தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி வரலாறு

பகிர் / Share:

முன்னணி துவக்கம் காலச்சுவடு இதழ் நடத்திய, 2000-த்தில் ‘தமிழ் இனி மாநாடு’ சென்னையில் மூன்று நாட்கள் நிகழ்வுற்ற போது, உலகெங்குமிருந்து தமிழ் ...

முன்னணி துவக்கம்

காலச்சுவடு இதழ் நடத்திய, 2000-த்தில் ‘தமிழ் இனி மாநாடு’ சென்னையில் மூன்று நாட்கள் நிகழ்வுற்ற போது, உலகெங்குமிருந்து தமிழ் ஆய்வாளர்கள், படைப்பாளிகள் பங்கேற்று பதிவுகள் செய்தனர். இரண்டாம் நாள் அரங்கில் மதிய உணவுக்குப்பின் நடைபெற்ற அமர்வில் இராசேந்திரசோழனும் பா.செயப்பிரகாசமும் ‘மார்க்சிய அழகியல்’ என்னும் தலைப்பில் கட்டுரை படித்தார்கள் .

அதனைத் தொடர்ந்து ‘முற்போக்கு கலை இலக்கயத்தளத்தில்’ தமக்கென ஒரு அமைப்பு உருவாக்கிடும் அவசியம் குறித்து அவர்களுக்குள் உரையாடல் நிகழ்கிறது. இராசேந்திரசோழன், இன்குலாப், ஓவியர் புகழேந்தி, ஜெயந்தன், புகழேந்தி தங்கராஜ் போன்ற சிலர் கூடிப் பேசினார்கள். ‘தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி’ எனப் பெயர் வைக்கலாம் எனக் கவிஞர் இன்குலாப் தெரிவித்தார். இராசேந்திரசோழன் அமைப்பாளர். சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்) செயலாளர். இன்குலாப், ஜெயந்தன், ஓவியர் சந்தானம், ஓவியர் புகழேந்தி போன்ற உறுப்பினர்களுடன். தமிழினம், மொழி, பண்பாட்டுத் துறைகளில் செயற்படுதல் என்னும் குறிக்கோளுடன் 2000-ல் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி உதயமாகியது.

அமைப்பு கிளைகள்

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் கிளை என தமிழகத்தின் வேறு பகுதிகளில் தோற்றுவிக்கப்படவில்லை. எனினும் அபூர்வமான நிகழ்வு போல், வேலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் கவிஞர் ந.சுப்புலட்சுமி தலைமையில் புதிய கிளை தோற்றுவிக்கப்பட்டது. தோழர் நா.சுப்புலட்சுமி தலைமையேற்க, தோழர்கள் இன்குலாப், இராசேந்திரசோழன் கிளை திறப்பு விழா உரையாற்றினார்கள்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் உதயம் முதலாய் மேற்கொண்ட அனைத்துச் செயல்படுதல்களும், பின்னரான காரியங்களும் இராசேந்திரசோழன், இன்குலாப், பா.செயப்பிரகாசம் என மூவரின் பங்களிப்பினால் நிறைவேறின என்பது குறிக்கப்பட வேண்டியதாகும்.

அமைப்பின் முன்னெடுப்புகள்

2000

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தயாரித்து இயக்கிய, ‘காற்றுக்கென்ன வேலி’ படம் தணிக்கை அலுவலகத்தில் பிரச்சனையானது. தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் முதற் போராட்டம் ‘காற்றுக்கென்ன வேலி’ திரைப்படத் தணிக்கையை எதிர்த்து அமைந்தது; ஈழப்போரில் காயமுற்று தமிழகக் கடற்கரையில் வந்தடையும் அகதிகளுக்கு, நாகப்பட்டிணத்திலுள்ள ”மகாத்மா காந்தி மருத்துவமனையில்” மனித நேய மருத்துவரான சுபாஷ் சந்திரபோஸ் உதவி புரிவதாகக் கதை. ஈழத்தமிருக்கு உதவிக்கரம் நீட்டுவதாகப் பாவலா பண்ணினாலும், அது காங்கிரஸ், பா.ச.க என எந்தப்பெயரிலான நடுவணரசாகவும் இருப்பினும், வாய் கருப்பட்டி, கை கருணைக்கிழங்கு தான் (பேச்சு கருப்பட்டியாய் இனித்தாலும், காரியம் அத்தனையும் கருணைக்கிழங்காய் அரிப்பெடுக்க வைத்து அலையக்குலையச் செய்யும்). தமிழரைப் பகையாளியாய்ப் பார்ப்பது நடுவணரசுக்கு உடன்பாடான கொள்கை. உடன்பாடற்ற முரணான கொள்கைக்குத் தணிக்கைத்துறை எவ்வாறு ஒப்புதல் தரும்.

