முத்தையா முரளிதரன்... விஜய் சேதுபதி... சில எதிர்வினைகள்...

23-10-2020 இந்து தமிழ் நாளிதழில் வெளியான எனது எதிர்வினை இங்கு முழுமையாக.


அன்பு நண்பருக்கு, இன்றைய இந்து தமிழ் நாளிதழில் தங்களின் ஜனநாயகத்திற்கான குரல் ஒரு சார்பாக எழுந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவது என்னுடைய கடமை. "முத்தையா முரளிதரன மலையகத்தை சாராத ஈழத்தமிழராகவோ அந்தப் படத்தை லைகா தயாரித்திருந்தால் இந்த எதிர்ப்பு எழுந்திருக்காது என்றும் சொல்லப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளீர்கள். முத்தையா முரளிதரன் என்னவாக இருந்தார் என்பதில் இருந்துதான் மதிப்பீடு உருவாக வேண்டுமே தவிர, என்னவாக இருந்திருக்க வேண்டும் என்ற புனைவிலிருந்து மதிப்பீடு செய்யக்கூடாது. இதற்கான சான்று நான் மேலே தங்களுக்கு அனுப்பியுள்ள அவருடைய நேர்காணல். "அவர் கடந்த காலத்தில் இலங்கை போர் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களையோ, அரசின் மொழியிலோ கூடப் பேசியிருக்கலாம்" என்று எளிதாக கடந்து போகிறீர்கள்: "அவர் ஒரு விளையாட்டு வீரர்: அரசியலாளர் அல்ல" என்று ஒட்டு சுவர் வைக்கிறீர்கள். ஒருவர் என்னவாக சமூகப் பாத்திரம் வகித்தாலும், அந்தப் பாத்திரத்திற்கு சில எண்ணங்கள் கருத்துக்கள் உள்ளன: அவைகளை அந்தப் பாத்திரம் தவிர்க்கமுடியாமல் வெளிப்படுத்தி தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் என்பதை முத்தையா முரளிதரன் கருத்து வழிபாடுகள் நிரூபித்துள்ளன. முத்தையா முரளிதரன் என்ற சமூக பாத்திரம் சிங்களப் பேரினவாத ஆதரவு மனோநிலை கொண்டதாகத்தான் வெளிப்படடுள்ளது. தமிழனாக அல்ல என்ற எதார்த்தத்தில் இருந்து தான் நாம் காண வேண்டும் ." அவர் எந்த உயரத்துக்கு போனாலும் தோட்டத்து பொடியன் என்ற அடையாளம் மட்டும் இலங்கைத் தமிழர்களிடையே மாறவில்லை; இதற்கு காரணம் சாதிய வர்க்க மனோபாவம் தான் என்று குறிப்பிடுகிறீர்கள்: இங்கே மலையகத் தமிழர்கள் சிங்களவர்களால் ஒவ்வொரு காலகட்டத்திலும் வேட்டையாடப்பட்ட போது, வன்னியிலும் வடக்கிலும் தான் குடியேறினார்கள்: அவர்களை அரவணைத்து தம்முடையவர்களாக ஆக்கிக் கொண்டனர் என்ற உண்மையை புறக்கணிக்கக் கூடாது. இதில் சாதிய வர்க்க மனோபாவம் பாவிக்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் இனவெறி தேசியத்திற்கு எதிராக தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய அரவணைப்பினை புறக்கணிக்க முடியாது. அதே காலத்தில் மலையக தமிழர்களின் புவியியல் அமைவிடம் முக்கியமானது சுட்டிக்காட்டப்பட வேண்டியது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரே மொழி பேசும் ஒரு தொடர்ச்சியில் அமைந்ததா ஈழதேசம் எழுதினார்கள் முன்னிறுத்தி ஆனால் புவியியல் அமைப்பில் மலையகம்தென்னிலங்கையின மையத்தில் அமைந்துள்ளது. அதனையும் கடந்து தமிழீழ விடுதலை என்பது வடக்கு கிழக்கு பிரதேசத்தை உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல், மலையகத் தமிழர்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்று குரல் கொடுத்துப்பணியாற்றியது ஈரோஸ் இயக்கம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. "தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழகத்தின் அசலான சாதிய பிரச்சனைகளில் மௌனம் சாதிப்பது ஏன்" என்று தாங்கள் எழுப்பிய கேள்வி நியாயமானது. இங்கே ஈழத்தமிழர் இனப்படுகொலைக்காக குரல் கொடுப்போரிடம் இந்த அளவு சாதீய எதிர்ப்புப் போர்க்குணத்தை காண முடியவில்லை என்ற தங்கள் விமர்சனம் சரியானது. அதையும் முத்தையா முரளிதரனுக்கு சார்பாக வளைத்து கொண்டு போவதுதான் பொருந்தாமல் நிற்கிறது. ஒரு சரியான விமர்சனத்தை, மற்றொன்றுக்கு சார்பான துணைச்சுவராக நிற்க வைப்பதின் போதாமை வெளிப்படுகிறது.

"இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போர் நடத்திய முன்னாள் போராளிகள் ஜனநாயக பார்வைக்குத் திரும்பி விட்டனர்" என்று முத்தாய்ப்பாக வைக்கிறீர்கள். ஆனால் ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்காலில் ரத்தக்கறை படிந்த சுவடுகள் இன்னும் ஈரம் உலராமல் உள்ளன என்பதை அவர்களும் ஏற்பார்கள்: தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் எனக் கருதுகிறேன்.

- பா.செயப்பிரகாசம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை