெல்லாம் அது சுதந்திரமாக வாழ உரிமையுண்டு. அந்தச் சுதந்திரம் பாதிக்காதவரை அது நம்மைத் தீண்டாத என்கிறார்கள்.

எங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சுதந்திரமாக வாழ இந்தப் பாம்புகள் உரிமை கேட்கின்றன.

பாம்புகளின் சுதந்திரமே மக்களைப் பயத்தில் வைத்திருப்பது தான்.

பாம்புகள் தெய்வ சக்தி கொண்டவை! புற்றுக்குப் பால் வார்ப்போம். அவை நம்மை ஒன்றுமே செய்வதில்லை என்று மக்கள் நம்புகிறார்கள். விஷப் பைகள் உள்ளடங்கி இருப்பதால் அதன் பளளப்பில் மயங்கிப் போகிறார்கள்.

அது வாழும் இடத்தில் வறுத்த உளுந்தின் வாசனை வரும். முட்டைகளும் குட்டிகளுமாய் வாழும் பொந்தில் கதகதப்பான வெக்கை வெளியே வரும்.

அதன் இருப்பை, நடமாட்டத்தை, ஒரு பாம்புப் பிடாரன், ஒரு விவசாயி, ஒரு மாட்டுக்காரப் பையன், ஒரு தொழிலாளி எளிதாகக் கண்டு பிடித்துவிடுவான்.

ஊரெல்லாம் பாம்புகள் இருப்பதில்லை. ஊருக்கு ஓரிரு பாம்புகளே இருக்கின்றன.

'பாம்பைக் கண்டு படையும் நடுங்கும்' என்பதால், ஒவ்வொருவரும் பாம்பாக ஆக ஆசைப்படுகிறார்கள்.

சில பாம்புகள் அடித்தாலும் சாவதில்லை; காற்றைக் குடித்தே உயிர்பெற்று விடுகின்றன.

மண்ணுள்ளிப் பாம்பை, நெருப்பில் போட்டு எரித்தால் தவிர சாவதில்லை. இந்தப் பாம்புகள் -

சைக்கிளில் போன பையன விரட்டி விரட்டி கடித்த கதை, விறகொடிக்கப் போன பாட்டியைக் கொன்ற கதை -

அடுப்புச் சாம்பல் அள்ளப் போன தங்கையை அந்தக் கதகதப்பில் படுத்துக்கொண்டே கடித்த கதை -

உழவுக் காட்டில் உரக் குழியைத் தோண்டிய ஒரு விவசாயியை படக்கென்று ஒரு போடு போட்ட கதை -

நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒவ்வொரு நிமிடமும் மண்ணோடு போராடுகிறவர்கள் இந்தப் பாம்புகளால் கடிபட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

கையில் கோலெடுத்தால் தவிர, இவை ஒழியாது -

எங்கே புதர் இருக்கிறதோ, எங்கே குப்பையும் கூளமும் உண்டோ, எங்கே மக்கிப்போன செத்தை செடிகள் கிடக்குமோ, அங்கே பாம்புகள் வாழுகின்றன; பல்கிப் பெருகுகின்றன.

புதர் ஒழிக்கப்படாமல், செத்தை செடி விலக்கப்படாமல் பாம்புகளை ஒழிக்க முடியாது. கோடரியும், மண்வெட்டியும் கைக்கொள்ளாமல் அது முடியாது.

- சூரியதீபன்
- மனஓசை செப்டம்பர்-1984

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்