தணிக்கைத்துறையின் சூழ்ச்சியைத் திரைப்பட வர்த்தக அரங்க முற்றத்தில் 2000 செப்டம்பரில் முன்னணியின் செயலர் என்ற வகையில் பா.செயப்பிரகாசம் தலைமையேற்க, பாரதிராஜா, பாக்யராஜ், ஆர்.சி.சக்தி, சேகர் போன்ற திரைத்துறை இயக்குநர்கள், இன்குலாப், மு.மேத்தா போன்ற இலக்கியவாதிகள் பங்கேற்ற கண்டனக்கூட்டம், நடைபெற்றது. அன்று மாலையே சென்னைக் கடற்கரை காந்தி சிலையின் பின்புறம் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அனுமதிக்காவிடினும் தடையை மீறி நடத்துவதென தமிழ்ப் படைப்பாளிகளும் திரைப் படைப்பாளிகளும் இணைந்து தீர்மானித்தனர். காவல்துறை அனுமதிக்காதென்பது அனைவரும் முன்னக்கூட்டி அறிந்ததுதான்; தடுத்துப் பார்த்தும் பாரதிராஜா போன்ற திரைப்படைப்பாளிகள் உரையாற்றியதைக் காவல்துறையால் ஏதும் செய்யமுடியவில்லை.


2001

2001-இல் குஜராத்தில் நில நடுக்கம். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு. சொந்த மண்ணில் அகதிகளாய் அலைக்கழிப்பு. வலியும் துயரமும் நிறைந்த வாழ்வை நேரில் கண்டு ஓவியங்களாய் மீள எடுத்து வந்தார் ஓவியர் புகழேந்தி. ‘சிதைந்த கூடு’ – ஓவியக் கண்காட்சி தியாகராய நகரில் வெங்கட்ரமணா சாலையிலுள்ள தியாகராயர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஏற்பாடு செய்தது. முன்னணியினர் பலரும் பங்கேற்றனர்.







கருத்துச் சுதந்திரம் தனிமனிதரால், அரசால், அரசு நிறுவனங்களால் பாதிப்புக்குள்ளாகும் வேளையில் படைப்பாளிகள் முன்னணி கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

தமிழகத்தில் ஜெயலலிதா அரசின் கொடிய ஆட்சி கருத்துரிமைப் பறிப்புத் தாண்டவம் நடத்திக் கொண்டிருந்தது. கருத்துச் சுதந்திரப் பறிப்பை எதிர்த்துத் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி – கலைவாணர் அரங்கத்தின் முன்னிருந்த ஒரு அரங்கில் கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது; பேரா.கல்விமணி, எழுத்தாளர் அமரந்தா, இராசேந்திரசோழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரங்க மேடையில் பெப்சிகோலாவின் ‘அகோபினா (Aquafina)’ தண்ணீர்க் குடுவை வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களில் ஒரு இளைஞர் அந்தக் குடுவையில் ஒப்பப்பட்டிருந்த விளம்பரத்தாளை அகற்றி, மேடையில் மீண்டும் கொண்டுவந்து வைத்தார். இராசேந்திரசோழன் உரையில் அதுபற்றிய குறிப்பு இருந்தது. ‘ஆக்கிரமிப்பு, உரிமைப்பறிப்பு என்பதெல்லாம் அரூபமாய் எங்கோ நடப்பதில்லை. நம் கண்ணெதிரில் நம் வாழ்வில் அந்தத் தாக்குதல் நடக்கிறது. அந்த நண்பர் விளம்பரத்தாளினைக் கிழித்தெறிந்தது மூலம், போர்க்குணம் நம் ஒவ்வொரு நகர்விலும் செயலிலும் இயல்பான ஒன்றாய் ஆகியிருக்க வேண்டுமென்பதை நமக்கு உணர்த்துகிறது’ என்றார் இராசேந்திரநோழன்.


