போராளியும் மிருகமும்

கருணைமிக்க, பயம் என்றால் என்ன என்று அறியாத ஒரு வேட்டைக்காரன் இருந்தான். "இவ்வளவு அன்பான, இனிமையான கணவன் உலகில் வேறெங்கும் இல்லை. என்மீது அன்பைப் பொழிகிறார். நான் அவரை நேசிக்கிறேன், நேசிக்கிறேன். அப்படி நேசிக்கிறேன்” மனைவி பெருமையுடன் சொல்வாள்.

ஒரு நள்ளிரவில் வேட்டைக்காரன் வெகு நேரம் கழித்து தாமதமாக வந்தான். அன்புக்குரிய இல்லாளிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவன் ஒரு கொடிய காட்டு மிருகத்துடன் நீண்ட நேரம் போராடித் தப்பித்து வந்திருந்தான். திரும்பி வந்ததே அதிசயம். அன்றிலிருந்து எதையோ யோசிப்பதுபோல் எப்போதும் இறுக்கமாக இருந்தான். மனைவி எவ்வளவு அன்பைக் கொட்டியபோதும் பணிவிடைகள் செய்தபோதும் அவன் முன்புபோல் கலகலப்பாய் இல்லை. அன்பு செலுத்துவதே இல்லை. அவளும் சோகமும் மெளனமும் ஆகிப் போனாள்.

மீண்டும் ஒரு நாளிரவு வேட்டைக்காரன் தாமதமாக வந்தான். சந்தோஷ எக்களிப்புடன் மனைவியை வாரி அணைத்தான்; நடனமிட்டான்; உரக்கக் கத்தினான். "கண்ணே மகிழ்ச்சியாயிரு, நாம் எப்போதும் இன்பமாயிருப்போம்".

அவனுடைய காட்டுக் கத்தலைக்கேட்டு, அக்கம் பக்கமிருப்பவர்கள் எழுந்து ஓடிவந்து பார்த்தபோது, அவன் வீட்டு முற்றத்தில் ஒரு கொடிய மிருகம் கொன்று கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

- சீன உருவகக் கதை
- ஆங்கிலத்திலிருந்து: சூரியதீபன்
- மனஓசை, பிப்ரவரி 1985

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்