2007

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து ஓரங்குலமும் உயர்த்த மாட்டோம் என கேரளம் முறண்டு பிடித்துக் கொண்டிருந்தது; கேரள அரசு மட்டுமல்ல, அம்மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் இதில் ஒருமித்த குரலுடனும் கரங்களோடும் நின்றது மட்டுமல்லாமல், புதிய அணை கட்டியே தீருவோமெனவும் பிடிவாதமாய் நின்றார்கள். தமிழகத்தின் 5 மாவட்ட விவசாய மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தனர். கேரள அரசின் அடாவடித்தனத்தினைக் கண்டிக்கும் முகமாக 2007, மே 9-ஆம் நாள் மதுரையில் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்துவதென முடிவு செய்து முன்னெடுத்தார் பழ.நெடுமாறன். மதுரை தமுக்கம் மைதானத்தின் முன்புறம் நிற்கும் தமிழன்னை சிலையிலிருந்து ஒரு 500 மீட்டர் தொலைவிலிருந்தது முல்லை பெரியாறு பொதுப்பணித் துறை அலுவலகம். தமிழன்னை சிலையிலிருந்து நீதி கேட்பது பொருத்தப்பாடாக அமையுமெனக் கருதி முன்னெடுக்கப் பெற்ற போராட்டத்தினை இராசேந்திரசோழன் ஒருங்கிணைப்புச் செய்து, முழக்கங்கள் எழுப்பினார். பா.செயப்பிரகாசம், இராசேந்திரசோழன் பழ.நெடுமாறன் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு தல்லாகுளம் திடலருகிலிருந்த ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

மே 9, 2007 - மதுரை நகருக்கு ஒரு துயர நாளாக அமைந்தது. அன்றுதான் மதுரையிலிருந்து வெளியாகும் ’தினகரன் நாளிதழ்’ அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீக்கொளுத்திய கறுப்பு நாள். கருத்துச் சுதந்திரம் தீக்குளியலான அந்நாளில், அலுவலகப் பணியாளகள் மூவரும் உயிருடன் எரிந்து கருகினர். தமுக்கம் மைதானம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், சாலையில் அராஜகவாதிகளின் வாகனங்கள் அங்குமிங்குமாகப் பறந்த காட்சிக்கு போராட்டக்காரர்கள் சாட்சியானார்கள்.

இஸ்லாமிய கலாச்சாரம் - கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் படைப்பு குறித்த ஓர் உரையாடல் - 7 செப்டம்பர் 2007, வெள்ளி மாலை 6.00 மணி

இடம்: தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடம், எல்.எல்.ஏ பில்டிங், அண்ணாசாலை, சென்னை

தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

பங்கேற்பாளர்கள்:
  • சி.மகேந்திரன், தாமரை ஆசிரியர்
  • கவிஞர் இன்குலாப்
  • தோழியர் வ.கீதா
  • தோழியர் - டி. ஷெரீஃபா பேகம், ஸ்டெப்ஸ் புதுக்கோட்டை
  • எழுத்தாளர் அழகிய பெரியவன்
  • திரு.புனிதபாண்டியன், ஆசிரியர், தலித்முரசு
  • எழுத்தாளர் களந்தை பீர்முகமது
  • எழுத்தாளர் ஜாகிர்ராஜா
  • எழுத்தாலர் ஆதவன் தீட்சண்யா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
  • கவிஞர் மணிமுடி, தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம்
  • கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஆசிரியர், உயிர்மை
ஒருங்கிணைப்பு: தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி, சென்னை.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை வகித்து நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். அவர் தனது தலைமை உரையில்
ஹெச்.ஜி.ரசூல் மீது ஊர் விலக்கம், மத விலக்கம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இன்றைய அதிகாரமையங்களை நோக்கி அவரது படைப்பு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில் ஏன் வாப்பா இல்லை ஒரு ஆண் நபி..? என தன் மைலாஞ்சி கவிதை நூலில் எழுதியதற்காக ஏற்கெனவே நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார். இன்று தான் எழுதிய ஒரு கட்டுரைக்காக பழிவாங்கப்பட்டுள்ளார். அதிகாரங்களை கட்டமைத்து வைத்துள்ள ஜமாஅத் இத்தகையான மோசமான தீர்ப்பை வழங்கியுள்ளது என்றார்.


2008

ஈழத்தில் சிங்கள இனவெறி இராணுவம் நடத்தும் படுகொலைகளைக் கண்டித்து 24.10.2008-இல் தமிழகத் தலைநகர் மட்டுமன்று; தமிழகத்தின் பல நகரங்களிலும் அனைத்துக் கட்சியினரும் இணைந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழினப் பகைவர்களான காங்கிரஸ், பாரதிய சனதாக் கட்சிகள் பங்கேற்கவில்லை. அன்று பார்த்து பிற்பகலில் சென்னையில் பெருமழை கொட்டி முழக்கியது.

வாழ்வா? சாவா? என்ற புள்ளியில் ஈழப் போராளிகளும், தமிழரை இனவழிப்புச் செய்தே தீர்வது என்ற எல்லையில் சிங்களப் படைகளும் என யுத்தம் உச்சத்திலிருந்த காலம். மு.திருநாவுக்கரசின் “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள ராசதந்திரம்” என்னும் எட்டு பக்க சிறு வெளியீட்டைப் பத்தாயிரம் படிகள் அச்சிட்டு மனிதச் சங்கிலியில் கொட்டும் மழையில் விநியோகித்தோம்.


மு.திருநாவுக்கரசின் ”தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியவும்” என்னும் 32 பக்கச் சிறுநூல், ‘இந்திய சாத்தான் படை’ ஈழத்தில் குதித்து வெறியாட்டம் நடத்திய இரு ஆண்டுகளுக்கு முன்னர் 1985-ல் ஈழத்தில் வெளியாகியிருந்தது. இந்தியாவின் சூழ்ச்ச்சியை தெளிவாய் அம்பலபடுத்தியிருந்தது. 2008-ல் போர் உச்சம் கொண்டபோது இந்நூல் பரவலாய் தமிழ் வாசிப்புக்குக் கொண்டு செல்லப்பட வேண்டுமென்னும் சீரிய நோக்கில், பத்து ரூபாய் விலையில் மறு பதிப்புச் செய்து டிசம்பர் 2008-ல் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி விநியோகித்தது.

இவ்விரு வெளியீடுகளும் மறுபதிப்பாக வர வேண்டிய காலகட்டம் இது என்னும் தனது பெருவிருப்பை வெளிப்படுத்தி – எங்களுக்கு பிரான்சிலிருந்து கிறிஸ்டோபர் பிரான்சிஸ் என்ற கி.பி.அரவிந்தன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்ததோடு மட்டுமல்லாமல், வெளியீட்டுக்கு ஆகும் தொகையினையும் உதவியிருந்தார்.

குறிப்பாக தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியினர் ஈழத்தமிழர் பிரச்சினையின் பொருட்டு ஒருநாள் தொடர்முழக்கப் போராட்டம் நடத்துவோமென இராசேந்திரசோழன் யோசனை தெரிவித்தார். அதன்படி சென்னையில் சேப்பாக்கம் கிரிக்கெட் திடலின் முன்புறத்தில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தினோம்.

சிங்கள அரசுக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களை திரும்பப் பெற வேண்டும், சென்னையில் ஆர்ப்பாட்டம் - 13 அக்டோபர் 2008

ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகள் செய்து வரும் இந்திய அரசைக் கண்டித்து சென்னை, பூங்கா நகர், நினைவரங்கம் (மெமோரியல் கூடம்) அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. தமிழ்த் தெசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இவ்வார்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஒருங்கிணைத்தார். இவ்வார்ப்பாட்டத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த சோழன் நம்பியார், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் எழுத்தாளர் செயப்பிரகாசம், புலவர் புலமைப்பித்தன், ஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் ஓவியா, கவிஞர் தாமரை, வழக்கறிஞர்கள் அஜிதா, சேசுபாலன்ராஜா, எழுகதிர் இதழ் ஆசிரியர் அரு.கோபாலன், தஒவிஇ சென்னை மாவட்டச் செயலாளர் செய்யாளன், சட்டக் கல்லூரி மாணவர் அலை பாஸ்கர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2009

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு சனவரி 2010- இல் நடத்தப்பெறும் எனத் தமிழக முதல்வர் கருணாநிதி, 2009 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிவித்தார். ’உலகத் தமிழ் ஆராய்ச்சி அமைப்பின்’ தலைவரான நொபாரு கராஷிமா உலகத் தமிழ் மாநாட்டினை நடத்த கால அவகாசம் போதாதென, சனவரி 2011-இல் நடத்திக் கொள்ளலாமென மறுத்துரைத்தார். ஒப்புதல் அளிக்காததின் வழி, தன்னுடையவும் உலகத் தமிழாராய்ச்சி அமைப்பினுடையவும் தற்சார்பு நிலையை உறுதி செய்தார். சனவரி என்றால் சட்டப்பேரவைத் தேர்தல் வந்துவிடும் என்று வெளிப்படையாக சொன்ன முதல்வர் கருணாநிதி, ‘முதலாவது உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு’ எனப் பெயர் மாற்றினார் (உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டினை நடத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை).

‘முதலாவது உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு’ எனக் கருணாநிதி அறிவித்தவுடன் தமிழுணர்வும் சுயமரியாதையும் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் 23.09.2009 அன்று எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் அடங்கிய ஒரு ஆலோசனைக் கூட்டத்தினை நடத்திட அழைப்பு விடுக்கப்பட்டது.

அன்புடையீர் வணக்கம்,
மூன்று லட்சம் ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணிலேயே முள்வேலி முகாம்களுக்குள் வதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்று உரிமை பறிபோய் தமிழக விவசாயிகள் வறுமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கப்பற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி, அவர்களின் வாழ்வாதாரம் பறிபோய்க்கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில், தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடும் போக்கில் தமிழக முதல்வர் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதாக அறிவிப்புச் செய்திருப்பது, மனசாட்சி உள்ள கலை இலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ள இயலுமா?

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 27.09.2009 ஞாயிறு காலை 10.00 மணியளவில் சென்னை எழும்பூரிலுள்ள ’ இக்சா’ மையத்தில் நடைபெறும்.

தாங்கள் தவறாது கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மேலானஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- இராசேந்திரசோழன், அமைப்பாளர்
- சூரியதீபன், செயலாளர்

அறிக்கை எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது: கைபேசி, குறுந்தகவல் வழியாகவும் தெரிவிக்கப்பட்டது.

எதிர் வினையாற்றலுக்கான கலந்துரையாடல் கூட்டம் அது. 27.09.2009 அன்று சென்னை எழும்பூரிலுள்ள ‘இக்ஷா’ மைய நிருவாகத்தினரை மிரட்டி முன்பதிவு செய்யப்பட்ட அரங்கினை ரத்து செய்ய வைத்தது காவல்துறை.

மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவர் தோழர் ஹென்றி திபேன் ஷெனாய் நகரிலுள்ள மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் கூட்டத்தை நடத்த மாற்று ஏற்பாடு செய்து தந்தார். ‘இக்ஷா’ மையம் போலவே, ஷெனாய் நகர் மக்கள் கண்காணிப்பு அலுவலகத்தையும் காவல்துறையினர் சுற்றி வளைத்திருந்தனர்.

இக்கூட்டத்தில், எதிர் வினையாற்றலும் பணிக்காக அனைவருமிணைந்த ஒரு புதிய அமைப்பினைத் தொடங்க முடிவு செய்யப்பட்டு ‘தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர் கூட்டமைப்பு’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. கூட்டமைப்பில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக பேரா.சரசுவதி, இன்குலாப், இராசேந்திரசோழன், சூரியதீபன், பொன்.ஏழுமலை ஆகிய ஐவர் தேர்வு செய்யப்பட்டனர்.

27.09.2009 அன்று நான்கு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டமைப்பில் வைக்கப்பட்ட ஆலோசனையின்படி 04.10.2009 அன்று கோவையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பெற்றது. கோவை ஞானி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் என ஐம்பது பேர் பங்கேற்றனர். சென்னையிலிருந்து பேரா.சரசுவதி, சூரியதீபன், பொன்.ஏழுமலை ஆகியோர் சென்று கலந்து கொண்ட இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கண.குறிஞ்சி ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அக்டோபர் 10-ந் தேதி சென்னை மெமோரியல் ஹால் எதிரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தில் தவறாது பங்கேற்குமாறு படைப்பாளிகள், தமிழ் உணர்வாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“நடை பிணங்கள் மீதும், எலும்புக்கூடுகள் மீதும் நடக்க இருக்கிறது செம்மொழித் தமிழ் மாநாடு” என்ற இருபக்க துண்டறிக்கை 5000 படிகள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுதும் விநியோகம் செய்யப்பட்டது.

உலகெங்குமுள்ள தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் – எனும் அடிப்படையில், “பழி எனின் உலகுடன் பெறினும்” என்ற நான்கு பக்கக் கடிதம், ஆயிரம் படிகள் அச்சிடப்பட்டு உலகெங்குமுள்ள தமிழறிஞர்களுக்கு மட்டுமல்லாது, தமிழகத்திலுள்ள கலை இலக்கியவாதிகளுக்கும் (11.11.2009) அனுப்பி வைக்கப்பெற்றது. இக்கடிதம் தமிழறிஞர் ம.லெ.தங்கப்பா அவர்களால் ஆங்கில ஆக்கம் செய்யப்பட்டு, ஆங்கில ஆக்கம் நொபுரு காரஷிமா, ஜார்ஜ் ஆர்ட் (அமெரிக்கா), குரோ (பிரான்சு) போன்று பல நாடுகளிலுமுள்ள நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மின்னஞ்சல்வழி அனுப்பப்பட்டது.

2010

27.09.2009, 08.11.2009, 05.12.2009, 07.03.2010 என நான்குமுறை தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன. மூன்றாம் முறையாக தமிழ்த் தேசிய அமைப்புக்கள், கலை இலக்கிய அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் எனப் பலரும் கலந்துகொண்ட கூட்டம் பேரா.சரசுவதி இல்லத்தில் நடந்தது.

சனவரி 25, 2010 இந்தி எதிர்ப்பு ஈகியர் நாள்; சனவரி 29 முத்துக்குமார் ஓராண்டு நினைவு நாள் தொடர்பாக அமைப்புக்குள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களைச் செம்மொழி மாநாட்டு எதிர்ப்புக் கூட்டங்களாக மையப்படுத்தி நடத்தும் முக்கிய முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

கோவையில் 412 பக்கங்களில் தமிழ்க் கல்வி, தமிழர் நாகரிகம் – சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், கவிதைகள், நூலரங்கு நினைவுக் குறிப்புகள் எனத் தமிழறிஞர்களின் ஆய்வுத் தொகுப்பாகத் ‘தமிழ் மலர் 2010’ எனும் நூலைத் தனியோரு மனிதராய் அளப்பரிய முயற்சி எடுத்து ஞானி கொண்டு வந்தார். ‘தமிழ் மலர் 2010’ நூல் வெளியீடும், கருத்தரங்கும் 13.06.2010 அன்று கோவையில் நடைபெற்றது. அமைப்பின் சார்பில் இராசேந்திரசோழன், சூரியதீபன் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

2011

சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு எதிராக கண்டனக்கூட்டம் - 5 ஜூலை 2011, இக்சா அரங்கம், எழும்பூர்

கருத்துரை 
  • டாக்டர். வே.வசந்தி தேவி, முன்னாள் பல்கலை துணைவேந்தர்
  • பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம்
  • பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்
  • பேரா. ப.சிவக்குமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்
  • பேரா. அ.கருணானந்தம், சமச்சீர்க் கல்வி பாட நூல் உருவாக்கத்தில் பங்குபெற்றவர்
  • திரு. கன்.மோகன், மக்கள் சக்தி கட்சி
  • திரு. கோ.சுகுமாரன், மனித உரிமைகள் கூட்டமைப்பு, புதுச்சேரி
  • புலவர். கி. த.பச்சையப்பன், முன்னாள் தமிழாசிரியர் கழகத் தலைவர்
  • பேரா. மு.திருமாவளவன், மக்கள் விடுதலை இயக்கம்
  • எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
  • கவிஞர். இன்குலாப்
  • பேரா. இரத்தினசபாபதி
  • திரு. செல்வி, மக்கள்ஜனநாயகக் குடியரசுக் கட்சி
  • திரு. வழக்குரைஞர் ரஜினி, மதுரை
  • திரு. இனியன் சம்பத், தமிழ் தேசிய மக்கள் கட்சி
  • திரு. தமிழ்நேயன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
  • திரு. தடா ரஹீம்,  இந்திய தேசிய லீக்
  • முனைவர். அரணமுறுவல், உலகத் தமிழின முன்னேற்றக்  கழகம்
ஒரு குடிமைச் சமூகத்திற்கான கல்விக் கண்ணை குத்தி ஊனமாக்க முனைந்துள்ள அ.தி.மு.க. அரசு, ஒரு மாபெரும் அநீதியை மாணவர் சமூகத்திற்கு இழைத்துள்ளது. முடக்கி வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை திரும்பப் பெற முடியாமல், நீதிமன்றத்தை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். இச்சூழலில் 'சமச்சீர் கல்விக்கான கல்வியாளர்கள் குழு' எழும்பூர் இக்சா அரங்கத்தில் 5.7.2011 அன்று, சமச்சீர் கல்வி குறித்த கருத்தரங்கை ஒருங்கிணைத்தது.


கவிஞர் இன்குலாப்: “ஆட்சியாளர்கள் அதிகாரத்தை நேசிக்கும் அளவிற்கு மக்களை நேசிப்பதில்லை. ஒரு குலத்திற்கு ஒரு நீதி என குலக் கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தபோது அதை எதிர்த்தவர் பெரியார். அப்போது அந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்த காமராஜர் கடுமையாக எதிர்த்தார். வெளியே பெரியார் நடத்திய போராட்டம் ராஜாஜியை பதவியில் இருந்து இறக்கச் செய்தது. ஆனால், இன்று ஜெயலலிதா கொண்டு வரும் திட்டத்திற்கு ஆளும் கட்சிக்குள்ளும் எதிர்ப்பில்லை. மாறாக இதன் பின்னணியில் சோ, ராமகோபாலன் போன்றோர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியினரும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, தமிழ் உணர்வாளர்களின் வாயை அடைத்துவிட்டு, உடனடி வேலையாக சமச்சீர் கல்வியை தள்ளி வைக்கும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். அவர் இவ்வாறு செய்வது, ஈழப்படுகொலைக்கு நிகரான கல்விப் படுகொலையாகும்.''


இந்நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தைச் சேர்ந்த கன்.மோகன் வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமை வகித்து தொகுத்து வழங்கினார். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பில் தமிழ் நேயன், வழக்குரைஞர் ரஜினி, பேராசிரியர் திருமாவளவன், இனியன் சம்பத், மக்கள் சக்தி இயக்கத்தை சேர்ந்த சிவசங்கரன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர் அரணமுறுவல், கீ.த.பச்சையப்பன் ஆகியோர் பங்கேற்று, தங்களுடைய கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

மருத்துவர் பினாய்க் சென்னின் துணைவியார் எலிநாசன் மீதான பொய்வழக்கை திரும்பப்பெறு, 04-02-02011 அறிக்கை


கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content